ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 22, 2005

சந்திரமுகி!

வலைப்பதிவில் எழுதி குவிக்கப்பட்டு அலுத்தும் விட்டது. 'சந்திரமுகி' பற்றி எழுதும் எந்த நோக்கமும் படம் பார்க்கும் வரை, பார்த்து முடிக்கும் வரை இல்லை. பார்த்த பின் படக்கதையில் சாத்தியமாகும் இரண்டு வாசிப்புகள் மூளையில் தாக்கிய பின்பே எழுத தோன்றியது.

மணி சித்திரத்தாழ் நான் பார்க்கவில்லை, பார்க்கும் வாய்ப்பும் இப்போதைக்கு இல்லாததால் மூலத்துடன் ஒப்பிட்டு பேச முடியவில்லை. எப்படியாயினும் மணி சித்திரத்தாழ் என்ற கதைச்சத்து மிகுந்த மலையாளப் படத்தின் தழுவல், (நெடு நாளைக்கு பிறகான)ரஜினி படம் என்ற வகையில் ரசிக உற்சாகத்திற்கான தீனி என்ற சிக்கலான ரெட்டை குதிரை போட்டியில் வாசு வெற்றி பெற்றிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

ஒரு சீரிய சினிமாவை பார்ப்பது போன்ற பார்வையில் பார்த்தால் முதல் பாதியில் பலவும், அடுத்த பாதியில் நோண்டி எடுத்து சிலவும் என்று பல சொதப்பல்களை சொல்ல முடியும். ஆனால் ஒரு ரஜினி படம் என்ற சட்டகத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் அர்த்தமிழந்து போவதுடன், சொல்பவரிடம்தான் பிரச்சனை (ஒரு ரஜினி படத்தை கூட பார்த்து அனுபவிக்க இயலாத இவர்கள் வேறு எதை சாதிக்க போகிறார்கள்) என்றும் தோன்றுகிறது.

தொடக்கமே மிஸ்டர் பரத் பாணியில் காண்ட்ராக்ட் விவகார சண்டையில் தொடங்கி ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து ரஜினியை விரைவிலேயே அறிமுகப்படுத்துகிறது. ரஜினி ஷூவில் தொடங்கி, காட்டப்படும் காட்சியில் அவர் காலை வைத்திருக்கும் நிலையில் என் காலை வைத்து பாலன்ஸ் செய்ய முயன்றேன், முடியவில்லை. வருடங்கள் காத்திருந்து, ரஜினியை பார்க்கும் அறிமுக ஸீன், ரஜினி ரசிகரின் உடலின் எல்லா திரவங்களின் அழுத்தத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தியேட்டரில் ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்தவுடனேயே எனக்கும் எக்குதப்பாக அழுத்தம் ஏறி தமிழகத்தில் இல்லாத விதியை நொந்தேன். ரஜினி காலை சுற்ற காற்றும் சுற்றி சறுகுகளை சுழற்ற, அவர் நிறுத்த எல்லாம் நிற்கிறது. சண்டையில் அறிவியல் விதிகள் மதிக்கப் படவில்லை என்று வலைப்பதிவில் கவலைப் பட்டிருந்தார்கள். நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை. இருந்தாலும் ஒரு படையப்பா பாடல்கள் போல், 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'ஆட்டோக்காரன்' பாட்டுக்கள் போல் அல்லாமல் 'தேவுடா, தேவுடா' சாதாரணமாக போய்விட்டதாய் தோன்றியது. ஒரு வேளை தியேட்டரில் பார்த்திருந்தால் வேறு மாதிரி தோன்றியிருக்கலாம்.இடைவேளை வரை அலுக்காமல் சென்ற படம், இடைவேளைக்கு பிறகு இன்னும் விறுவிறுப்பாய் போகப்போவது தெரிந்தது. ரஜினி ராம்கியின் தொந்தரவால் இணையத்தில் படம் பார்க்க முடியாமல், இரண்டு நாட்கள் தலைவெடிக்கும் ஏக்கத்துடன் கழிந்து பார்த்ததில் ஏமாற்றவில்லை.

இடைவேளைக்கு பிறகான படம் ரொம்ப ஆழமாய் கதைக்குள்ளே இறங்கி ரசிக மனத்தை காயடித்து விடாமல், அதே நேரம் மீண்டும் ரஜினிப்பட ரசனைக்கான சட்டகத்திற்குள்ளேயே, அதன் மேலோட்டத்துடனேயே ஆழமான கதையை இறக்கியிருந்தது. இரண்டாம் பாகத்தின் மிக பெரிய பலம் இசை. வித்யாசாகர் புகுந்து விளையாடியிருக்கிறார், குறிப்பாய் 'ராரா, ஸரசகு ராரா' பாடலிலும் அதை தொடர்ந்த பிண்ணணியிலும், இசையே அந்த காட்சிகளின் மிக பெரிய பலம். ஜோதிகாவின் இப்படி ஒரு நடிப்பை இப்போதுதான் பார்கிறேன். இதை மிகை நடிப்பு என்று யாரேனும் சொல்லக்கூடும். நடிப்பு என்பதே மிகை கலந்ததுதான். மேலும் அது யதார்த்ததையே மிகைப்படுத்துகிறது. அதுவும் நமது இந்திய குறிப்பாய் தமிழ் சினிமாவின் சட்டகத்தில் மிகையில்லாமல் நடிப்பு இல்லை. நமது சட்டகத்திற்கு எதிரான மேற்கு சார்ந்த சிந்தனையின் தாக்கத்திலேயே இந்த மிகை நடிப்பு பற்றிய புலம்பல் வருகிறது. படத்தை துய்ப்பதற்கு தேவையான சமனை குலைத்து எரிச்சலை கிளப்பாதவரை மிகை நடிப்பினால் எந்த பிரச்சனையும் இருப்பதாய் தெரியவில்லை. எலீட் ரசனை சார்ந்த யதார்த்தவாதியின் கலைப்பட வரட்டுத்தனத்தையே அது உறுத்தும். அப்படியல்லாத பார்வையில் ஜோதிகா அற்புதமாய் வெளிப்பட்டிருப்பது புரியும்.

ரஜினியை பற்றி நல்லதும் கெட்டதுமாய் பேசும் அனைவரும் சொல்லி வருத்தப்படும் விஷயம், அவர் தனது 'முள்ளும் மலரும்' போன்ற படங்களின் நடிப்பு திறனை தொடரவில்லை என்பது. ரஜினியிடம் இரண்டுவகை நடிப்பு பாணி ஒன்றுடன் ஒன்று பகிர்ந்துகொண்டு வெளிப்பட்டிருப்பதை காணமுடியும். ஒன்று அவரது ஆக்ஷன் பாணி. ரஜினியை கோடி ரசிகர்களின் நாயகனாய் மாற்றிய இந்த பாணியை இன்னோரு பக்கம் எலீட் கூட்டம் கேவலமானதாகவும், கீழதரமான ரசனையாகவும் முன்வைத்து வருகிறது. ஜெயமோகன் அதை பொறுக்கித்தனமாய் பார்க்கிறார். தன்னால் அடையாளம் காணமுடியாததை முட்டாள்தனமாகவும், கேவலமானதாகவும் பார்க்கும் எலீட் வன்முறையாகத்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இங்கே வெளிப்படுவதும் ரஜினியின் திறன் மிகுந்த, அவரிடம் மட்டுமே வெளிபட வாய்த்த தனிதன்மையான நடிப்புதான். முள்ளும் மலரும் பாணிவகை நடிப்பு இன்னொரு பாணி. இந்த இரண்டு பாணியிலேயுமே பிரித்து பார்க்க முடியாமல் கலந்திருப்பது ஒரு 'வில்லன்தனமான' இயல்பை கொண்ட நடிப்பு பாணி. அந்த பாணியில் ரஜினி வெளிப்படும் போதெல்லாம் பிரமாதமாய் கலக்கி வந்திருக்கிறார். சந்தரமுகியில் கடைசி இருபது நிமிடங்களில், ரஜினி வேட்டய ராஜாவாய் வரும் சில நிமிடங்கள், எங்கேயோ கொண்டு சென்று விட்டார். 'நெற்றிகண்' வில்லன் அப்பாவை நினைவுபடுத்தும் தோரணையுடன், வந்து 'லக்க லக்க லக்க' என்று சொல்லும் ஒரு காட்சி போதும், "அந்த கட்டத்துக்குதான்யா காசு!" படம் வெளிவரும் முன் தமிழ்நாட்டில் பயித்தியம் பிடித்து 'அரே அரே அரேஅரே' என்று சொல்லி கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஏன் 'லக்க லக்க லக்க லக்க' என்று சொல்லுவார்கள் என்று இப்போது புரிகிறது!

படத்தில் ஒரு விஷயம் கயிறு மேல் நடக்கும் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது. சுஜாதா தன் புனைவுகளில் பலமுறை கையாண்ட 'விஞ்ஞானமா, பைசாசமா?' என்ற கேள்விதான் அது. 'கொலையுதிர் காலம்', 'மலை மாளிகை' போன்ற கதைகளில் விஞ்ஞானத்தை அதற்கு எதிரான சிந்தனைகளுடன் மோதவிட்டு, ஒரு முடிவு சொல்லாமல், இரண்டு சாத்தியக் கூறையும் கலக்கி ஒரு ரெண்டு கெட்டான் முடிவை தருவார். சுஜாதா ரெண்டுகெட்டான் முடிவு தந்தாலும் வாசிப்பவருக்கு ஒரே ஒரு வாசிப்பு மட்டுமே சாத்தியமாகும். அதாவது 'விஞ்ஞானமா, பைசாசமா என்ற கேள்விக்கான பதிலை ஒரு நாளும் அறுதியிட்டு அடையமுடியாது' என்பதே அந்த வாசிப்பாக இருக்கும். ஆனால் 'சந்திரமுகி' இந்த இரண்டையும் கலந்து, இரண்டு வகை வாசிப்புகளையும் சாத்தியமாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் ஜோதிகாமேல் சந்திரமுகியின் ஆவி வந்து உட்கார்ந்து கொண்டதாகவும், அதன் தொடர்ச்சியாய் மொத்த கதையையும் கடைசி வரை பார்க்கமுடியும். இடையில் ரஜினி தரும் 'பிளவாளுமை விளக்கங்கள்', மனோதத்துவ ரீதியான சிகிச்சை என்று சொல்லப்படும் காட்சிகள் அந்த வாசிப்பில் எந்த இடையூறையும் ஏற்படுத்துவதில்லை. அதே நேரம் ரஜினி தரும் மனோதத்துவ விளங்கங்களை ஏற்றுகொண்டு, பேய்கதையை நம்பாமல் முழுப்படத்தையும் பார்க்க முடியும். ஜோதிகா கடைசி காட்சியில் சக்கரத்தில் உட்கார வைக்கப்படுவதோ, அந்த சாமியாரின் இருப்போ இந்த வாசிப்பில் இடையூறு செய்வதில்லை. இந்த இரண்டு வாசிப்பும் வேவ்வேறு வகை பார்வையாளருக்கு கிட்டியிருக்கும், படம் அவ்வாறு வாசிக்கப் பட்டு மக்கள் கூட்டத்தால் பார்க்கப் பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது. மேலும் இந்த வாசிப்புகளை சாத்தியமாக்கும் படக்கதை (ரஜினிக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பாக படக்கதை அமைக்கப் படுவதில் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனையிருக்கலாம் என்ற பரிமாணம் இருந்தாலும்) முன் திட்டமிட்டு புனையப் பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

பி.கு.: பெண்களை கேவலப்படுத்தும் வழக்கமான ரஜினி பட காட்சிகள் மிகவும் குறைவு. இல்லாமலே போய்விட்டால் திருஷ்டி பட்டுவிடும் என்றோ, நயனதாராவிடம் ரஜினி வம்பிழுக்க அதன் காரணமாகவே அவர் காதலிக்கும் காட்சிகளும் சேர்க்கப் பட்டிருக்கலாம்.

Post a Comment

101 Comments:

Blogger Narain Rajagopalan said...

ஆஹா.. எல்லாம் பார்த்துட்டிங்களா, இங்க நான் மட்டுந்தான் பாக்கியா. மொத்ததுல ரசிகனையும், பார்வையாளனையும் திருப்திப் படுத்துகிற கதையாகதான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

4/22/2005 7:56 PM  
Blogger Kasi Arumugam said...

//சண்டையில் அறிவியல் விதிகள் மதிக்கப் படவில்லை என்று வலைப்பதிவில் கவலைப் பட்டிருந்தார்கள். நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை.//

குரூர எண்ணம்?

உம்மை கர்த்தர் ரட்சிக்கட்டும்.!

4/22/2005 8:24 PM  
Blogger ROSAVASANTH said...

அய்யோ காசி ஸார், நீங்க கூட அப்படி சொல்லியிருந்த ஞாபகம் இப்பதான் வருது (நான் மனதில் வைத்தது ரஜினி படத்தை முன்வைத்து ஒருவர் (யார்?) எழுதிய சில ஜோக்குகள். 'குரூர' என்பது கிண்டல்தான், தப்பா எடுத்துக்காதீங்க! மற்றபடி ரஜினி தன் ரசிகர்களை 'காப்பது' போல் என்னை கர்த்தரும், அல்லாவும், சாத்தானும் காப்பாற்றுவார்கள்!

(யாருக்குமே இந்த பதிவு பிடிக்காதுன்னு புரியுது. அதுக்காக வீட்டுல துணைவியுடன் படத்தை ரசித்துவிட்டு இணையத்தில் பீலாவா விடமுடியும்?)

4/22/2005 9:22 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

வாத்தியார் ரோஸா வஸந்த்!! முதல் தடவையா நான் உங்க பதிவு ஒன்றை ரொம்ப விரும்பிப் படித்தேன். நன்று. தொடரட்டும்.

நாராயண்!! இன்னும் படம் பார்க்கலையா?? நான் மூணு தடவை பார்த்துட்டேன்பா.. சீக்கிரம் பாரும்!!

4/22/2005 9:27 PM  
Blogger Kasi Arumugam said...

//நீங்க கூட அப்படி சொல்லியிருந்த ஞாபகம் இப்பதான் வருது //

நான் மட்டுமே சொன்ன மாதிரி ஞாபகம். நானும் *கூட* அல்ல.

என் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. திருவிளையாடலில் பாட்டு நின்றதும் எல்லாமே நிற்பது புரிந்து ரசிப்பேன். ஏனென்றால் அது, நம்புகிறோமோ இல்லையோ, தெய்வத்தைப் பற்றிய படம். ஆனால் இங்கே சொன்னீர்களே, சருகு நிற்பதை, அதைத்தான் என்னால் ஏற்கமுடியவில்லை. அதைத்தான் கண்டிக்கிறேன்.

இன்னொண்ணு, நான் எலீட் அல்ல. நான் ஒப்பிட்ட படம் சாதாரண ஜாக்கி சான் படம். என் லெவல் அதுதான். மாண்ட்டீ, நாராயண், எழுதுவது மாதிரிப் படங்களைக் கேள்விப்பட்டதும் இல்லை, இப்போது தெரிந்துவிட்டதென்பதற்காகப் பார்ப்பதாகவும் சத்தியமாக யோசனை இல்லை.

அதற்காக நான் சந்திரமுகி பார்க்கவே போறதில்லை என்றும் அர்த்தமில்லை. அடுத்த மாதமோ அடுத்த வாரமோ எங்களுக்கு டிவிடி அல்லது விடியோ கிடைத்தால் பார்ப்பேன். பல படங்கள் அரை மணிக்குமேல் பார்க்கமுடியாமல் போகும். சிலது எதிர்பாராமல் இடத்தைவிட்டு நகராமல் பார்க்கவைக்கும், இது எப்படி என்று அப்போது பார்த்துக்கலாம்.

(சார் மோரெல்லாம் எதுக்கு சார்?)

4/22/2005 9:38 PM  
Blogger ROSAVASANTH said...

வில்லங்கத்துக்கு வாய்ப்பே இல்லாமல் நான் எழுதிய பதிவு இதுதான்னு நினைச்சுகிட்டிருந்தேன். மீனாக்ஸ் கூட வந்து பாராட்டியிருக்கிறார்.

காசி, நான் உங்களை மனதில் நினைத்திருந்தால் சொல்வதில் எனக்கு தயக்கமே இருக்காது. ரஜினி படத்தையும், நியூட்டனின் விதிகளை வைத்து, நியூட்டன் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதாய் ஒருவர் பதிவு எழுதிய ஞாபகம். யாரென்று இப்போது நினைவில்லை. அதை மனதில் வைத்தே எழுதினேன். ஆனால் அது நீங்கள் சொன்னதற்கும் பொருந்தி வரும். அதன் மீதும் எனக்கு வீமரசனம் உண்டு. நீங்கள் எலீட்டா என்பது அல்ல, இது எலீட் பார்வையின் தாக்கம் என்பது என் கருத்து. உங்களை நேரடியாய் சொல்லியிருந்தால் 'குரூர எண்ணம்' என்று கிண்டல் (கிண்டல்தான்!) அடித்திருக்க மாட்டேன். அவ்வளவுதான். இந்த விமர்சனத்தில் நீங்கள் தப்பாக எதையும் எடுத்துகொள்ளவில்லை, அப்படி எடுத்துகொள்ள எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

மீனாக்ஸ் பின்னூட்டத்திற்கு நன்றி.

4/22/2005 9:50 PM  
Blogger SHIVAS said...

நிஜத்தில் நடந்த இதே "split personality" கதையை நான் "ஆவி உலக அனுபவமாக" சொன்னபோது எல்லோரும் கிண்டல் செய்தீர்கள். அதே கதையை சூப்பர் ஸ்டார் செய்தவுடன் , உங்களுடைய "scientific"மூளையை கழற்றி வைத்துவிட்டு கைதட்டி விமர்சிக்கிறீர்கள். சூப்பர் ஐயா உங்கள் நல்லிணக்க முயற்சிகள்...!

4/22/2005 9:53 PM  
Blogger Narain Rajagopalan said...

//இன்னொண்ணு, நான் எலீட் அல்ல. நான் ஒப்பிட்ட படம் சாதாரண ஜாக்கி சான் படம். என் லெவல் அதுதான். மாண்ட்டீ, நாராயண், எழுதுவது மாதிரிப் படங்களைக் கேள்விப்பட்டதும் இல்லை, இப்போது தெரிந்துவிட்டதென்பதற்காகப் பார்ப்பதாகவும் சத்தியமாக யோசனை இல்லை.//

ஐயோ காசி, இது என்ன கலாட்டா. நான் படு லோக்கலான ஆளு. அந்த மாதிரி (ஒழுங்கா படிங்கைய்யா, இந்த வார்த்தை ஒரு ஏடாகூடமான வார்த்தை... இது உலகப்படங்கள், உலகப்படங்கள் மட்டுமே [இதுல நடுவுல விஜய் வேற பிரெஞ்ச் படமா பார்த்திருக்கறாம்.. என்னமா, துணைவியார் கூட இல்லையா ;)])படங்களும் புடிக்கும். 'ராக்கம்மா கைய தட்டு' மாதிரி பாட்டுக்கு தியேட்டரே அதிர மாதிரி டான்ஸ் ஆடவும் செய்வோம். உலகப்படங்கள் பாருங்கள் காசி, சும்மா ஒரு சோதனைக்காச்சாவது. கொஞ்ச நாள் பாத்தீங்கன்னா பழகிடும். ரசிக்கறதுதான் விஷயமே இங்க, எதை ரசிக்கிறீங்கன்றது அவங்கவங்க விருப்பம்.

4/22/2005 9:56 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ரோச வசந்த் விமர்சனம் மிக அருமை.
இன்று மாலை வாசிங்டன்னில் சந்திரமுகி திரை இடுகிறார்கள்.
அமெரிக்காவில் நான் முதலில் பார்த்த படம், படையப்பா, அடுத்து பாபா,
இது ஏனோ பார்க்க தோணவில்லை. ஆனால் உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன்
பார்க்க தோணுகிறது. இங்கே சிலர் சொல்லுவது போல உங்களது இந்த பதிவு மற்றதை
காட்டிலும் சற்று வித்தியாசமாக(மிதமாக) படுகிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

4/22/2005 10:29 PM  
Blogger SnackDragon said...

//ஜெயமோகன் அதை பொறுக்கித்தனமாய் பார்க்கிறார். தன்னால் அடையாளம் காணமுடியாததை முட்டாள்தனமாகவும், கேவலமானதாகவும் பார்க்கும் எலீட் வன்முறையாகத்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது.// 100% சரி. மத்ததுக்கு பிறகு வருகிறேன்.

4/22/2005 10:33 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி உங்கள் பிலிமுக்கும், விமர்சனத்திற்கும் நன்றி. ஆனால் அதில் சில பொருட்பிழைகள் உள்ளன.

1. உங்கள் ஆவியுலக அனுபங்களை முன்வைத்து நான் எங்கேயும் கிண்டல் செய்ததில்லை. இருந்தால் அதை இங்கே குறிப்பிடவும், இல்லையெனில் இல்லை என்று சொல்லவும். என் 'செருப்படி; பதிவில் சின்னதாய் குறிப்பிட்டாலும், 'ஆவியுலக அனுபவத்தை' கிண்டல் செய்யவில்லை, செய்ய மாட்டேன்.
2. ஆவியுலக அனுபவங்களை நீங்கள் பிளவாளுமையை முன்வைத்து இதுவரை (உங்கள் பதிவுகளில்) எதுவும் சொல்லவில்லை. இப்போதுதான் புதுசாய் சொல்கிறீர்கள். அதனால் இந்த பார்வையை முன் வைத்து புதிய பதிவு எழுதவும்.
3. உங்கள் ஆவியுலக பிரச்சனைக்கும், சந்திரமுகி விமரசனத்துக்கும், எனது நல்லிணக்க மூயற்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை.
4. நான் உங்களை விமர்சித்த விஷயங்கள் வேறு. அது குறித்து பேசுவதில் எனக்கு பிரச்சனையில்லை.
5. உங்கள் விமரசனத்திற்கு நன்றி.

பிரசன்னா, உங்கள் கருத்துக்கு நன்றி. பிளவாளுமையை முன்வைத்து வந்த முதல் படம் நம்ம ஹிட்ச்காக்கின் ஸைக்கோ என்று நினைக்கிறேன். இது போன்ற 'லாஜிக்கல்' கேள்விகள் அந்த கதையிலேயே எழுப்ப முடியும் என்று நினைக்கிறேன். தெலுங்கு பேசமுடியுமா என்று என்னால் சொல்ல முடீயவில்லை. ஆனால் படத்தில் அது ஒரு பிரச்சனையே இல்லை, தெலுங்கு பேசுவது சுவாரசியமான ஒரு புனைவு என்பதுதான் என் கருத்து. மீதி நாளை!

எல்லோருக்கும் நன்றி. இப்போது ஸோசு சாப்பீட்டு கொஞ்சம் ஓவராகிவிட்டதால் ஜூட். மன்னிக்கவும்.

4/22/2005 10:34 PM  
Blogger ROSAVASANTH said...

சிவா, கார்திக், நான் எழுதிகொண்டிருக்கும் போது எழுதியிருக்கிறீர்கள். கருத்துக்கு நன்றி.

4/22/2005 10:36 PM  
Blogger SHIVAS said...

//நீங்கள் பிளவாளுமையை முன்வைத்து இதுவரை (உங்கள் பதிவுகளில்) எதுவும் சொல்லவில்லை. இப்போதுதான் புதுசாய் சொல்கிறீர்கள்.//

[http://kanchifilms.blogspot.com/2005/02/ii-full.html

(ஒரு மனோதத்துவ மருத்துவரை அனுகினேன். நடந்தவற்றை அப்படியே கூறி விளக்கம் கேட்டேன். அவர் பலமான ஒரு சிரிப்பிற்கு பின்னர், இந்த நிலையைதான் மருத்துவத்தில் "டபுள் பெர்ஸனாலிட்டி" என்றும், ஒருவரின் ஆழ்மனதில் பதிந்துள்ள செய்திகள் எதோ ஒரு சூழ்நிலையில் வெளிப்படுகின்றன என்றும் சொன்னார். அதற்கு மேல் நான் கேள்விகள் கேட்க முற்பட்டதை அந்த மருத்தவர் விரும்பாததை கண்டு மரியாதை கெடும்முன் விடைபெற்றேன். அந்த விளக்கம் எனக்கு முழுமையான ஒரு திருப்தி அளிக்கவில்லை. இதனை யாரேனும் மனோதத்துவ நிபுணர் படித்தால், இதற்கு உண்டான வேறு விளக்கம் இருக்குமானால் தயவுசெய்து தெரிவித்து என்னை போல் குழம்பியிருக்கும் ஏனைய வாசகர்களுக்கும் உதவி செய்ய வேண்டுகிறேன்.)]

நீங்கள் கேலி செய்தாக சொல்லவில்லை.பொதுவாக கிண்டல் செய்தீர்கள் என்று தான் சொன்னேன். என்னுடைய ஆவி ஆராய்ச்சியில்!!!, எனக்கு கிடைத்த கடைசி மருத்துவத் துரை விளக்கம் அது தான்(Split Personality). ஆனால் அது சரியான விளக்கம் இல்லை என்பது என் கருத்து.
நன்றி.

4/22/2005 10:54 PM  
Blogger Ganesh said...

This comment has been removed by a blog administrator.

4/22/2005 11:07 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி, கருத்துக்கு நன்றி. உங்களின் இந்த பதிவை நான் படிக்கவில்லை. ஆனாலும் நிச்சயமாய் உங்கள் ஆவியுலக அனுபவங்களை நான் கிண்டல் செய்யவில்லை. எனக்கு தெளிவில்லாத விஷயங்கள் குறித்து நான் பேசுவது கிதையாது. நீங்கள் குறிப்பிடும் அனுபவங்களை நானும் மற்ரவர்களிடம் கேட்டிருக்கிறேன். விஞ்ஞானம் அதற்கு முழு விளக்கம் அளிக்க முடியும் என்றூ எனக்கு தோன்றவில்லை. அது குறித்து நாம் பிறகு பேசலாம்.

நான் உங்களை விமர்சித்ததும், கிண்டலைத்ததும் வேறு விஷயங்கள்! கருத்துக்கு நன்றி.

4/22/2005 11:21 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//இப்போது ஸோசு சாப்பீட்டு கொஞ்சம் ஓவராகிவிட்டதால் ஜூட். மன்னிக்கவும்//

ஸோசு என்றால் என்ன????

'சாப்பீட்டு' --- what happened ;-)

நல்ல விமர்சனம்! நீங்கள் எழுதிய பிறகு சந்திரமுகி கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது :-) "முள்ளும் மலரும்" என்னை மிகவும் பாதித்த ஒரு ரஜினி படம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

4/22/2005 11:59 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா இப்படிய்ரு பதிவை எதிர்பார்க்கவில்லை நீங்கலும் பாராட்டியபிறகு பார்க்க ஆர்வம் வந்திருக்கிறது(இணையத்தில் அல்ல திரையரங்கில்தான்)
ஒரு விடயம்தான் உறுத்துகிறது சிங்கையில் மற்றைய படங்களுக்கு 10 டொலர் சந்திரமுகிக்கு 15 டொலர் இந்த வித்தியாசம் பெரிசில்லைத்தான் ஆனால் எதற்காகக் கொடுக்கவேண்டும் என்று படம் பார்க்காமல் இருக்கிறேன்.விசேடமாக ரஜனி படத்திற்கு கூடுதல் பணம் கொடுப்பது ஒப்பவில்லை

4/23/2005 12:02 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ஈழநாதன்:
இப்படி தெரிந்தே கொள்ளையடிக்கும் போது சிலர் தெரிந்தே இணையத்திலிருந்தோ, திருட்டு DVD யிலோ பார்ப்பதில் தப்பே இல்லை. பார்க்க நன்றாக இருக்கும் என்ற ஒரு காரணத்துக்காக வேண்டுமானால் அரங்கத்தில் பார்க்கலாமேயொழிய திருட்டு, மனசாட்சி என்றெல்லாம் காரணங்கள் வேண்டியதில்லை (காஞ்சியின் பதிவில் பின்னூட்டங்களைப் பாருங்கள்).

வசந்த்:
விமர்சனத்துக்கு நன்றி.

4/23/2005 12:15 AM  
Blogger Indianstockpickr said...

விமர்சனத்துக்கு நன்றி ரோசா.

//இப்படி தெரிந்தே கொள்ளையடிக்கும் போது சிலர் தெரிந்தே இணையத்திலிருந்தோ, திருட்டு DVD யிலோ பார்ப்பதில் தப்பே இல்லை//

டிக்கெட் விலையை எந்த விலையிலும் சட்டப்படி நிர்ணயம் செய்யும்பட்சத்தில், அதிகவிலை கொடுத்து போய் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதை காரணம்காட்டி, அவன் கொள்ளை அடிக்கிறான் நான் கொலை செய்தால் என்ன தப்பு என்ற வகையில், சட்டவிரோத வகையில் திருட்டு VCDயில் படம் பார்த்தால் என்ன தப்பு என கேட்பது... அதுவும் சுந்தரமூர்த்தி கேட்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

4/23/2005 12:38 AM  
Blogger Jayaprakash Sampath said...

ரோசா...நீர் வாழ்க...

//வருடங்கள் காத்திருந்து, ரஜினியை பார்க்கும் அறிமுக ஸீன், ரஜினி ரசிகரின் உடலின் எல்லா திரவங்களின் அழுத்தத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

உண்மை உண்மை..

// தியேட்டரில் ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்தவுடனேயே எனக்கும் எக்குதப்பாக அழுத்தம் ஏறி தமிழகத்தில் இல்லாத விதியை நொந்தேன்.//

இல்லாத போய்ட்டீங்க...செம ரகளை. பெரம்பூர் பிருந்தாவில், முதல் நாள் மேட்னீ. விசிலடிக்கிற பழக்கம் காலேஜ் தினங்களோடு போய்விட்டது என்றாலும், அந்த அறிமுகக் காட்சியின் போது தாங்க முடியவில்லை. பத்து வயசைக் குறைத்துக் கொண்டு, ஜோதியிலே கலந்து விட்டேன். அதுக்குப் பிறகு கலாட்டா செய்ய வாய்ப்பு இல்லை. படம் விறுவிறுப்பாகப் போனதில், குறை தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு, 'அண்ணனோட பாட்டு' என்ற குத்தாட்டப் பாட்டின் போது, கலாட்டா தாங்க முடியவில்லை. ஒன்ஸ் மோர் என்று அலறினார்கள். பந்தோபஸ்துக்கு வந்த போலீஸ்காரர்கள், சமாதானம் செய்து, மீண்டும் ஒரு முறை போடச் செய்தார்கள். மொத்த தியேட்டரும் அலறியது. பக்கது வரிசையில் இருந்த ஒரு பெண்கள் கும்பல், ( கல்லூரி மாணவிகள் போல இருந்தார்கள் ) என்ன ரவுசுன்றீங்கோ...

ஒருமுறை, தாதர் எக்ஸ்பிரஸில் சந்தித்த பேராசியருடன், நீண்ட நேரம் *மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். அவர் சிம்பியாசிஸ் என்ற பிரபல மேலாண்மை கல்விநிறுவனத்தில் பணிபுரிபவர். கண்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த் போது பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி பேச்சு வந்தது. "try to shed your inhibitions" என்றார் எதேச்சையாக. யோசித்துப் பார்த்தால், தயக்கங்கள் தான் நம்மை ரொம்பவும் படுத்தி எடுக்கின்றன. " கோட்டு சூட்டுப் போட்ட மனிதரிடம், ஏசி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஷ¥ லேசை சரி செய்யலாமா என்ற தயக்கம், டை கட்டிக் கொண்டு கையேந்தி பவனில் இட்லி சாப்பிடலாமா என்ற தயக்கம்., பிங்கர் பவுலை நீட்டும் போது, வேணாம், வாஷ்பேசின் எங்கே என்று கேட்கத் தயக்கம், என்று சாம்பிளுக்கு ஏகப்பட்டது இருக்கின்றன. இந்த make-up ஐ துடைத்து எறிந்துவிடு, எந்தக் கவலையும் இல்லாமல், ஜாலியாக, குதித்து ஆட, தன்னை மறந்து சந்தோஷப்பட ஒரு இடம் வேண்டித்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்த இரண்டில், முதலாவது, குழந்தைகளுடன் கொம்மாளம் போடுவது, அடுத்தது, ரஜினி படம் முதல் நாள்., முதல் காட்சி. unfortunately என் வீட்டில் குழந்தைகள் என்று யாரும் இல்லை. அதனால், ரஜினி தான் ஒரே வழி.... சந்திரமுகி பார்த்தட்டு வந்தது, இன்னும் ஆறுமாசத்துக்குத் தாங்கும். அதுக்கு அப்புறம் இருக்கவே இருக்கு, குரு-சிஷ்யன் சிடி.

//ரஜினியை பற்றி நல்லதும் கெட்டதுமாய் பேசும் அனைவரும் சொல்லி வருத்தப்படும் விஷயம், அவர் தனது 'முள்ளும் மலரும்' போன்ற படங்களின் நடிப்பு திறனை தொடரவில்லை என்பது.//

"ரஜினிகாந்த்-முள்ளும்" மலரும் ஒரு தனி வியாசத்துக்கான விஷயம். விரிவாகப் பேசவேண்டியது.

//குறிப்பாய் 'ராரா, ஸரசகு ராரா' பாடலிலும் அதை தொடர்ந்த பிண்ணணியிலும், இசையே அந்த காட்சிகளின் மிக பெரிய பலம். //

தமிழில் வந்தது தெலுங்குப் பாடல். தெலுங்கு சந்திரமுகியில், தமிழ் பாடல். நித்யஸ்ரீ பாடியிருக்கார். கேட்டீங்களோ?

4/23/2005 12:54 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

இரவிக்குமார்,
வணக்கம்.
இந்த செய்தியின்படி சென்னை திரையரங்குகளிலேயே 150, 200 ரூபாய் என்று டிக்கட் விற்றிருக்கிறார்கள். ஈழநாதன் சொல்வதைப் பார்த்தால் சிங்கப்பூரிலும் இதே கதைதான். ஒரு திரையரங்கின் தரம், இருக்கை வசதி, ஊர் இவைகளைப் பொறுத்து தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது என் புரிதல். கேளிக்கை வரியும் அதற்குத் தகுந்தமாதிரி இருக்கும். நடிகரின் பிரபலத்தை வைத்து விலை நிர்ணயிப்பது சட்டப்பூர்வமானதாகத் தெரியவில்லை. திருட்டு VCD தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் இந்த திரையரங்க உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அதற்குத் தகுந்த மாதிரி கேளிக்கை வரியும் செலுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

இணையத்தில் படம் இலவசமாகக் கிடைப்பதை கண்டிக்கும் ரஜனியின் ரசிகர்கள் படத்தை முதல் நாளே பார்க்கவேண்டுமென்று போன தீவிர ரசிகர்களைச் சுரண்டுவதை கண்டிக்கவில்லை. சொல்லப்போனால் விசுவாசமான ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் டிக்கட் விற்பதுதான் நியாயமானது.

4/23/2005 1:09 AM  
Blogger Ganesh said...

Rajini CM moolam voodi katti adikararupa ella edthathillum.
Kerala
No 1 movie CM it has trounced all the new year movie including 3 superstar mallu actors Mohanlal,Dileep and Jayaram all have been trounced by CM,
http://sify.com/movies/malayalam/fullstory.php?id=13722294

Looks Keralites prefer Rajini version of CM than Manichithrathaz!! ;)

And in Telegu also CM is no1 in collection. check this out.
http://www.musicindiaonline.com/n/i/telugu/967/

Looks like Rajini's magic is still there I thought he was done with.
As Rajini challenged other film makers he is still a winning horse.

He is indeed now with CM

Koduma illa enda oru padatha remake panangalo athe orula indha padam no1.

Ps: I prefer tamil verison sung by Nithyasree in telegu version.

4/23/2005 1:23 AM  
Blogger Muthu said...

ரோசாவசந்த்,
நல்ல பதிவு. தொடருங்கள்.

காஞ்சி பிலிம்ஸ்,

////என்னுடைய ஆவி ஆராய்ச்சியில்!!!, எனக்கு கிடைத்த கடைசி மருத்துவத் துரை விளக்கம் அது தான்(Split Personality). ஆனால் அது சரியான விளக்கம் இல்லை என்பது என் கருத்து.
நன்றி.
By காஞ்சி பிலிம்ஸ், at 4/22/2005 10:54 PM ////

இன்றைய அறிவியற் குழந்தை இதற்கு விளக்கம் தர இயலாது. அறிவியல் இன்னும் பல பரிமாணங்களைப் பெற்றால் என்றாவது அது சாத்தியமாகலாம்.

இது போன்றவைகளைப் பற்றி ஒரு பதிவு இங்கே.
http://muthukmuthu.blogspot.com/2005/04/blog-post.html

http://muthukmuthu.blogspot.com/2005/04/blog-post.html

4/23/2005 1:58 AM  
Blogger SHIVAS said...

//அறிவியல் இன்னும் பல பரிமாணங்களைப் பெற்றால் என்றாவது அது சாத்தியமாகலாம்//
உங்கள் பதிவையும், போஸ்டன் பாலா பதிவையும் நீங்கள் முன்னமே சொல்லி பார்த்திருக்கிறேன்.
நன்றி முத்து அவர்களே.

4/23/2005 6:58 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

ரஜனிபடத்தை சராசரி ஜனங்களின் களிப்பாக ஒரு relaxation ஆக புரிந்துகொள்ளலாம்; ஆனால்,
(ஒரு ரஜினி படத்தை கூட பார்த்து அனுபவிக்க இயலாத இவர்கள் வேறு எதை சாதிக்க போகிறார்கள்)
இப்படிச் சொல்வது 'என்னெண்டுதான் ரஜினி படத்தை பார்க்கிறார்களோ' என்று சொல்வதைப் போன்றதுதான்.
யாருடைய ரசனையையும் மட்டமாக நினைக்கவேண்டியதில்லை என்றுகொண்டு, அதில், ரஜனி படத்தை ரசிக்காதவர்கள் oh அனுபவிக்கத்தெரியாதவர்கள் என்ன சாதிக்கப் போகிறர்கள் என்றால், என்ன இது?!

4/23/2005 7:26 AM  
Blogger ROSAVASANTH said...

பாலா, கருத்துக்கு நன்றி. ஸோசு என்பது ஜப்பானிய உற்சாக மருந்து.

ஈழநாதன், சுமு கருத்துக்கு நன்றி. ஈழநாதன், இன்னும் கொஞ்சநாள் காத்திருந்தால் டிக்கெட் விலை இறங்கும். இது ரொம்ப நாள் கழித்து கிடைக்கும் வசூலுக்கான வாய்ப்பு. எல்லா வழியிலும் வசூலிக்காமல் இருக்கமாட்டார்கள். சுமு சொன்ன கருத்தை ஏற்றுகொள்கிறேன். நான் பார்தது இணைய காப்பி!

இகாரஸ், ரவிகுமார், கேகிருக்கன் கருத்துக்கு நன்றி. இகாரஸ், இன்னும் நித்யஸ்ரீயை கேட்கவில்லை. கேட்டு சொல்கிறேன். சுட்டிக்கு மிகவும் நன்றி.

விசிதா, உங்கள் மட்டையடிக்கும் நன்றி. 'reasoning' எதுவும் தராமல் (அல்லது அபத்தமாய் தந்து)அடுத்தவரிடம் வெளிப்படுவது 'தேவதாஸ் சிண்ட்ரோம்' என்று சொல்லவும், இப்படி மொட்டையாய் 'ரஜினி வசந்த்' பட்டம் தந்து மட்டையடிக்கவும் உங்களுக்கு நிச்சயம் உரிமை உண்டு. EPW தொடர்ந்து படித்தாலே அறிவுஜீவியாய் ஆகிவிட்டதாய் நினைக்கவும், அதிலீருந்து மேற்கோள் காட்டி எழுதாதவரை முட்டாள் என்று நினைக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனால் உங்களை 'ஸ்டாலின் விசிதா' என்று பெயர் வைத்துகொள்ள வற்புறுத்த மாட்டேன். நீங்களும் கூட ரோஸா விசிதா என்றே வைத்துகொள்ள உரிமை உண்டு. அதே நேரம் ரஜினி வசந்து என்ற (எனக்கு பிடித்திருந்தால்) பெயர் வைத்துகொள்வதிலும் எந்த கேவலமும் எனக்கு கிடையாது. இது குறித்து ஏர்கனவே இங்கே பேசியது http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_19.html#comments

பொடிச்சி, நீங்கள் இப்படி எழுதியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் எழுதியது கிண்டல் என்பதும், 'ரஜினி படத்தை ரசிக்க' தெரியாதவர்கள் குறித்து எந்த கேவலமான மனோபாவமும் அதில் வெளிப்படவில்லை என்பதும் தெளிவு. விசிதா மாதிரி ஆட்கள் 'ரஜினி வசந்து என்று பேர் வச்சுக்கோ' என்று அது குறித்த கேவலமான மதீப்பீட்டை வெளிப்படுத்துவதற்கு எதிராக, அதை கிண்டல் அடிப்பது போலத்தானே இதுவும். ரஜினி படம் பார்ப்பதை கேவலமானதாய் இத்தனை பேர் கிண்டல் அடிக்காவிடில் ஏன் இப்படி சொல்லவேண்டும்? மேலும் சொன்ன விஷயம் ரஜினி படத்தில், தங்களின் மற்ற எலீட் வகைபட பார்வை லாஜிக்கை போட்டு பேசுவது குறித்த கிண்டல்தானே. அதை ரஜினி படம் பார்க்காதவர்கள் குறித்த கேவலமான மதிப்பீட்டாய் எப்படி பார்கிறீர்கள் என்று புரியவில்லை. மேலும் 'சராசரி ஜனங்கள்' என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்கமுடியுமா? உதாரணமாய் ரஜினி படத்தை relaxation என்பதை மீறி கண்டு களித்த நானும், என் துணைவியும் சராசரியில் அடக்கமா (அது பெரிய பிரச்சனையில்லை), EPW இன்ன பிற 'அறிவை வளர்க்கும்' பத்திரிகைகள் படிக்கும் விசிதா சராசரிக்கு மேலா என்றும் விளக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாய் இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி.

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சந்திரமுகி பார்த்த உடனடி பாதிப்பில் எழுதியது. ஜோதிகா, வினித்தின் ஆட்டம், இன்ன பிற விஷயங்கள் குறீத்து குறிப்பிட விட்டுவிட்டது. இன்னோரு சமயத்தில் ரஜினி பற்றி விரிவாய் எழுதும் நோக்கம் உள்ளது. பார்க்கலாம்!

4/23/2005 9:52 AM  
Blogger ROSAVASANTH said...

இகாரஸ், மியுசிக் இண்டியா சுட்டி வேலை செய்யவில்லை (பிரச்சனை அங்கேதான், சுட்டி சரியானது.), அதனால் ராகாவில் போய் கேட்டேன். http://www.raaga.com/channels/telugu/movie/A0000475.html எனக்கென்னவோ தமிழில் வந்த தெலுங்குதான் பிடித்திருக்கிறது. முதலாய் கேட்டது கூட காரனமாய் இருக்கலாம்.

4/23/2005 10:24 AM  
Blogger ROSAVASANTH said...

விசிதா சொன்னது "rosa should either adopt the same reasoning for everything he writes about"

'same reasoning' என்பதை some reasoning என்பதாக வாசித்துவிட்டேன். (வீட்டில் ஒரு குழந்தையை கவனித்த படி எழுதவேண்டுயுள்ளது.) இந்த பிழைவாசிப்பினால் எழுதிய வரிகளை தவிர்த்து மற்றவை அப்படியே உள்ளது. ஆனால் விசிதா சொல்வதுபோல் நான் புதிய ரீஸனிங் எதுவும் கொடுக்கவில்லை. இந்த பார்வையை இதற்கு முன்பே வைத்துள்ளேன். மன்மதன் பட விமர்சனத்திலும் இந்த பார்வையிலிருந்து மாறாமலே எழுதியதை ஒருவர் கவனிக்க முடியும். ஞாநியின் சினிமா விமரசனங்களை தொடர்ந்து தீவிரமாய் நான் எதிர்த்து வருகிறேன். அதானால் சந்திரமுகி பார்த்து புதிய ஞானம் எதுவும் பெறவில்லை.

மற்றபடி வழக்கமாய் என் பதிவை நேர்மறையாய் படிப்பவர்களுக்கு ஏமாற்றமளிப்பது புரிகிறது. எந்த கொள்கை, கோட்பாடு காரணமாகவும் ரஜினி படம் பார்ப்பது *போன்ற* இன்பங்களை தொலைக்காதீர்கள் என்று பரிந்துரைப்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை. நன்றி.

4/23/2005 11:36 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

சராசரி ஜனங்கள் என்று எதிர்மறையான அர்த்தத்தில் எழுதவில்லை, ஆனால் இப்ப படிக்கிறபோது 'உயர்ந்த' இடத்தில் இருந்து எழுதியதுபோன்ற தொனி இருக்கிறது தெரிகிறது, அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன், நிச்சயமா அந்த அடிப்படையில் எழுதவில்லை. அதற்குப் பதில் பொதுஇரசனை அப்படி ஏதாவது சொல்லலாம்.

நீங்கள் எழுதியது படிக்கிறபோது -ஒரு ரஜினி படத்தை கூட பார்த்து அனுபவிக்க இயலாத இவர்கள் வேறு எதை சாதிக்க போகிறார்கள்- என்று சொல்வதாவே எடுத்துக்கொண்டேன்... எனக்கு ரஜனி படம் பிடிக்காது என்கிற அடிப்படையில அல்ல, ரஜனி படம் பிடிக்காதவர்கள் பற்றி அப்படிச் சொல்ல முடியாது என்பதால், அதை எழுதினேன். அவ்வளவே.

-அதை ரஜினி படம் பார்க்காதவர்கள் குறித்த கேவலமான மதிப்பீட்டாய் எப்படி பார்கிறீர்கள் என்று புரியவில்லை.-

கேவலமான மதிப்பீடாய்....... பார்க்கவில்லை! படிக்கும்போது உறுத்தியது

அப்புறம்
நீங்கள் எழுதிய மற்ற விடயங்களை பற்றி நானொன்றும் எழுதவில்லை.இது கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது.

4/23/2005 12:58 PM  
Blogger ROSAVASANTH said...

பொடிச்சி, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நாம் சொல்ல வருவது வேறுவிதாமாய் புரிந்துகொள்ளும் வாய்ப்பு எப்போதும் இருக்கிறது.

ரஜினி படம் உங்களுக்கு பிடிக்காமல் இருக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதன் நியாயமும், காரணமும் எனக்கு புரிகிறதூ. அதை மறுப்பதல்ல. ரஜினியை ரசிப்பதை கேவலமான ரசனையாய் தரம் பிரிப்பதற்கு எதிராய் சொன்னதுதான் அது. புரிதலுக்கு நன்றி.

முதன் முறையாய் அமோகமான வாக்களித்து -2க்கு கொண்டுவந்த வாசகர்களுக்கு நன்றி! இதே போன்று இன்னும் பல பதிவுகள் எழுதும் எண்ணம் உள்ளது.

4/23/2005 9:12 PM  
Blogger ROSAVASANTH said...

அட..அட! இதோ நான் சொன்ன இரண்டு வசிப்புகள் குறித்த உதாரணம்.


http://jeevagv.blogspot.com/2005/04/blog-post_22.html


பாம்பு விஷயம் சொல்ல மறந்துவிட்டது. ஜீவ சொல்வது போல் பாம்பை ஆவிவாசிப்பு பிண்ணணியில் பார்க்கமுடியும். ஆனால் அதை ஏற்றுகொள்ளாத 'பிளவாளுமை' வாசிப்பில், பாம்பை ஒரு குறியீடாய் மட்டும் பார்க்கலாம். பாம்பு என காட்டப்படுவது உண்மையில் பாம்பாக இருக்க அவசியமில்லை. ஏனேனில் துவக்கம், இறுதி தவிர பாம்பு கதையில் குறிக்கிடுவதில்லை. ஜோதிகா, ரஜினி, அறையீல் உலவும் எந்த காட்சியிலும் அது குறிக்கிடுவதில்லை. அரண்மணையில் இருக்கும் சந்திரமுகி பிரச்சனையின் ஒரு குறியீடாய் பாம்பை காண்பிப்பதாய் வாசிக்க முடியும். பிரச்சனை தீர்ந்து பாம்பு வெளியேறுகிறது.

4/23/2005 10:01 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/23/2005 10:37 PM  
Blogger jeevagv said...

ரோசா, நீங்கள் சொல்லுவதுபோல் இரண்டுவித வாசிப்பிற்கும் இடமளிக்கிறது கதை.
இன்னும் சொல்லப்போனால், ஆவி என்பதுகூட மனப்பிராந்தியே என்று வாதிடலாம், மர்மாக நிகழ்ந்தவை யாவும் குறியீடுகள்தான் எனலாம். இவையெல்லாம் நம் 'மனம்' என்னும் மிக அதிசயமான பொருளால் சாத்தியமாகிறது.
எனக்குத் தெரிந்தவரை மனோதத்துவ நிபுணர்கள், வெறும் மருத்துவ தீர்வுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. ஆன்மீகம், மாந்தரீகம் போன்ற தீர்வுகளும் பயன்படுத்துவதுண்டு, அமெரிக்காவிலும். நோயாளி எந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதை கண்டறிந்து அதற்கேற்றார்போல் தீர்வை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இந்த கதையில் மாந்தரீகம்/ஆவி போன்ற நம்பிக்கைகளை தீர்விற்கு துணை புரிந்துள்ளன என்றே நினைக்கிறேன. இரண்டு வாசிப்பையும் இணைத்து, மூன்றாவது வாசிப்பு எனலாமா இதை?

4/23/2005 11:09 PM  
Blogger க்ருபா said...

க்ருபா said...

நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை

எங்கயோஓஓஓஓஓஒ போய்ட்டீங்க! :-)


நாலணா தேன்மிட்டாய்க்குள்ளும் பிறவிப்பலன் ஒளிந்திருக்கக்கூடும் சாத்திய நிதர்சனம் பற்றி யோசித்து மகிழ உங்கள் வரிகள் உதவின. கலக்கிட்டீங்க க்ருபாவும் இதப்பத்தி இப்போ யோச்சிச்சு மகிழ்ந்து கலக்கிட்டான்).

அந்த "வாராய்" தெலுங்குப்பட தமிழ்ப்பாடல் கேக்கணும்னு ரொம்ப நாளா ஆவலா இருந்தேன். ஜன்மம் சாபல்யம் அடைந்தது.

4/24/2005 6:10 AM  
Blogger ROSAVASANTH said...

ஜீவா, கிருபா கருத்துக்கு நன்றி.

ரவி உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அது வழக்கம் போல எரிச்சலை தவிர வேறு (புதிய கேள்வி) எதையும் கிளப்பவில்லை. நீங்கள் கேட்கும் மேலோட்டமான கேள்விகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக கேட்டு, விரிவாய் விவாதிக்கத்தான் உங்களை முன்பே (ஒண்ணரை வருடம் முன்பு பதிவுகளில்) அழைத்திருந்தேன். ஒரு மட்டையடி பாயிண்டை இப்போதும் சொல்லி நீங்கள் ஏதோ லாஜிக்கல் முரண்பாட்டை கண்டுகொண்டதாய் மீண்டும் தீர்ப்பு தருகிறீர்கள். இந்த மேலேட்டமான கேள்விகளை கூட கேட்டுகொள்ளாமலா ஜல்லியடித்து கொண்டிருக்கிறேன். 'செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடலை எதிர்ப்பதாக சொல்கிறாயே, ஆனால் அந்த பாடலுக்கு நடித்த சத்யராஜ் பெரியார் ஆதரவாளர்' என்று முன்பு நீங்கள் விட்ட பாயிண்டு போலவே இப்போதும் விடுகிறீர்கள். டோண்டு கேட்பதுபோல இந்த கேள்விகள் இருப்பதை கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?

மதத்தில் இருக்கும் irrationality எனக்கு பெரிய பிரச்சனையே அல்ல. எனக்கு மதத்திடம் இருக்கும் பிரச்சனை பகுத்தறிவு பூர்வமானதா என்பது அல்ல. ஒரு ரஜினி படத்தின் சண்டை irrationalஆக இருப்பதும், மதம் அப்படியிருப்பதும் ஒரே பிரச்சனைகளா? என்ன ஒரு அறிவு பார்வை இது? இரண்டும் என்ன வகை பாதிப்புகளை கொண்டிருக்கிறது என்பதை பொறுத்தே அணுக முடியும்.


//someone can ask if you cannot enjoy a visit to temple whatelse can you enjoy.//

தாராளமாய் கோவிலுக்கு போய் என்சாய் பண்ணுங்கள். அதில் என்ன பிரச்சனை? என்றைக்கு அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தேன்? நான் கூட அதை செய்வேன்.

//you admire popular culture but refuse to see that manmathan is also part of that.//

ravi, only you refused to read what I have written. please read my two posts on manmathan, and point out where I have refused to see that it is part of popular culture.

//people have made that also a successful film.so why crib about it.if you say it is antiwomen
i can say the same against many
films of rajni also.where do you
draw the line then.//

முதலில் ரஜினி படம் antiwomen என்பதை பேசக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன்? அதையும் கணக்கில் கொண்டு (கானா பாடல் பற்றி பேசும்போது கூட) மறக்காமல் பேசுகிறேன் என்பதை படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நான் மன்மதன் படத்தை விமர்சித்த பதிவிலேயே 'என் ஆசை மைதிலியே' பாடலை புகழ்ந்திருப்பதை கவனிக்கலாம். இதெல்லாம் என்ன கேள்வி, இதை கேட்க என்ன பெரிய வாசிப்பு தேவை? உங்களை நீங்கள் ஏன் இந்த கேள்விகளை கேட்டுகொள்வதில்லை? நீங்கள் பாராட்டும் புது வசந்தம் திரைப்படத்திலிருந்து பெண்ணடிமை வசனங்களை குறிப்பிட முடியும், பிட்டிருக்கிறேன். அதை பாராட்டும்போது "so why crib about ரஜினி' என்று கேட்டு, எங்கே கோடு கிழிப்பது என்று நீங்களே யோசிக்கலாமே?

மக்கள் வரவேற்பை பெற்ற ஒரே காரணத்தால் ஒன்றை ஏற்றுகொள்வது அல்ல நான் சொல்வது என்பதை விரிவாய் ஒருமுறைக்கு நாலுமுறை பதிவுகள் விவாத களத்தில் விளக்கிய பின் ஒரு வருடம் கழித்து அதையே சொல்கிறீர்கள். இது எத்தனை எரிச்சலை கிளப்பும் என்று யோசிக்க வேண்டும். இந்த பதிவிலேயே அப்படி ஒரு வரி இருந்தால் எடுத்து காட்டவும். இல்லாத பட்சத்தில் குறைந்த பட்சம் அடுத்த வருஷம் இதே கேள்வியை கேட்காதீர்கள்.

எங்கே கோடு கிழிப்பது என்று உங்களை போல என்னால் தீர்ப்பு தரமுடியாது. அதை பற்றி விவாதிக்கலாம். எங்கேயோ கோடு கிழித்துத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கே கோடு கிழிப்பது என்று விவாதிக்கலாம், கோட்டை மாற்றி மாற்றி கிழிக்கலாம். அல்லது கோடு என்று ஒன்று திடமாய் தேவையில்லாமால் கூட இருக்கலாம். அதை பற்றி விவாதிக்க வேண்டுமே ஒழிய 'எங்கே கோடு கிழிப்பது என்று சொல், அல்லது நான் சொன்னதை ஒப்புகொள்' என்று சொல்லும் உங்கள் லாஜிக்கை ஏற்றுகொள்ள முடியாது.

//one cannot support rajnikanth or x or y or anything just because jayamohan opposes that.unfortunately your reasoning is often like this, i support this because someone opposes that.independent of what jayamohan or somebody says one can
form an opinon.//


மீண்டும் அதே! முதலில் அடுத்தவன் எழுதியதை ஒழுங்காய் படியுங்கள். பதிவுகள் விவாதத்தில் இந்த அபத்த கேள்வியை மூன்று முறை சொன்னதையே மீண்டும் மீண்டும் நீங்கள் சொன்னபோது எதிர்கொண்டாயிற்று. ஜெயமோகன் சொல்வதால் அதை எதிர்கிறேனா, அட கருமமே! ஜெயமோகன் சுனாமியை முன்வைத்து எழுதிய RSSஆதரவு கட்டுரையை கூட நேர்மறையாய் எடுத்து பதிவு எழுதியிருக்கிறேன். உங்களை போல ஜெயமோகனை மட்டையடியாய் விமர்சித்து நிராகரிக்கவில்லை. ஜெயமோகனின் அந்த கட்டுரையை முக்கியமானதாய் எடுத்துகொண்டு, அதன் கேள்விகளை எதிர்கொள்ள முயற்சித்திருக்கிறேன். ஜெயமோகன் ரஜினி ரசிகர்களை 'பொறுக்கிகள்' என்று சொன்னதை ஒரு பாசிசமாக பார்பதால், அதை இங்கே ஒரு பாயிண்டாய் குறிப்பிட்டேன். அதுவல்ல மையம்.

நீங்கள்தான் ஜெயமோகன் சொன்ன ஒரே காரணத்திற்காக சுஜாதா மீது சம்பந்தமில்லாமல் ஒரு குரோதத்தை காட்டி கொண்டிருக்கிறீர்கள். எனக்கு ஜெயமோகன் சுஜாதா பற்றி எழுதியதில் கூட ஓரளவு ஒப்புதல் உண்டு என்பதை என் பழைய பதில் காணலாம். ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை வியந்து எழுதியிருக்கிறேன். அதை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தையும் முன்வைத்திருக்கிறேன். உங்களால் ஒருநாளும் இதை செய்ய முடியாது. பொதுவாய் ஜெயமோகனை நிராகரித்து மட்டியடிக்க மட்டுமே முடியும்.

மீண்டும் உங்களை கேட்டுகொள்வது, உங்களின் இந்த சத்தற்ற குற்றச்சாட்டை பதிவுகள் விவாதகளத்திலேயே மறுத்து, நீங்கள் பதில் எதுவும் கூறாமல், ஒரு வருடம் கழித்து இப்போது சொன்னது போல், தயவு செய்து அடுத்த வருடமும் சொல்லாதீர்கள். மிகவும் எரிச்சல் வருகிறது. மாறாக என் கருத்துக்களை எதிர்கொண்டு நேரடியாய் பேசினால் விவாதிக்க முடியும். அதற்கு உங்களை அழைத்து நீங்கள்தான் வரவில்லை. இத்தனை நாள் உங்களை வாசித்ததில் எனக்கு ஏமாற்றம் மட்டுமே உண்டு. எதையும் விரிவான முறையில் நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பொத்தாம் பொதுவாய் மேலோட்டமான குறிப்புகளை ஒரு அறிவுஜீவி தோரணையில் தீர்ப்புகளாய் தருவதை தவிர வேறு எதையும் நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

இந்த பதிவு ரஜினி என்ற நிகழ்வை பற்றியது அல்ல. சந்திரமுகி படம் குறித்த விமர்சனம். பிறகு ரஜினி குறித்தும், பொதுவாய் வெகுசினிமா குறித்தும் எழுதும் நோக்கம் உள்ளது. ஆனால் என் கருத்துக்கள் பெரிய ஆராய்ச்சி/வாசிப்பின் அடிப்படையில் வருவதல்ல, என் மேலோட்டமான அவதானிப்புகள் மட்டுமே. திறந்த மனதுடன் விவாதத்தை துவங்க மட்டுமே நான் எழுதுகிறேன். விவாதத்தை தொடர நீங்கள் உதவுவீர்கள் என்று எனக்கு நம்பிஉக்கையில்லை.

//first of all rajni is no subaltern, no radical.he is part of the super rich and elite.
but most of the fans who spend few hundreds on his new movie are not.//

ரஜினி சூப்பர் பணக்காரர் என்ற தகவலுக்கு நன்றி.ரஜினி எலீட்டா என்பது பிரச்சனை அல்ல, ரஜினி படங்கள் எலீட்தன்மை கொண்டதா என்பதுதான். இல்லை, கமல் படங்களில் எலீட் தன்மை உண்டு (கமல் படங்களையும் முழுமையாய் எலீட் படங்கள் என்று சொல்வதையும் ஒப்புகொள்ளவில்லை.) ரஜினி படங்கள் எலீட் அல்ல, ஸபால்டர்ன் கூட்டத்தை நோக்கியது. அதை சுரண்டல் என்று சூர்யா போல் நீங்கள் சொன்னால் அதையும் பதிவுகளில் தொட்டிருக்கிறேன். மீண்டும் அது குறித்து ஒரு பதிவு எழுதுகிறேன்.

//fight sequences in films may not be rational or 'defy' science but does it mean that one should not be
critical of them.if you say one should not expect rationality in films, someone can ask why should you look for the same in religion also.if you can accept and enjoy the former why not accept and enjoy anything that is irrational.
you have a very naive understanding of popular culture.you perhaps refuse to see that the irrationality you see in some other spheres is very much here also. //

மீண்டும் ரவிக்கு சொல்கிறேன். irrationality குறித்து நான் எங்கேயுமே பேசவில்லை. மதத்துடன் எனக்கு பிரச்சனை அதன் பகுத்தறிவின்மை அல்ல. மக்கள் தீ மிதிப்பதையும் ஆடு வெட்டுவதற்கும் எதிராய் ஞாநியும் நீங்களும்தான் பேசினீர்கள். நான் அல்ல! ஞாநியை நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.

ஆகையால் என்னை பொருட்படுத்தி கருத்து சொல்வதற்கு நன்றி. ஆனால் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிந்துகொள்ள ,முயற்சி செய்யாமல் கருத்து சொல்வது நியாயமல்ல. பாப்புலர் கல்ச்சர் குறித்து எனக்கு ஆழமான புரிதல் இருப்பதாக நான் சொல்லவே இல்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். விவாதத்திற்கு அழைக்கிறேன். என் மற்ற பதிவுகளை விரும்பிய நண்பர்கள் இதில் கலந்துகொள்ள ஏனோ மனம் வரவில்லை. என் புரிதல் குறித்து தீர்ப்பு அளிக்கும் நீங்கள் உங்களுக்கு இருக்கும் 'ஆழமான' புரிதலை முன்வைக்க ஒருவருடம் முன்னால் கேட்டுகொண்டேன். ஆனால் இன்னும் மட்டையடி தீர்ப்புகளை, மேலோட்டமான பாயிண்டுகளை விட்டு கேட்டுகொண்டிருக்கிறீர்கள். இதை செய்ய இங்கே இணையத்தில் எழுதும் எத்தனையோ பேர்களை போல் உங்களுக்கும் உரிமை உண்டு. அதை அறிவுஜீவு தோரணையில் செய்வது மட்டுமே எரிச்சலை தருகிறது. மற்றபடி பொருட்படுத்தி கருத்து எழுதியதர்கு நன்றி. வெளியே கிளம்புவதால் நிறுத்திகொள்ள வேண்டியிருக்கிரது.

4/24/2005 12:34 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//the problem is one can extend the same logic, i.e the reasoning you have given to most things whether they are worship in temples, rituals, faith in scriptures etc.//

It is at best illogical to extend the same logic! Movies like chandramuki are seen predominantly for entertainment and time pass. They are not seen for the purpose of developing(!) your life, where as going to temples and reading scriptures (if you tend to be a believer) are for the purpose of shaping your personality and leading a good and noble life.

//one cannot support rajnikanth or x or y or anything just because jayamohan opposes that.unfortunately your reasoning is often like this, i support this because someone opposes that//
I don't think Rozavasant had such a silly intent. He has his own views and reasonings!

//if you say one should not expect rationality in films, someone can ask why should you look for the same in religion also//
Religion MUST NOT be seen to encourage irrational things because its followers can go wayward, in such a case. The same cannot be said about films because their impact is far less (forgetting those simpletons who, for example, smoke seeing Rajini smoking in his films) and majority of the public are intelligent enough not to follow the "irrational" things they see in movies!!!!!!

enRenRum anbudan
BALA

4/24/2005 4:11 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Vasanth,

Comment at http://balaji_ammu.blogspot.com/2005/04/23.html

Jsri,
//5. kaalam orunal marum //
What ??????? Grrrrrrrrrrrrr .....

Roza,
You can go 'ALL OUT' and try to find the pallavis for the remaining saraNams :))

BTW, where is the GREAT Icarus ?
Missing in Action ;-)

enRenRum anbudan
BALA

4/24/2005 4:18 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,

//டோண்டு கேட்பதுபோல இந்த கேள்விகள் இருப்பதை கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?
//
டோண்டு அவர்களை இந்த விவாதத்தின் இடையில் இழுத்திருக்க வேண்டாமே!!! டோண்டுவின் பல பின்னூட்டங்களை நீங்கள் நேரடியாக அங்கேயே எதிர்கொள்ளும்போது, இங்கெதற்கு ???

//எங்கே கோடு கிழிப்பது என்று உங்களை போல என்னால் தீர்ப்பு தரமுடியாது. அதை பற்றி விவாதிக்கலாம். எங்கேயோ கோடு கிழித்துத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கே கோடு கிழிப்பது என்று விவாதிக்கலாம், கோட்டை மாற்றி மாற்றி கிழிக்கலாம். அல்லது கோடு என்று ஒன்று திடமாய் தேவையில்லாமால் கூட இருக்கலாம்.
//
மிக மிக அருமையான கருத்து ஒன்றை கூறியிருப்பதாகவே தோன்றுகிறது. இது வாழ்வின் அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்!

//ஜெயமோகன் ரஜினி ரசிகர்களை 'பொறுக்கிகள்' என்று சொன்னதை ஒரு பாசிசமாக பார்பதால், அதை இங்கே ஒரு பாயிண்டாய் குறிப்பிட்டேன்.
//
ஜெயமோகன் தான் கூற வந்ததை சற்று அழுத்தமாக கூற விழைந்ததால், இந்த வார்த்தை தெறித்து விழுந்திருக்கலாம். நீங்களும் சில சமயங்களில் சிலவற்றை ஆணித்தரமாக சொல்லும்போது, இப்படி ஏற்பட்டிருக்கிறது அல்லவா ??????? இருந்தாலும், அந்த வார்த்தைப் பிரயோகம் நிச்சயமாக (என்னளவில்) சரியில்லை!!!

//மக்கள் தீ மிதிப்பதையும் ஆடு வெட்டுவதற்கும் எதிராய் ஞாநியும் நீங்களும்தான் பேசினீர்கள். நான் அல்ல! ஞாநியை நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.
//
இது குறித்து எங்கு / எப்போது விவாதம் நடந்தது? தங்களின் நிலைப்பாடு தான் என்ன ?

என்றென்றும் அன்புடன்
பாலா

4/24/2005 5:59 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/24/2005 11:08 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/24/2005 11:10 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா, டோண்டுவை இழுத்தது தேவையில்லை என்று ஒப்புகொள்கிறேன். டோண்டுவின் பல லாஜிக்குகள் தாளமுடியாத மட்டையடிகள் என்றுதான் நான் நினைக்கிறேன். ரவியும் அதை ஒப்புகொள்வார் என்று நினைப்பதால், ரவியின் லெவல் டோண்டு அளவிலேயே இருப்பதை சுட்டிகாட்டினேன். உதாரணமாய் இங்கே அவர் பயன்படுத்திய லாஜிக்குகள், டோண்டு பெரியாரை முன்வைத்து கேட்கும் கேள்விகளின் லாஜிக்குகளை ஒத்தவை. இதை மிக தெளிவாய் மேட்ச் தெ ஃபாலோயிங் பாணியில் என்னால் விளக்க முடியும். டோண்டுவை தினமும் 100 பக்கமாவது படிக்கும் ஒரு அறிவுஜீவியுடனேயே ஒப்பிட்டேன். அதனால் கேவலமாய் எதுவும் சொல்லவில்லை.

ஞாநி ஜெயலலிதா பலியிடுதலை தடை செய்து சட்டம் கொண்டு வந்ததை பாராட்டி எழுதிய கட்டுரைக்கு எதிர்ப்பாய் திண்ணையிலும் பதிவுகள் விவாத களத்திலும் எழுதினேன். நான் அந்த சட்டத்தை எதிர்க்கிறேன். மிருக பலியை தடுக்க (இன்னும் தீ மிதிப்பதை, குழிமாற்று திருவிழாவை தடை செய்வதற்கும்) ஒரு அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாய் நினைக்கவில்லை. இது போன்ற விஷயங்கள் குறித்து இங்கே எழுதும் பின்னர் நோக்கம் உள்ளது. உங்கள் கருத்துக்கு நன்றி.

ரவி, நீங்கள் சுஜாதா குறித்து 89லியே எழுதியதை நான் படிக்காததற்கு மன்னியுங்கள். நான் உங்கள் எழுத்துக்களை இணையத்தில் கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே படித்து வருகிறேன். (பழைய நிறப்பிரிகையில் ஒரு கட்டுரை படித்துள்ளேன்.) சுஜாதாவையே பொதுவாய் முட்டாள் என்றும், அவரை வாசிப்பவர்களையும் முட்டாள் என்றெல்லாம் நீங்கள் சொன்னதை குரோதம் என்பதாகவே எனக்கு பட்டது. சுஜாதாவை முன்வைத்து நீங்கள் ஜெயமோகனுடன் போட்ட சண்டையை தொடர்ந்து உங்களின் இந்தவகை கருத்துக்களை தொடர்ந்து படித்து வருவதால் அப்படி நினைத்துகொண்டேன். அது தவறாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜெயமோகன் சொன்ன ஒரே காரணத்திற்காக நான் சிலவற்றை எதிர்த்து எழுதுகிறேன் என்பது அடுத்தவர் குறித்த எத்தனை கேவலமான மட்டையடி என்று நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள் என்று தோன்றவில்லை. அதற்கு பதிலாகவே நான் அதை எழுதினேன். மற்றபடி உங்களுக்கு சுஜாதா மீது குரோதம் இருக்கிறதா என்பது பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் ஆராய்ச்சி செய்ய எனக்கு எந்த அவசியமும் இல்லை.

வெகுஜன சினிமா குறித்த விவாதத்திற்கு நீங்கள் உதவுவீர்கள் என்று ஒரு வருடம் முன்னால் நம்பினேன். அதை சொல்லவும் செய்து விரிவாய் எழுத உங்களுக்கு வேண்டுகோளும் வைத்தேன். அதன் பின்னரான விவாதத்திலும், உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்ததிலும் எனக்கு அந்த நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால் இப்போது உங்களின் சந்திரமுகி விமர்சனம் வாசித்த பின் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன். வெறும் நம்பிக்கையின்மை மட்டும் இல்லை. உங்களால் ஒருநாளும் இந்த விவாதத்தில் உள் நுழையவோ, விவாதிக்கும் பொருளை புரிந்து கொள்ளவோ முடியாது என்று தெளிவாக தெரிகிறது. உங்களின் சந்திரமுகி விமர்சனத்த ஒத்த அபத்தமான விமர்சனத்தை குமுதம், விகடன் தொடங்கி வலைப்பதிவில் வந்த எந்த விமர்சனத்திலும் கூட பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். ஆகையால் கருத்து சொல்ல நீங்கள் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. (அது உங்கள் இஷ்டம் மட்டுமே!) நன்றி.

4/25/2005 12:39 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/25/2005 1:27 AM  
Blogger சன்னாசி said...

//(இன்னும் தீ மிதிப்பதை, குழிமாற்று திருவிழாவை தடை செய்வதற்கும்) ஒரு அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாய் நினைக்கவில்லை.//

தீமிதி அவரவர் கால், அதனால் அதைக் கேள்விகேட்பதுகுறித்து நான் கவலைப்படவில்லை. குழிமாற்றில் குழந்தைகளின் விருப்பம் எவ்வளவுதூரம் கேட்கப்படுகிறது/நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும் திறமை அந்த வயதில் அவர்களுக்கு எங்கே இருக்கிறது? மொட்டை அடிப்பது, காது குத்துவது என்று இதை நீட்டிக்கொண்டே போகலாம் எனினும், உயிர் சம்பந்தப்பட்ட விஷயமென்பதால் குழிமாற்றை கேள்விக்குட்படுத்துவது தவறாகப் படவில்லை. தோன்றியதைச் சொல்லிவைக்கிறேன்.

4/25/2005 2:22 AM  
Blogger SnackDragon said...

ரோசா ,
சந்திரமுகி பார்த்தேன். முதல் பத்து நிமிடங்களுக்கு ரசிகர்களோடு சேர்ந்து ரசிகனாய் சேட்டை செய்வதில்தான் எத்தனை ஆனந்தம்! என்ன செய்வது நானும் ரஜினி ரசிகன் தான்.

இனி, வலைப்பதிவில் புளித்த அதைப்பற்றி.

கலை என்று பார்த்தோம் எனில் சில சிறப்பான அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ரஜினியின் நடிப்பில் கதையோடு சேர்ந்து எந்த இடத்திலும் ஓவர் "ஹைப்" செய்யாமல் மிகவும் கதையோடு ஒன்றியே செய்துள்ளார் என்பது கவனிக்கப்படவேண்டியது.

நியாயமாய், 'ஜோதிகாமுகிதான்' சந்திரமுகி. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் , அது மிகை நடிப்புத்தான். ஆனால் இந்த இடத்தில், ஒரு பிளவாளுமையை(ரமணி சொன்னபிறகுதான் எனக்கும் தெரியும், தமிழ் திரயுலகத்துக்கு தெரிந்திருக்குமா என்று எனக்கு சந்தேகம்தான்)வெளிப்படுத்த நிச்சயம் மிகை கலந்த நடிப்பு தேவை அல்லது அப்போதுதான் அந்த மிகை அதன் தனிப்பண்பாய் தெரிய வாய்ப்புள்ளது. (ஆங்கிலத்தில் ரிச்சர்ட் கியர் நடித்த ஒரு படம், அதில் ஸ்பிளிட் பெர்சனாலிட்டியை ஒருவர் இது போல வெறி வந்த மாதிரிதான் செய்திருப்பார்) அதாவது பிளவவாளுமை என்பது சாதரண நிலையிலிருந்து , ஹைபர் நிலைக்கு போவது போன்ற உதாரணங்கள் மட்டும்தான் உள்ளது. அதற்கு எதிமாறான , மேலிருந்து கீழ் என்பது போல படம் நான் பார்த்ததில்லை. ரஜினியின் தர்ம யுத்த்ங்கள் -ல் அவருக்கு அமாவாசையானால், சங்கிலியால் கட்டவேண்டியிருக்கும்.

மிகை நடிப்பு குறித்து யோசித்ததில், இது தூரம் காரணமாகத்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அந் அகாலத்தில், நாடகத்தில் நடிக்கும்போது, பின்னால் தூரத்தில் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் விதத்தில் உரக்கப்பேசி
மிகுன்ட்ன முக பாவணைகளை வெளிப்படுத்தினால் கொஞமாவது ரீச் ஆகும். சரியான உதாரணம், சிவாஜியின் வீரப்பண்டிய கட்டபொம்மன். வீரம் என்றாலே கத்திப்பெசுதல் போன்ர வாசிப்பு சாத்தியப்படும். அதே போல் 'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் ' பாடலின் க்ளோச்-அப்பில், முகத்தை பாவணைகாளாலே நிரப்பி இருப்பார். எனக்கு அது *அஙே* அனாவசியாமய் படுகிறது. இதே வரிசையில், மனோகரா,பராசக்தி, போல பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் பழைய படங்களில் பொதுவான மக்களின் ரசிப்பே அப்படி இருந்னது என்று சொல்ல முடியும். இதுவும் நாடக்த்தில் இருந்து வந்த மரபாக பார்க்கமுடியும். என்றாலும், அந்த காலத்திலேயே நமது நடிகர்கள் ஹாலிவுட்ட்க்கு நமது நடிகர்கள் ரசிகர்களா இருந்து கொஞம் அதே போல் செய்யவும் ஆசைப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே.அதுவும் ஓரளவு காண்ட்ரிப்யூட் செய்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் , இந்த கதைப்படி , 'சந்திரமுகி' ஏற்கன்வே கொலை வெறியில் இருப்பதால் மிகவும் பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஜோதிகா கலக்கி இருந்தார்.அகர முதல , நகர வில்ல என்ற பாடல் சகிக்க வில்லை. அது டுபாக்கூர் பாடல். ஏனெனில் , ஒரு நல்ல டப்பாங்குத்து வரிசையில் அது இல்லை.

4/25/2005 8:48 AM  
Blogger SnackDragon said...

மீதி நாளை

4/25/2005 8:49 AM  
Blogger சன்னாசி said...

//(ஆங்கிலத்தில் ரிச்சர்ட் கியர் நடித்த ஒரு படம், அதில் ஸ்பிளிட் பெர்சனாலிட்டியை ஒருவர் இது போல வெறி வந்த மாதிரிதான் செய்திருப்பார்) //

Primal Fear. Richard Gere & the enormously talented Edward Norton.

4/25/2005 9:20 AM  
Blogger SnackDragon said...

//ஜெயமோகன் ரஜினி ரசிகர்களை 'பொறுக்கிகள்' என்று சொன்னதை ஒரு பாசிசமாக பார்பதால், அதை இங்கே ஒரு பாயிண்டாய் குறிப்பிட்டேன்.//
இது ஜெயமோகனுக்கு மட்டுமே உள்ல பிரச்சினையாய் நான் பார்க்கவில்லை(ஜெய மோகன் பார்க்கிறார் என்பது வேறுவிஷயம்;) இதை மேலவர்கத்து மக்கள் அடித்தட்டு மக்களின் பேரில் வெளிப்படுத்து காழ்ப்புணர்ச்சி என்றே பார்க்கிறேன். இது ஒரு உலக அளவில் நடக்கும் பிரச்சினை, ஆப்பிரிக்க இசையை மட்டமாய் நினைக்கும் மனோபாவமும் நிச்சயம் அமெரிக்காவில் உள்ளது. ஆப்பிரிக்க ரசனையை மட்டமாக நினைக்கும் மனோபாஅவ்மும் உல்ளது. இந்தியாவைப்பொஅறுத்தவரையில் அது, கடவுளை பலியாக்கி, 'சூத்திரர்' ஃபார்முலாவில் இயங்குகிறது. ரசனை என்பதே மேல்தட்டுக்கு உரியது என்று முகமூடி போடுகிறது. அபிரகாம் பண்டிதர் பற்றி நாம் சமீபத்தில் அறிந்ததுதானே? ஜெயமோகனுக்கு கேட்கவேண்டியது என்னவென்றால், கர்நாடக கலையை ரசிக்க பயிற்சி வேண்டும் என்று ஒத்துக்கொன்டால், பயிர்சியோடு, நட்டுபுற கலைகளையோ, கானா - பாடல்களை பயிற்சியோடு ரசிக்க முடியாதா? என்பதுதான்.(தாளத்தை பொறுததவரை எதனோடும் மனம் இணையமுடியும், ஹார்மோனி தாய் மொழியாயின் இன்னும் அதிகம் தான் ஆகவேண்டுமே ஒழிய குறையாது)
இவர்களி சம்ச்கிருத கீர்த்தைனையை தூக்கிபிடிக்க என்ன அடிப்படை என்பது நான் சொல்லத்தேவை இல்லை.

இந்த இடத்தில் 'ராரா' பாடல் காதில் விழுவதால், :-)
ராரா என்பது "ரா" என்ற ஒரே எழுத்து மீண்டும் இரண்டாம் முறை வருவதால் அதன் ஈர்ப்பு அதிகம்.
தமிழில் "வாராய்" என்பதில் எழுத்துக்கள் அதாவது சத்தம் வேறுப்டவதால் கொஞ்சம் ஈர்ப்பு குறைவு.

குறைந்தது "வாராய் நீ பாராய்" என்றோ "வாராய் சரசத்திற்கு வாராய் " என்றோ எழுதியிருந்தால் இந்த ஒலி கொஞ்சம் தெலுங்கைப்போல் ஒட்டி வந்திருக்கும்.
"என்னுயிர் நீயடா , சுவாசமே தீயடா என்பது போல் தொடர்ந்திருக்கலாம்.அர்த்தம் அப்படித்தான் எனக்கு புரிந்தது. ;-) தெலுகு தெலிசி லேது பாவா!! தமிழில் வாராய் என்று அதன் 2-ம் அடி பின் தேடி என்று முடிகிறது. இது எனக்கு நெருடலாய்ப்பட்டது. தெலுங்கில் இருப்பதால் இதன் இசையமைப்பின் விதமும் சேர்ந்து, இதுவும் ஒரு கீர்த்தனைப்போல் படுகிறது. ஆனால் "லக லக" -வுக்கு பிறகு பாடல உடைபட்டுப் பின் மீண்டும் தொடர்கிறது.

கமலின் நாட்டுப்புற கலை மீட்பு என்பது குறித்து பாராட்டித்தான் ஆகவேண்டும். விருமாண்டியில் ஓரளவாவது வெளிப்பட்டிருக்கும்(விருமான்டி கோயில் பாடல் காட்சிகள்).

4/25/2005 9:53 AM  
Blogger ROSAVASANTH said...

ரவி, இதுதான் பிரச்சனை. நீங்கள் ஒன்றை சொல்வீர்கள். அதற்கு ஆதாரம் தர மாட்டீர்கள். நீங்கள் சொன்னதற்கு பதிலாய் நான் எழுதி பலருக்கும் தெரிந்த விஷயத்தை விளக்கி நான் ஆதாரம் தந்துகொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் நான் எழுதிய காரணத்தால்..

சுஜாதா குறித்து நீங்கள் எழுதியது.

" ...is it difficult to find nonsense in sujathas writings.we all know the stupid and
irrelevant comment he made on blogs and bloggers.one can find many absurd, false and totally irrelevant views in his writings and illogic in his works of fiction.i think it is better to catalog them also.and the silly remarks about periyar are too old and stale.some people will neither try to learn nor try to understand and they are fit to be fans of fools only. "

//is it difficult to find nonsense in sujathas writings.we all know the stupid and
irrelevant comment he made on blogs and bloggers.one can find many absurd, false and totally irrelevant views in his writings and illogic in his works of fiction.// இதை படித்தால் சுஜாதாவை முட்டாள் என்று சொல்வதாக எண்ணுவது தவறா என்று நீங்கள்தான் விளக்க வேண்டும். இத்தனை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அதற்கு வேறு விளக்கம் கொடுக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டுகொண்டிருக்கிறேன். 'some people will neither try to learn nor try to understand and they are fit to be fans of fools only." என்று தேசிகனை மட்டும் ஒருவேளை நீங்கள் சொல்லியிருக்கலாம். ஒருவேளை சுஜாதாவை படிப்பவர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிடவில்லையெனில் என் வாக்கியத்தை மாற்றுகிறேன். மன்னிக்கவும்.

உங்களின் சந்திரமுகி விமரசனத்தை, அபத்தம் என்று நினைக்கும் என் கருத்தை, சொல்ல எந்த தேவையும் காரணமும் இல்லை. ஆனால் சந்திரமுகி குறித்த என் விமர்சனம் பற்றிய உங்கள் கருத்திற்கு பதிலாகவே அதை சொல்ல வேண்டியிருக்கிறது. இது மேலோட்டமாக, நீங்கள் சொன்னதால் நான் சொல்லும் ஈகோ என்று தோன்றலாம். ஆனால் விஷயம் என்னை பொறுத்தவரை அதுவல்ல. 'மன்மதராசா' பாடலின் பின் மக்கள் போவது ஒரு சமுதாய சீரழிவு என்று சொல்லு(வதாக நான் வாசிக்கு)ம் போது உங்களால் வெகுஜன சினிமா குறித்த மிக அபத்தமான பார்வையை மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்பது என் கருத்து. நீங்கள் கிண்டலாய் உங்கள் பதிவில் எழுதியது போல் இது உங்கள் அறிவை மட்டம் தட்டி நான் சொல்வது அல்ல.

மாண்ட், கார்திக் கருத்துக்கு நன்றி. பிறகு வருகிறேன்.இப்போது வேலை.

4/25/2005 9:53 AM  
Blogger SnackDragon said...

ரஜினி, ஜோதிகாவின் பிளவாளுமை பற்றி விவரித்து சொல்லும் போது, முதலில் "கூல் டவுன்" எண்ரு சொன்ன காட்சியை, இரண்டாம் தடவை சொல்லும் போது 'ரிலாக்ஸ்' என்று சொல்வார். இது ஒரு , டெக்னிக்கல் ஃபால்ட். இரண்டாம் தடவை ஷூட் செய்வதால் வந்தது? மிகச்சிறிய பிட். நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.

4/25/2005 9:59 AM  
Blogger SnackDragon said...

ஆவி வெர்ஸஸ் மனோதத்துவம் என்பது பற்றி அப்பறம் பாவா! :-)

4/25/2005 10:02 AM  
Blogger SnackDragon said...

வெறும் ' மாண்டி நன்றி -) ப்ரைமல் ஃபியருக்கு

4/25/2005 10:05 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"உதாரணமாய் இங்கே அவர் பயன்படுத்திய லாஜிக்குகள், டோண்டு பெரியாரை முன்வைத்து கேட்கும் கேள்விகளின் லாஜிக்குகளை ஒத்தவை. இதை மிக தெளிவாய் மேட்ச் தெ ஃபாலோயிங் பாணியில் என்னால் விளக்க முடியும். டோண்டுவை தினமும் 100 பக்கமாவது படிக்கும் ஒரு அறிவுஜீவியுடனேயே ஒப்பிட்டேன். அதனால் கேவலமாய் எதுவும் சொல்லவில்லை."

மட்டையடியாகவே பேசி வாழ்ந்தவர் பெரியார். அவரைப் பற்றிய விமரிசனமும் மட்டையடியாகத்தான் வரும். அதற்கு மேல் பெற அவருக்கு யோக்கியதை இல்லை என்று நான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். உதாரணத்துக்கு (இதை நான் ஏற்கனவே என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்):

"11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

யார் இந்த கி.ஆ.பெ.?

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.

அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

இனியேனும் சொல்வாரா?

இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி
வைதிருப்பதே போதுமான சான்றாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி
மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற
'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)"

புலவர்களைப் பற்றியும் மிக மட்டமானக் கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார் பெரியார். அவர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பதே அது. இதில் ஊ.வே.சா. அவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு புலவரிடம் அவர் வர்க்கத்தைப் பற்றித் தான் கொண்டுள்ள இகழ்ச்சியானக் கருத்துக்களை அவரிடம் கடுமையாகக் கூற அந்த ஏழைப் புலவர் (ஆனால் மிகுந்தத் தன்மானம் உடையவர்) "நீங்கள் கொடுத்த எதையும் உண்பதே பாவம்" என்று வெகுண்டு கூறி அவர் எதிரிலேயே தன் தொண்டையில் விரலை விட்டு அவர் உண்ணக் கொடுத்ததை வாந்தியெடுத்து விட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சியைப் பிற்காலத்தில் பெரியார் அவர்கள் வர்ணிக்கையில் "திமிர் பிடித்தப் புலவர்" என்ற அடைமொழியில் அப்புலவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "மோப்பக் குழையும் அனிச்சம்" என்பதைப் பற்றி அவர் படிக்கவில்லை என்றே தெரிகிறது.

"கடவுள் இல்லை, இல்லவே இல்லை - கடவுளை நம்புகிறவர்கள் காட்டுமிராண்டிகள்" என்று மட்டையடியாகக் கூறியவரிடம் மட்டையடியாகத்தான் பேச முடியும். அவர் முதல் மனைவி, அவர் அன்னை ஆகியோர் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் ஆகவே பெரியார் காட்டுமிராண்டிகளுக்கு உறவினர் என்றுதான் பதில் தர முடியும். கற்புடையப் பெண்டிர் சொன்னால் மழை பொழியும் என்றக் கருத்தைப் பற்றிப் பேசும்போது அதை இம்மாதிரி மட்டையிடி வாதம் செய்து "அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இங்கு எந்தப் பெண்ணும் கற்புடைய மங்கையாக இருக்க முடியாது என்று வாதிட்டவரை இவ்வாறுதான் எதிர்க் கொள்ள இயலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/25/2005 12:27 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/25/2005 3:17 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/25/2005 3:28 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/25/2005 3:35 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

I will be happy to receive Ravi's response on this!

http://rozavasanth.blogspot.com/2005/04/blog-post_22.html#111432666497884193

(i.e., my reply to his response to Roza's chandramuki vimarsanam!!!), if he has any.

enRenRum anbudan
BALA

4/25/2005 4:16 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

4/25/2005 4:23 PM  
Blogger ROSAVASANTH said...

ஆனந்தின் கட்டுரை ஓவ்வொருவரிடமும் ஸ்டேட்மெண்டுகளை வாங்கி, மற்ரதுடன் கலந்து கட்டி தனக்கு வசதிபட்ட வடிவத்தில் போடும் வழக்கமான கட்டுரை, அது எவ்வலவு அபத்தமானது என்பது அல்ல பிரச்சனை. தமிழகம் குறித்த அவரது தொடர்ந்த பிரச்சாரத்தின் (கடந்த அசோகமித்திரன், dalits reversed கட்டுரைகளின்) தொடர்சியாகவும் இதை பார்க்க முடியும். ரவி இந்த இந்த சுட்டியை எதற்கு தந்தார் என்று புரியாவிட்டாலும்.

4/25/2005 4:42 PM  
Blogger ஜெ. ராம்கி said...

This may be the No. 1 review of Chandramukhi. Excellent vasanth!

4/25/2005 5:18 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//This may be the No. 1 review of Chandramukhi. Excellent vasanth!
//
What else can one expect from ரஜினி ராம்கி ???
(வெளாட்டுக்குத் தான் சொல்றேன்! இப்ப நீங்க சிரிக்கணும், சரியா :-))

என்றென்றும் அன்புடன்
பாலா

4/25/2005 6:53 PM  
Blogger ROSAVASANTH said...

(காலையின் வந்து அவசரமாய் எழுதிய பின்னூட்டத்தை சற்று திருத்தி கீழே தருகிறேன்.)

ரவி, (முடிந்தால் தமிழில் எழுதுங்கள்.)

சுஜாதா குறித்து உங்கள் கருத்துக்கள் குறித்து இதற்கு முன்பு நான் எங்கேயாவது எழுதியிருக்கிறேனா? அது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. அதை நான் பொருட்படுத்தியதும் கிடையாது.

ஜெயமோகன் ரஜினியை விமசித்த ஒரே காரணத்தால் நான் சந்திரமுகி குறித்து இப்படி ஒரு விமர்சனம் எழுதியதாய் மட்டையடித்தது நீங்கள்! நான் மீண்டும் மீண்டும் சொன்ன பிறகும் அது குறித்த எந்த விளக்கத்தையும் தரவில்லை. இப்படி ஒன்றை சொல்லிவிட்டு, அது குறித்து மேலே எந்த விளக்கமும் தராமல், என் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தந்துகொண்டிருக்கும் போது, "please dont try to distort what i have written.you have written something in a hurry without any evidence.now you try
to substantiate your point.it turns out to be something else." என்று கூசாமல் உங்களால் எப்படி சொல்ல முடிகிறது.

சுஜாதா குறித்த உங்கள் கருத்துக்களை குறித்து எனக்கு என்ன வந்தது? மேலும் எனது பழைய பின்னூட்டத்திலேயே 'என் கருத்து தவறாகவும் இருக்கலாம்' என்று சொல்லியிருக்கிறேன். பிரச்சனை அதுவா?

"one cannot support rajnikanth or x or y or anything just because jayamohan opposes that.unfortunately your reasoning is often like this, i support this because someone opposes that.independent of what jayamohan or somebody says one can
form an opinon." என்று சொன்னதை விளக்கிவிட்டுத்தானே ரவி மற்றதை பற்றி பேசவேண்டும். தனக்கு தரும் நியாயத்தை அடுத்தவருக்கு தராத அகங்காரம் மட்டும்தானே இதில் தெரிகிறது.


மீண்டும் சொல்கிறேன். சுஜாதா குறித்து ரவி எழுதியது எதுவும் எனக்கு முக்கியமில்லை. ஜெயமோகனை முன்வைத்து எல்லாவற்றையும் ஒற்றையாய் பார்பதாய் என்னை சொன்னதால், ரவிக்கு சுஜாதா குறித்து (அவர் என் பதிவில் எழுதியதில்) குரோதம் இருப்பதாய் சொன்னேன். அதன் பிண்ணணியாய் ஜெயமோகனுடன் ரவி நடத்திய சண்டையை காரணமாய் சொன்னேன். இதில் ஆராய்ச்சி செய்து முடிவு சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.

ரவி சுஜாதா குறித்து எழுதிய போது எதிர்வினையாய் அவருக்கு இதை சொல்லியிருந்தால் வேறு விஷயம். நான் சொன்னது ரவி எழுதியதற்கான பதில். அது தவறாகவும் இருக்கலாம். அதை ஆராய எனக்கு தேவையில்லை. ரவியின் இப்போதய விளக்கத்தை எடுத்துகொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முக்கிய பிரச்சனை என்னை பற்றி அவர் சொன்னது. அதுதான் முதலில் வந்தது.

தன்னை பற்றி எழுதும்போது துள்ளி குதிப்பது, மற்ரவரை பற்றி சொல்லிவிட்டு, 'நேரமில்லை' என்று ஓடிவிடுவதாகவே இருக்கிறது, நான் என்ன வேலையத்தா இருக்கிறேன்?

இது இப்படியிருக்க இந்த வெட்டி விஷயத்தை விட்டுவிட்டு பார்த்தால் ரவியுடன் விவாதிக்க எனக்கு எதுவுமே இல்லை. அவரது சந்திரமுகி விமரசனமும், கடந்த பின்னூட்டத்தில் எழுதியுள்ளதும் மிக அபத்தமான ஒரு பொத்தாம் பொதுவான ஒரு எலீட் பார்வை மட்டுமே.

ரவி செய்வது போல் இஷ்டத்திற்கு படங்களை ஒப்பிட்டு பேச முடியாது. (ஒரே வருடத்தில் வெளிவந்த 1952)பைசைக்களில் தீவ்ஸும், பராசத்தியையும் ஒப்பிடமுடியாது - மிகேலாஞ்சலோவின் ஓவியத்தையும், ஆத்மாநாமின் கவிதையையும் ஒப்பிட முடியாதது போல். அல்லது ஜாஸ் இசையையும், கலைஞரின் மேடைபேச்சையும் ஒப்பிட முடியாதது போல். ரவி பதேர் பாஞ்சாலியையும், பராசக்தியையும் ஒப்பிட்டு( அதுவும் ஒரு விளக்கம் தந்த ஒப்பீடு இல்லை, சும்மா வாய்க்கு வரும் ஒரு தீர்ப்பாய்) 'பராசக்தி நல்லபடம், பதேர் பாஞ்சாலி' தலை சிறந்த படம் என்று ஒரு முறை சொல்லியிருப்பார். நான் சொன்னது பதேர் பாஞ்சாலியும், பராசக்தியையும் ஒப்பிடவே முடியாது. காரணங்களை ஓரிரண்டையாவது அடுக்கியிருக்கிறேன் (பதிவுகளில்). இப்போது காதலையும், சந்திரமுகி, ராமை ஒப்பிட்டு தீர்ப்பு தருகிறார். இதெல்லாம் அபத்தமானது.
(மேற்படி விளக்கம் பின்னால் வரும், அல்லது பதிவுகளில் பார்க்கலாம்.)

தமிழ் வெகுஜன திரைப்படங்களை பார்வையாளரை உள்ளடக்காமல் எதுவும் சொல்ல முடியாது. சந்திரமுகி ஒரு ரஜினி படம் என்பதை மறந்து எதுவும் (அதாவது ரவி சொன்னதுபோல் 'சரவணன் கேரக்டருக்கு ரஜினியை விட இன்னொருவர் ஒத்துவருவார்' என்பதுபோல்) பேசமுடியாது. குமுதம். விகடன் விமர்சனத்தில் கூட இந்த விஷயம் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும். ரவி திரும்ப திரும்ப இது நல்லது, இது கெட்டது, 'வித்யாசாகரை விட இளைய ராஜா நன்றாய் இசையமைத்திருப்பார், ஜோதிகாவை விட சிம்ரன் பொருத்தமாய் இருப்பார்' என்று தீர்ப்புகளை தருகிரார். இதில் எந்த தவறும் இல்லை. 'தோசையை விட பீட்சா பிடிக்கும்' என்று சொல்ல ஒருவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால் அதை ஒரு அறிவுஜீவி விமரசன்ம் போலவும், அடுத்தவனை முட்டாளாய் பார்த்துகொண்டு செய்வது மட்டுமே எரிச்ச்சலை கிளப்புகிறது.

எனது மற்ற அவதானிப்புகளை பிறகு எழுதுவேன். மாண்ட் குழிமாற்ரு திருவிழா குறித்து சொன்னது பற்றியும் பிறகு எழுதுகிறேன். இப்போது இங்கிருந்து இரண்டு நாள் விடுப்பு எடுப்பதாய் எண்ணம்.

4/25/2005 6:57 PM  
Blogger ROSAVASANTH said...

ராம்கி கருத்துக்கு நன்றி.

ஆனால் உங்களின் 'புலி பதிவு' எனக்கு ஒப்புதலாயில்லை. இணையத்தில் சந்திரமுகியை தடுக்க முனைந்து (உம்மால் நான் ரெண்டுநாள் பார்க்க முடியாமல் தவித்தேன்) முடியாமல் அந்த கோபத்தில் எழுதியதாக தெரிகிறது. அந்த பதிவு தேவையற்றது (அதில் விஷயமும் கிடையாது), அனாவசியமாய் அது பிரச்சனையையும் கிளப்பியிருக்கிரது என்று நினைக்கிறேன். தவிர்த்திருக்கலாம்!

4/25/2005 7:02 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா சார்,
ரஜினியின் வெகுஜன பாணியை எலீட் கூட்டம் கேவலமானதாக சித்தரிக்கிறது என்கிறீர்கள்..அப்படிப்பட்ட அபத்தவாதிகளை நீங்கள் ஏன் எலீட்-ஆக ஒத்துக்கொள்ளுகிறீர்கள்? பேசாமல் அறிவிலிகள் என்று சொல்லிவிட்டு போகலாமே?

ரஜினியின் படத்தை கண்டிப்பாக பார்ப்பவர்களில் நானும் ஒருவன் .ஆனால் உங்களை போன்றவர்களின் அதீத ஆர்வத்தையும் ,ஆழமான விமரிசனைத்தையும் பெறுமளவுக்கு சந்திரமுகி தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு படமாக கருதுகிறீர்களா?

குட்டி போன்ற அருமையான படங்களுக்கு இத்தனை மெனக்கெட்டு விவாதம் அல்லது விமரிசனம் செய்ததுண்டா? கமல்ஹாசனின் அன்பே சிவம் ,மகாநதி போன்ற படங்கள் இது போல உங்கள் கவனத்தையும் ,விமரிசனத்தையும் பெற்றதா? அத்தகைய திரைபடங்களை பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

நேரமிருப்பின் பதிலிறுக்கவும்.நன்றி!

4/25/2005 7:09 PM  
Blogger ROSAVASANTH said...

ஜோ உடனடியாய் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். குட்டி பார்தேன். மிகவும் பாதித்தது. அன்பே சிவம், மகாநதி மிக நல்ல படங்கள். நிச்சயம் அது குறித்து எழுத வேண்டும். அவற்றோடு சந்திரமுகியும் முக்கியமான படம். ஆனால் வேறு வகையில் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

ஆனால் அன்பே சிவத்தை விட முக்கியமானதா என்று கேட்காதீர்கள். அதைத்தான் இரண்டு பின்னூட்டங்கள் மேலே, இரண்டு படங்களும் வேறு வேறானது, இரண்டையும் ஒப்பிட முடியாது என்று சொல்லியிருக்கிறேன். அன்பே சிவம் ஒரு தளத்தில் இயங்குகிறது, சந்திரமுகி வேறு தளத்தில். எதற்காக இரண்டையும் ஒப்பிடவேண்டும்? கிங் ஃபிஷர் பியர் சாப்பிடுவது ஒரு காரணத்திற்காக, ஜென் படிப்பது வேறு காரனத்திற்காக. இரண்டையும் எதற்காக குழப்ப வேண்டும்?

இதை ஏன் எழுதுனேன், அதை ஏன் எழுதவில்லை என்று கேட்காதீர்கள். இதெல்லாம் அந்த நேரத்து சந்தர்பத்தால் அமைகிறது. பதிவின் துவக்கத்தில் சொன்னது போல், முதலில் எழுத தோன்றவில்லை. எதேச்சையாய் எழுத நேர்ந்தது. அதிகம் யோசிக்காமல் 1மணிநேரத்திற்குள் எழுதிவிட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் நான் செலவழித்த நேரம் அதைவிட 10 மடங்குக்கும் அதிகம். அதாவது ஒரு படத்தை ரசித்து, மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டதற்கு இத்தனை விளக்கம் தரவேண்டியுள்ளது. கருத்துக்கு நன்றி.

4/25/2005 7:21 PM  
Blogger Jayaprakash Sampath said...

//கிங் ஃபிஷர் பியர் சாப்பிடுவது ஒரு காரணத்திற்காக,//

உங்க ஊர்லயும் இதே தானா? ஹ¥ம்ம்ம்ம்..... சென்னைக்குத்தான் விடிவு காலமே கிடையாதுனு மாசத்துக்கு ஒருக்கா பாண்டி போனா, தோக்கியோ நிலைமை அத விட மோசம் போலிருக்கே...

4/25/2005 8:40 PM  
Blogger ROSAVASANTH said...

இகாரஸ், கிங் ஃபிஷர் என்று எல்லோருக்கும் புரிவதற்காக சொன்னேன். ஸப்போரா, ஆஸாகி என்று ஏகப்பட்ட வகைகள். நான் விரும்புவது எபிஸு. மேலும் இப்போது கோடை தொடங்க போவதால்தான் பியரை தேட வேண்டியுள்ளது. குளிர்காலத்திற்கு, ஸாகே, ஸோசு என்றும், அருகில் உள்ள கடையில் உலகின் எல்லா மதுவகைகளும் அவைலபிள். பல நாடுகளின் கொடியைவிட மதுவகையே எனக்கு அதிக பரிச்சயம்.

எப்போதவது நம்ம ஊரை ஞாபகப்படுத்திகொள்ள இந்தியக்கடைகளில் கிங் ஃபிஷர் அருந்துவதுண்டு.

4/25/2005 9:23 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

தற்சமய நிலைமைப்படி, ரோசாவின் பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை 68 (இதையும் சேர்த்து!). அதை நூறுக்கு எடுத்துச் சென்று விட்டால், சந்திரமுகி நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்று என் மனதில் ஓர் எண்ணம்! நான் நினைத்தவை பலமுறை பலித்தும் இருக்கிறது. நல்லது அதிகமா, கெட்டது அதிகமா என்றெல்லாம் எக்கு தப்பாக கேட்டு ஓர் பின்னுட்ட இழையை யாராவது ஆரம்பிக்கலாம் ;-)

ரோசா,
இப்ப பாருங்கள்! நம்ம ராம்கியும், ஐகாரஸும் (இன்ன பிற ரஜினி ரசிகர்களும்) பின்னூட்டம் மேல பின்னூட்டமிட்டு எண்ணிக்கையை எங்கேயோ எடுத்துட்டுப் போயிடுவாங்க :-)

நீங்களும் "100 பின்னுட்டங்கள் கண்ட அபூர்வ பதிவுக்கு" சொந்தக்காரர் என்று காலரை சற்று தூக்கி விட்டுக் கொள்ளலாம் ;-)

இது இப்பதிவுக்கான எனது ஏழாவது பின்னூட்டம், ஏதோ என்னால முடிஞ்சது :))

என்றென்றும் அன்புடன்
பாலா

4/25/2005 9:29 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா சார்,
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி.

4/25/2005 11:16 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/26/2005 3:08 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

4/26/2005 3:10 AM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

4/26/2005 3:59 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

4/26/2005 5:48 PM  
Blogger ROSAVASANTH said...

கிழ்கண்ட சுட்டியின் பராசக்தி/பதேர் பாஞ்சாலி விவாதத்தை கவனித்து நான் திரித்திருக்கிறேனா என்று அறியலாம். இந்த சுட்டியில் தொடங்கி மேலே படிக்கலாம்.

http://www.geotamil.com/forum/topic.asp?TOPIC_ID=6&whichpage=13


ரவி: இலக்கியத்தில் ஒரு காலகட்டத்திற்குப் பின் குறிப்பிட்டு சொல்லும்படி திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை.உலகின் நவீனத்துவ எழுத்துகளைக் கூட அது தமிழில் தரவில்லை.பராசக்தி முக்கியமான திரைப்படம்,அதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் திராவிட இயக்க திரைப்படத்தின் அடுத்த கட்டம் எம்.ஜி.ஆர் படங்களாக மாறிவிட்டது. வசனத்தை விட காட்சி,திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்ரீதர்,பாலச்சந்தர், பின்னர் மகேந்திரன் எனப் பலர் வெவ்வேறு பாதைகளில் சென்றனர்.உதிரிப் பூக்கள் முக்கியமான திரைப்படம்.திரைப்படம் என்ற கலைவடிவத்திற்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பு ஒரு கட்டத்துடன் நின்றுவிட்டது.இது போல்தான் இலக்கியத்திலும். என்னுயிர்த் தோழன் திராவிட இயக்கத்தின்
அரசியல் குறித்த ஒரு விமர்சனம். வேதம் புதிது சாதியம் குறித்து விமர்சிக்கிறது. இத்தகைய திரைப்படம்
ஒன்றை ஏன் திராவிட இயக்கத்தினால் தர முடியவில்லை என்பதுதான் கேள்வி.சுய விமர்சனம் என்பது
திராவிட இயக்கத்தில் இல்லை.....

....சில வாரங்கள் முன்பு ஆனந்த விகடனில் வைரமுத்து நியுயார்க்கில் வாசித்த கவிதை வெளியாகியிருந்தது.
அதையும் பிரமீளின் e=mc2 கவிதையையும் ஒப்பிடுங்கள்.வைரமுத்து வாசித்தது மோசமான பிரச்சாரக் கவிதை.அதை விட சிறப்பான பல கவிதைகளை நான் உதாரணம் காட்ட முடியும்.உ-ம் வியட்நாம் போர் போது வைத்திஸ்வரன் எழுதிய கவிதை.பிரமீள் கவிதை தமிழின் முக்கியமான கவிதை, உலகத்தரமான கவிதை.
வைரமுத்துவின் கவிதை வாஜ்பாய்க்கு ஜால்ரா போடும் முயற்சி.


நான் எழுதியது : ரவியின் பதில் நிதானமான தொனியில் சமனுடன் அமைந்திருந்தது. எனக்கும் அதில் பெருமளவு ஒப்புதல் உண்டு. திராவிட இயக்கத்தின் பங்களிப்பு ஒரு கட்டத்துடன் நின்றுவிட்டதையும், சுயவிமர்சனம் இல்லாதது போன்று அவர் குறிப்பிடுவதுடன் ஒப்புதல் உண்டு. ....

....ரவி எழுதியுள்ளது மீண்டும் தட்டையான ஒற்றைபரிமாண பார்வைதான். நான் சொன்னதையும் அவர் புரிந்து கொண்டதற்கான் தடயம் எதுவும் இல்லை. உதாரணமாக வைரமுத்துவின் கவிதையையும், பிரமீளீன் E=MC^2ஐயும் ஒப்பிட சொல்கிறார். ஒப்பிட்டு தீர்ப்பும் சொல்லியிருக்கிறார். இதைபோல ஒரு அபத்தம் இருக்கமுடியாது. வைரமுத்து எழுதுவது வேறு வாசகருக்கு, வேறு ஒரு தளத்தில். பிரமீள் எழுதுவது வேறு ஒரு தளத்தில். எதையும் ஒப்பிட முயலும் முன் ஒப்பிடகூடியதா என்று சோதித்து கொள்வது முதலில் அவசியம். வாசகரை விட்டு விட்டு படைப்பை பேசமுடியாது என்று இரண்டு முறை ஏற்கனவே சொல்லியிருகிறென். ரவிக்கும் அது தெரியும். ஆனாலும் கண்டு கொள்ளாமல் இப்படி அபத்தமாய் ஒப்பிட சொல்கிறார்.

...அதே பார்வையை வைத்துகொண்டுதான் பரசக்தி நல்லபடம், பதேர் பாஞ்சாலி தலைசிறந்த படம் என்று தரம் பிரிக்கிறர். ஏன் ரவி இன்னும் ஒரு படி மேலே ஐன்ஸ்டீன் சொன்னதையும், பிரமீள் கவிதையையும் ஒப்பிடவில்லை என்று புரியவில்லை....

...நான் சொல்வது, சொன்னது, இது போன்ற ஒப்பிடல்கள், தரம் பிரித்தல்கள் சாத்தியம் இல்லை. நான் மந்திரிகுமாரியை மிகவும் ரசித்து பார்த்தேன். பதேர்பாஞ்சாலி பார்த்துவிட்டு ஒரு வாரம் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தேன். இந்த இரண்டு அனுபவங்களையும் வைத்துகொண்டு ரவியின் தீர்பிற்க்கு நான் வந்தடையவில்லை.....

...ரவியை பொறுத்தவரை உலகபடங்கள் என்று ஒன்று இருக்கிறது. அதற்க்கான் பொது தரம் ஒன்று உண்டு. அதில் சில சேரும், சில சேராது. நான் இது போன்ற conceptகளை மறுக்கிறேன். இந்த வகையில்தான் ரவிக்கும், ஜெயமோகனுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளை சுட்டிகாட்டினேன். மீண்டும் இது குறித்து எழுதலாம். (இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும், சுந்தரராமசாமி உலக இலக்கியம் ஒன்றை எழுத போவதாக சொன்னது குறித்து பிரமீள் பேசும்போது `நாம் என்ன இப்போது செவ்வாய் கிரகத்திலா இருக்கிறோம்?' என்று கேட்டார்.)

ரவி மீண்டும் சொன்னது:....நான் என் கருத்தைத்தான் சொல்ல முடியும்.அது ஜெயகாந்தன் அல்லது ஜெயமோகன் கருத்தை ஒத்ததா
என்று யோசித்து சொல்லமுடியாது.ரோசா கவனமாகப் படித்தால் வேறுபாடுகள் புரியும்.ஜெயமோகன்
பராசக்தியை அல்லது மந்திரிகுமாரியை ஏற்பாரா இல்லை பிரச்சாரபபடம் என்று நிராகரிப்பாரா என்பதை
உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

...பராசக்தியையும் நான் ஏற்கிறேன், பதார் பாஞ்சாலியையும் ஏற்கிறேன்.திரைப்படம் என்ற கலைவடிவத்திற்கு அவற்றின் பங்களிப்பினை யோசிக்கும் போது பின்னது சிறப்பானது என்று கருதுகிறேன்.

நான் சொன்னது: ரவி அடுத்தவர் சொல்வதை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி எடுத்தால் ஒழிய பேசுவதில் பயன் இருக்க போவதில்லை. நான் ரவிக்கும், ஜெயமோகனுக்கும் வேறுபாடுகள் இல்லை என்று சொல்லவில்லை. அப்படி வேறுபாடுகள் எதுவும் இல்லையெனில் நான் ரவியை ஜெயமோகன் என்றுதான் கூப்பிடுவேன். பராசக்தி, மந்திரிகுமாரி குறித்து ஜெயமோகன் கருத்தை அறிய பெரிய ஊகம் எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே தெரிந்ததுதான். நான் சொன்னது ரவி பராசக்தி, பதேர்பஞ்சாலி இரண்டையும் ஒப்பிட வைத்திருக்கும் `algorithm', ஜெயமோகன் வைத்திருப்பதிலிருந்து அதிகம் வேறுபடவில்லை என்பதுதான். நான் இந்த ஒப்பிடல்கள் சாத்தியம் இல்லை என்று சொன்னேன். ரவி இரண்டையும் ஒப்பிட என்ன வழிமுறை வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். மறுபடியும் சொன்ன அதே விஷயத்தைதான் எழுதியிருக்கிறார்.....

....பராசக்தி ஒரு மிக பெரிய மக்கள் கூட்டத்தை பார்வையாளர்களாய் கொண்டு, முப்பது வருடங்களாய் ஒரு எம்.ஜி.ஆர் படம் போல் பத்து தடவைக்கு மேல் ஓடிவிட்டு சென்றது. படத்தின் முக்கிய அம்சம் வசனம். படம் முனவைக்கும் மற்ற பிரசாரம், எதிர்மதிப்பீடுகள் எல்லவற்ரையும் விட இந்த வசனமே படத்தில் பிரபலத்திற்க்கு காரணமாய் சொல்லலாம். வசனம் என்பது பொதுவாய், `நல்ல படங்கள், உலக படங்கள்' என்று சொல்ல படுபவனற்றுள் அதிக முக்யத்துவவம் தரப்படாத விஷயம். பதேர்பஞ்சாலி சமாச்சரமே வேறு. அது பார்க்கபட்ட இடம் இந்த கலைச்சினிமா தாகம் கொண்டவர்களும், இன்னும் பல இடங்களில் பிரத்யேக காட்சிகளாகவும் ஆங்கில ஸப்டைட்டில் வைத்துகொண்டு பலரால் பார்க்கபட்ட விஷயம். சப்டைட்டில் வைத்துகொண்டு பரசக்தியை பார்கமுடியுமா? (பெங்காலிகள் பதெர்பாஞ்சாலியை எப்படி பார்த்தார்கள் என்பது வேறு விஷயம்). இரண்டு சினிமாகளையும் தனிதனியாய் போட்டு ஒப்பிட்டு பரிசு குடுப்பது அரசாங்கம் அல்லது இன்னோரு நிறுவனத்தின் வேலை. அந்த பார்வைதான் ரவியிடம் வெளிபடுகிறது.

இதற்கு பிறகு ரவி எதுவும் சொல்லவில்லை. குறிப்பாய் எப்படி பதேர் பாஞ்சாலி/ பராசக்தியை ஒப்பிட்டார் என்று சொல்லவில்லை. இங்கே உள்ளதில் எனது தேர்ந்தெடுப்பு உள்ளது. அதனால் ஆர்வமுள்ளவர்கள் மேலே உள்ள சுட்டியில் தொடங்கி, அடுத்தடுத்த பக்கத்திற்கு சென்று பார்க்கவும்.

4/26/2005 6:24 PM  
Blogger ROSAVASANTH said...

விசிதா, உங்களுக்கெல்லாம் புத்தியே வராதா? முட்டாள்தனத்தை இவ்வளவு பெருமையாய் வெளிப்படுத்துவதை போன்ற அவலம் உண்டா?

4/26/2005 6:54 PM  
Blogger ROSAVASANTH said...

பல விஷயங்கள் குறித்து எழுத தொடங்கி, பாதியில் நின்றுகொண்டிருக்கிறது. உதாரணமாய் தசாவதாரம்/பரிமாண அறிவியல் குறித்து இரு பத்திகள், வெங்கட்டின் குவாண்டம் கணணி கட்டுரை (புத்தகம் அல்ல) குறித்து இரண்டு பத்திகள் என்று எழுதி அரைகுறையாய் நிற்கிறது. இதற்கிடையில் சந்திரமுகி பார்த்த உற்சாகத்தில் அப்படியே ஒரு மணிநேர காலத்திற்குள் இந்த பதிவு எழுதப்பட்டது. அது விரிவான விமர்சனமோ, ஆய்வு கட்டுரையோ அல்ல. ரஜினி என்ற ஆளுமை அதன் பாதிப்புகள் குறித்து ஆராய கூட அதில் முனையவில்லை. அனுபவித்து பார்த்த படம் குறித்து, அந்த தருணத்தில் தோன்றியதை அப்படியே ஜாலியான ஒரு மனநிலையில் எழுதியதற்கு இத்தனை விளக்கம் தர நேர்வது மலைப்பாக இருக்கிறது.

சந்திரமுகி அனுபவித்து பார்பதால், படம் குறித்து நேர்மறையாய் விமர்சனம் எழுதுவதால், படையப்பா படத்தில் வரும் பெண்களை கேவலப்படுத்தும் காட்சிகளை ஒப்புகொள்வதாய் அர்த்தமில்லை. ரஜினி மீது வேறு விமர்சனமில்லை என்றும், சினிமாவிற்கு வெளியில் ரஜினியின் அரசியல் குறித்தும் நல்ல கருத்து வைத்திருக்கிறேன் என்றும் அர்த்தமில்லை. சுந்தர மூர்த்தி ரஜினி குறித்து எழுதிய பதிவு எனக்கு ஒப்புதலானது. அந்த கட்டுரையை பாராட்டி பின்னூட்டமிட்டதுடன் வாக்கும் அளித்துள்ளேன். கடந்த தேர்தலில் ரஜினிக்கு மக்கள் ஆப்பு வைத்ததை ஒரு நல்ல முடிவாய் சொல்லியிருக்கிறேன். (அதே நேரம் அப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான பாமக வெற்றி பெற்றதிலும் சந்தோஷப்பட எதுவும் இல்லை என்றும் எழுதியிருக்கிறேன்.) ( http://anathai.blogspot.com/2004/05/rosavasanth_108444778549284818.html ) இந்த காரணங்களால் சந்திரமுகி பார்த்து அனுபவித்து அதை எழுத கூடாது என்று ஒரு கொள்கை முடிவிற்கு வர முடியவில்லை. மேலும் நான் ரஜினி படம் பிடிக்காதவர்கள் குறித்து நான் எதையும் சொல்லவரவில்லை. அது அவரவர் உரிமை. ரஜினியை கொண்டாடுவதை கேவலமாய் (மீண்டும் சொல்கிறேன் கேவலமாய்) பார்க்கும் மனோபாவத்தை மட்டுமே விமர்சிக்கிறேன். இதை பொடிச்சிக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்.

எனது பதிவு பல நண்பர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. தங்கமணி தான் முரண்படுவதை மின்னஞ்சலில் விரிவாய் எழுதியுள்ளார். (அதற்கு இன்னும் பதில் எழுத முடியவில்லை.) சங்கரபாண்டியும் எழுதியுள்ளார். இருவரின் கருத்துடனும், சங்கரபாண்டி சுந்தரமூர்த்தியின் பதிவில் பின்னூட்டமாய் எழுதியதுடனும் முரண்படுகிறேன். அதை பின்னர் முன்வைக்கிறேன். பொடிச்சி முரண்பட்டுள்ளார். அது நான் எதிர்பார்க்காதது அல்ல. அவர்களுடன் என்னால் உரையாட முடியும். ஆனால் ரவியின் தொனி (மற்றும் அவரை போலவே கருத்து சொல்லும் விசிதா எழுதியது) மட்டும் எரிச்சலை கிளப்புகிறது. அவர் என்னை பற்றி தரும் தீர்ப்புகள் மட்டுமே நாக்கை பிடுங்குவது போல் எதாவது கேட்கவேண்டும் என்ற உணர்விற்கு இட்டுசெல்கிறது.

ரஜினி ராம்கி சந்திரமுகியை முன்வைத்து புலிகளை பற்றியும் இன்னும் ஈழத்தமிழர்கள் பற்றியும் எழுதியது ஒரு பொறுப்பற்ற செயல் என்று நினைக்கிறேன். சென்ற வாரம் இணையத்தில் சந்திரமுகி பார்க்க கிடைப்பதை தடுக்க அவர் முயன்றது எனக்கு தெரியும். (அவராலேயே பாதி படம் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மண்டைகாய வேண்டி வந்தது.) அது நிறைவேறாத கோபத்தில் அவர் அந்த பதிவை எழுதியிருக்கிறார் என்பது என் புரிதல்(வெறும் ஊகம் மட்டுமே). அதற்காக செய்திகளை உறுதிபடுத்தாமல் சொல்வதும், சொல்லிவிட்டு கடைசியில் சிரிப்பு வருவதாய் சொல்வதும், ஈழத்தமிழர்/இந்திய தமிழர் குறித்த அவர் மட்டையடியும் கண்டிக்கதக்கது. இன்னும் அவர் தளத்தின் பின்னூட்டங்கள் அத்தனையையும் படிக்காவிடினும் இதை சொல்லி வைக்கிறேன்.

வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் சில நாட்கள் வலைப்பதிவுகளை விட்டே தள்ளியிருக்க முடிவு செய்துள்ளேன். நண்பர்களின் பதிவுகளையும் பிறகு படிப்பேன். இங்கே பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

4/26/2005 7:38 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,
இந்த நீ ..... ண்ட விவாதத்தில் என்னுடைய "பல்லவியும் சரணமும் - பதிவு 23" விடயத்தில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விட்டீர்களே?

பதிவதே உங்களைப் போன்ற
ஆர்வலர்களுக்காகத் தானே :)) கூற விட்டதற்கான விடைகளையும் பதித்து விட்டேன்! Pl. check in my blog.

http://rozavasanth.blogspot.com/2005/04/blog-post_22.html#111443217044196
134
---- விசிதா குறிப்பிட்ட rediff பக்கத்தை படித்தால், 100 நாட்கள் ஓடுவது கஷ்டம் போல்
தோன்றுகிறதே, நான் நினைத்தது பலிக்காதோ??????

http://rozavasanth.blogspot.com/2005/04/blog-post_22.html#111441337340290
144
--- உங்களுக்காவது ரவி சற்று மெனக்கிடுகிறார். என் கருத்துக்களுக்கு மறுமொழி இடவில்லை (ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தேன்!)

என்றென்றும் அன்புடன்
பாலா

4/26/2005 8:28 PM  
Blogger ROSAVASANTH said...

எதிர்பார்த்தது போல் ரவி தனது பின்னூட்டத்தை நீக்கிவிட்டதால் என் பதிலையும் நீக்க வேண்டியதாகி விட்டது. பதிவுகள் விவாதம் பொதுவாய் பயன்படும் என்று விட்டு வைத்திருக்கிறேன். (என் பின்னூட்டத்தில் சில வார்த்தகளை மாற்றலாம் என்று நினைத்தேன். இப்போது அதற்கு தேவையில்லை.)

பாலா, மன்னிக்கவும். இங்கேயே நேரம் வீணாகிவிட்டதால் உங்கள் பக்கம் வர முடியவில்லை. நன்றி!

4/26/2005 9:19 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

4/26/2005 10:12 PM  
Blogger trainzeiro said...

sorry,

can't read you :-(

4/26/2005 10:12 PM  
Blogger ROSAVASANTH said...

விசிதாவுடன் பேசும் விருப்பமின்மை காரணமாய் அவருக்கு எழுதியதை நீக்கியுள்ளேன்.

4/27/2005 10:09 AM  
Blogger ROSAVASANTH said...

//கமலின் நாட்டுப்புற கலை மீட்பு என்பது குறித்து பாராட்டித்தான் ஆகவேண்டும். விருமாண்டியில் ஓரளவாவது வெளிப்பட்டிருக்கும்(விருமான்டி கோயில் பாடல் காட்சிகள்). //

கார்திக், உங்களுக்கு இதை குறிப்பிட ஏன் தோன்றியது, குறிப்பிட்டு எதை சொல்கிறீர்கள் என்று தெரியாவிட்டாலும், இந்த கருத்தை நானும் வேறு ஒரு சந்தர்பத்தில் சொல்ல இருந்தேன். நீங்கள் சொல்லும் கோவில் காட்சிகள் தவிர விருமாண்டியில், அப்பச்சி இறந்தவுடன் தண்ணியடித்து, மண்ணை தன்மீது பூசிகொண்டு பேசும் வசனங்கள் தமிழ்சூழலில் மிகவும் தேவையானது. 'மண்தான் அப்பச்சி' என்று அவர் சொல்வதெல்லாம் ஆழந்த குறியீடுகள். கமலும் நடிப்பில் கலக்கியிருப்பார். விருமாண்டி குறித்து நானும் குறிப்பிட இருந்த விஷயத்தை நீங்களும் குறிப்பிட்டதால் எழுதினேன். என் தளத்தில் உங்களுக்கு பதில் எழுத முடியாமல் போய்விட்டது.

4/27/2005 10:10 AM  
Blogger ROSAVASANTH said...

மிக தீவிரமாய் மாறிவிட்ட நெருக்கடிகள் காரணமாக, இப்போது தொடங்கி மேமாத இறுதிவரை வலைப்பதிவுகளை விட்டு விலகியிருக்க முடிவு செய்திருக்கிறேன். ஏற்கனவே இது போன்ற முடிவுகளை எடுத்து செயல்படுத்த முடியவில்லை என்றாலும், இந்த முறை தீவிரமாய் தமிழ்மணம் பக்கமே ஒரு மாதம் வராமல், பதிவுகளை படிக்காமல்(அதிலும் அதனால் உந்தப்பட்டுமே அதிக நேரம் செலவாவதால்), எதையும் எழுதாமல், வேலையில் மட்டும் ஈடுபடுவதாக உள்ளேன். அதனால் இது நடக்கும் என்று நினைக்கிறேன். பிறகு சந்திப்போம். வாசித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

4/28/2005 2:02 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Vasanth,
Pl. visit my blog for "pallaviyum saraNamum" atleast :-)

Otherwise, use this short break for your official work and spending more time with your son.

enRenRum anbudan
BALA

4/28/2005 3:36 PM  
Blogger Vijayakumar said...

//இப்போது தொடங்கி மேமாத இறுதிவரை வலைப்பதிவுகளை விட்டு விலகியிருக்க முடிவு செய்திருக்கிறேன். //

அப்ப்ப்ப்ப்ப்ப்பபபாட.... ;-))

4/28/2005 4:06 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா, உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஆனால் ஒன்றை படிக்க தொடங்கினால், மற்றது, அதை தொடர்ந்து பின்னூட்டம் அளித்தல், எதிர்வினையாக எழுத தொடங்குதல் என்று தொடர்கிறது. மொத்தமாய் ஒரு 'மதக்கடமை' போல் விலகியிருப்பதை தவிர வேறு வழியில்லை. தமிழில் சில லட்சம் பாடல்கள் இருக்கின்றன. அதனால் பிறகு சந்திக்கலாம்.

விஜய், மே மட்டும் இல்லாது இன்னொரு மாதமும் நிம்மதியாய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு மேல் உத்தரவாதம் தரமுடியாது. சுவாரசியமாய் சென்ற உங்கள் நட்சத்திர வார பதிவுகளையும் இதனால் படிக்க முடியாதது வருத்தமே. பிறகு பார்க்கலாம், நன்றி.

5/02/2005 2:06 PM  
Blogger ROSAVASANTH said...

சந்திரமுகி குறித்த இந்த பதிவு சில மாற்றங்களுடன் கட்டுரையாக்கப்பட்டு பதிவுகளில் வெளிவந்துள்ளது.

ரஜினி ராம்கி என்னை கேட்டுகொண்ட காரணத்தினாலேயே இது அனுப்பப் பட்டது என்பதால் அவருக்கு அதற்கு நன்றி. பொடிச்சியும், சங்கரபாண்டியும் தெரிவித்த கருத்தை ஒப்புகொண்டு தொடக்கத்தில் சில மாறுதல்கள் செய்துள்ளேன். அதற்கு அவர்களுக்கு நன்றி. ரவி ஸ்ரீனிவாஸின் கருத்துக்கள் காரணமாய் ஜெயமோகன் குறித்து என்ன சொல்ல வருகிறேன் என்பதை இன்னும் தெளிவாய் கோடிட்டு காட்டும் வண்ணம் கூட இரண்டு வரிகள் சேர்துள்ளேன்.(ஜெயமோகன் சொன்னதை முன்வைத்து எழுதும்போது அது குறித்து இன்னும் விரிவாய் பார்க்கலாம்.) அதற்கு அவருக்கு நன்றி.

http://www.geotamil.com/pathivukal/cinema_santhiramuki_rosavasanth.html

5/02/2005 4:11 PM  
Blogger மாயவரத்தான் said...

என்னா தலீவா? ரொம்ப வருஷமா ஆளையே காணும்?!

5/15/2005 12:25 PM  
Blogger கொழுவி said...

மூச்சுப் புடிச்சா செஞ்சுரி போடலாம்.

5/15/2005 10:32 PM  
Blogger ROSAVASANTH said...

விலகியிருந்தாலும் அளித்த இரு பின்னூட்டங்கள். இதற்காகத்தான் படிக்க கூட வரக்கூடது என்று நினைத்தேன்.

http://ravisrinivas.blogspot.com/2005/05/blog-post_15.html

சினிமாவில் சிகெரெட் பிடிப்பதை காட்டக்கூடாது என்று அன்புமணி சொல்வதெல்லாம் பச்சை பாசிசம். ரவி இதைத்தான் சொல்லுவார் வேறு எதையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. பெயரிலி சுந்தரவடிவேலிடமிருந்து இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. சுந்தரமுர்த்தி இந்த பதிவின் பொதுவான தொனியை ஆதரிக்கிறாரா என்று புரியவில்லை.

அன்புமணி சொல்வதால் ஆதரிக்கவும் எதிர்க்கவும் சிலருக்கு காரணம் இருக்கலாம். அதற்காகவே பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? இதற்கும் சிவசேனாக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
(என் விரிவான கருத்தை இப்போது எழுத முடியாது.)

http://nandalaalaa.blogspot.com/2005/05/blog-post_10.html

அன்புள்ள நந்தலாலா,

வேலை மற்றும் குடும்ப அழுந்தங்கள் காரணமாய் வலைப்பதிவு விவாதங்களில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்களின் இந்த குறிப்பிட்ட மற்றும் இதை தொடர்ந்த பதிவுகளுக்கும் என் ஆதரவை தர மட்டுமே இதை எழுதுகிறேன். இதை முக்கியமாய் நினைத்து செய்ய காரணம் பொதுவாய் முற்போக்கு என்று சொல்லி கொள்பவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனத்தை செய்ய தயங்குவதும், அந்த வேலையை இந்துத்வ சார்புடையவர்கள் மட்டுமே செய்யும் அவலம் காரணமாகவும், உங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதை முக்கியமானதாய் நினைக்கிறேன்.

நேசக்குமாருடன் எனக்கு பெரிய அளவில் உடன்பாடுகள் கிடையாது என்றாலும் அவர் இஸ்லாம் குறித்து ஒரு விவாதத்தை தொடக்கியபோது என் ஆதரவை தெரிவித்தேன். அவரை விட உங்களுடன் பெருமளவில் உடன்படுகிறேன். நான் சொல்லும் முறையும் வார்த்தைகளும் வேறுபடுமே தவிர கிட்டதட்ட நீங்கள் உங்களுடன் முற்றிலுமே உடன்படுகிறேன். இஸ்லாம் மீதான விமர்சனபூர்வமான பார்வையின்மை இந்துத்வத்திற்கு உதவுமே தவிர எந்தவிதத்திலும் எதிர்க்க உதவாது. அதற்கான தார்மீகத்தையும் சந்தேகத்திற்குள்ளாக்கும். அந்த வகையில் ஒரு இந்துத்வவாதியில்லாத உங்கள் பார்வைக்கான ஆதரவை தர மட்டுமே இந்த பின்னூட்டம். சில மாதங்களில் என் கருத்துகளை விரிவாய் எழுத உத்தேசமுள்ளது. நன்றி.
(உங்கள் அடுத்த பதிவு காணாமல் போய்விட்டது. நீண்ட தலைப்பு வைக்காதீர்கள்.)

5/17/2005 2:51 PM  
Blogger ROSAVASANTH said...

மாய்ஸ், இரண்டுமாதம் எழுதுவதற்கு விடுப்பு அளிக்கும் உத்தேசத்தில் உள்ளேன். மஸ்ட் டூ, எந்த சென்சுரியை சொல்கிறீர்கள். சந்திரமுகி நிச்சயம் செஞ்சுரி போடப்போகிறது. பின்னூட்டத்தில் செஞ்சுரி போடுவதெல்லாம் வெறும் புக் கிரிக்கெட் வேலை!

5/17/2005 2:55 PM  
Blogger ROSAVASANTH said...

http://arunhere.com/pathivu/?p=21

அருணின் பல கருத்துகளுடன் நான் வேறு படுவதை சுட்டிக்காட்ட தேவையில்லை. இந்த பதிவில் அருண் எழுதியதுடன் உடன்படுகிறேன். அன்புமணியிடம் வெளிப்படுவது அதிகாரத்திமிர். திரைப்படத்தில் சிகரெட் படிப்பதை காட்டக்கூடாது என்று சொலவ்தெல்லாம் பச்சை பாசிசம். சிவசேனாவின் ஃபயர்பட எதிர்பிற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

5/17/2005 3:17 PM  
Blogger வன்னியன் said...

பயர் படப்பிரச்சினையையும் சிகரெட் குடிப்பதையும் ஒரே தளத்தில் வைக்கிறீர்களா?
சரி.
அன்புமணியின் செவ்வியில் எல்லாவற்றையும் எதிர்க்கிறீர்களா? அல்லது குறிப்பிட்டவற்றை மட்டுமா? எனில் அந்தக் குறிப்பிட்டவைகளைச் சொல்ல முடியுமா?
இது எனக்குத் தேவையில்லாதது. என் நாட்டினதோ 'இனத்தினதோ' பிரச்சினையில்லை.
சிலவற்றை அறியும் ஆவல்தான். குறைந்த பட்சம் உங்கள் கருத்தை.
இன்னொரு சந்தேகமுமுண்டு. இதைச்சொல்வதில் தயக்கமுமில்லை.
ரவி எழுதினதாலேயே அது எதிர்க்கப்பட வேண்டியதாய் உங்களுக்குத் தோன்றுகிறதோ என்பதே அது.

5/17/2005 3:42 PM  
Blogger ROSAVASANTH said...

வன்னியன்,

எழுதியதற்கு விளக்கம் தருவதிலும், மறுமொழிக்கு எதிர்வினை தருவதும் வேலையை பாதிப்பதால் இரண்டு மாதம் எழுதாமல் இருக்க முடிவு செய்தேன். உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு மட்டும் பதில் தருகிறேன் -சுருக்கமாக.

1.ஃபயர் படபிரச்சனையும் சிகரெட் குடிப்பதையும் நான் ஒரே தளத்தில் வைக்கவில்லை.ஃபயர் படத்தை சிவசேனா எதிர்த்தற்கும், பாபா படத்தில் சிகரெட் குடிக்கும் காட்சிகளை முன்வைத்து பாமக காட்டிய எதிர்பையும் இன்னும் சொல்லவேண்டுமானால் பாய்ஸ் படத்தை புலிகள் தடைசெய்ததையும் (விமர்சிப்பது அல்ல) ஒரே தளத்தில் வைத்துதான் பார்கிறேன். இதில் பாய்ஸ் பட எதிர்ப்பும்,ஃபயர் பட எதிர்ப்பும் தெளிவாய் கலாச்சார ஒழுக்கம் சார்ந்தவை. அதிகாரத்திலிருந்து செய்யும்போது அது பாசிசம் என்று நினைக்கிறேன். (படம் குறித்து விமர்சனம் செய்வது என்பது வேறு). அன்புமணி இங்கே சுகாதாரக்கேடு குறித்து பேசினாலும், 'சிகரெட் குடிப்பதாய் காட்டப்படும் காட்சிகளை தடை செய்ய போவதாய்(ஒரு அதிகாரத்திலிருந்து சொல்வது) பச்சையான பாசிசம். அன்புமணி மட்டுமல்ல, ஜெயலலிதா சிகெரெட் குடிப்பதை, பான்பராக் விற்பதை தடை செய்ததையும் பாசிசமாகத்தான் பார்கிறேன். (இதை ஜெயலலிதாவின் சட்டத்தை மட்டுமே குறிப்பிடுகிறேனே ஒழிய யார் இங்கே வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பது அல்ல என் கருத்து.) இது குறித்து விரிவாய் எழுத முடியும். எழுதுவேன். இப்போது சாத்தியமில்லை.

2. நான் பாமகவிற்கு ஆதரவாக வெகுகாலமாய் கருத்து கொண்டிருப்பவன். பாமக மற்றும் ராமதாஸ் உருவாக்கிய எழுச்சியை ஒரு சபால்ட்ர்ன் எழுச்சியாக பார்கிறேன். பாமக மீது மற்றவர்கள் முன்வைக்கும் காழ்ப்பை சாதி வெறியாக பல சந்தர்பங்களில் பார்கிறேன். பாமக மீதான முக்கிய குற்றச்சாட்டான 'மரம் வெட்டியதை' நான் ஒரு விஷயமாகவே பார்கவில்லை. இந்த விஷயத்தில் கவனித்தீர்கள் என்றால் வீரவன்னியன் தொடங்கி பலரும் அதை ஒரு தவறானதாக எடுத்துகொண்டே நியாயங்களையும் காரணங்களையும் சொல்கிறார்களே ஒழிய, அதையே நேர்மறையான ஒன்றாய் பார்க்க முடியவில்லை. ஆனால் நான் அதையே நேர்மறையாய் பார்கிறேன். மரம் வெட்டியதை ஒரு எதிர்ப்பு உத்தியாக பார்கிறேன். அகிம்சை போராட்டம் எந்த பயனையும் தரபோவதில்லை(உதரணம் நர்மதா) என்ற யதார்தத்தில் பாமகவின் உத்திகளை பல இனகுழுவினரும் பயன்படுத்தினால் தவறில்லை என்பதே என் கருத்து. (அதன் விளைவாய் அல்லது அதை சாக்கிட்டு வெளிப்பட போகும் அரசு வன்முறையை கருத்தில் கொண்டு, பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்க முடியவில்லை).
நான் பாமகவை எதிர்த்து வந்தது சற்று காலம் முன்னர் வரையிலான, விடுதலை சிறுத்தைகளை முன்வைத்த, தலித் எதிர்ப்பு நிலைபாடுகளை முவைத்து மட்டுமே. அதை மழுங்கடிக்கும் வகையிலான அவர்களின் தமிழ் அரசியலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுவும் ஒரு நல்ல காரணத்திற்கே.

ஆனால் அன்புமணியின் இந்த பேட்டியில் பாரட்ட எனக்கு எதுவுமே இல்லை. ரஜினியை வழிக்கு கொண்டுவந்துவிட்டோம், விஜயகாந்தை கவனிப்போம் என்பதெல்லாம் திமிர் மட்டுமே. சிகெரெட்டினால் உண்டாகும் கெடுதல்களை பிரச்சாரம் செய்வது வேறு விஷயம். அது குறித்த (புகையிலை பயிரிடுதலை முன்வைத்த)சூழல் கேட்டை விளக்குவது வேறு விஷயம். சினிமாவில் அதை தடை செய்வதாக சொல்வதும், பொது இடத்தில் முற்றிலுமாக( கவனிக்கவும் முற்றிலுமாக) தடை செய்வதும் பாசிசம் மட்டுமே. இது குறித்து என் வாதங்களை சொல்ல ஒரு பெரிய கட்டுரை தேவைப்படும். பிறகு அதை எழுத உத்தேசமுள்ளது.

3. ரவி சொல்லுவதால் மட்டும் இதை எதிர்க்கும் அளவிற்கு முட்டாளாய் இருக்கிறேனா என்று தொடர்ந்து என் பதிவை படித்து நீங்கள் முடிவு செய்யலாம். எனக்கு ரவி சொல்வதால் ஒன்றை எதிர்கும் மூர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ரவி என்னுடனான சண்டை முடிந்து அனாதை,மற்றும் நாராயணனின் பதிவில் முன்வைத்த எதிர்வினையுடன் எனக்கு உடன்பாடு உண்டு(அவர் சொன்ன தொனியுடன் முற்றிலும் முரண்பாடு உண்டு). எனக்கு அவரிடம் தனிப்பட்ட காழ்ப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக அவருடன் இந்த சினிமா தொடர்பாக சண்டை வருவதும் அதில் எனக்கு எரிச்சல் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த முறை அது தீவிரமாகி விட்டது. இப்படி தீவிரமாகி அவருடைய தொந்தரவு நீங்குவதும் எனக்கு விருப்பமானதே என்பதால் நான் ஜாக்கிரதை உணர்வை கைக்கொள்ளவில்லை. அவருடய தொனி காரணமாய் என்னால் தவிர்த்திருக்கவும் முடியாது. அவ்வளவுதான்.

மற்றபடி இப்போது அவருடன் போய் பேசினால், நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் (ஏற்று கொள்வது அல்ல), சொன்னதையே குறிப்புகளாய் ஏதாவது சொல்லுவார். அதனால் பயன் எதுவும் இருக்காது.

அவருடைய இந்த பதிவை எடுத்துகொண்டால், அவர் சினிமா/தொலைக்காட்சியில் சிகரெட் பிடிப்பதை தடை செய்வதில் உள்ள சட்ட பிரச்சனையை பேசுகிறாரே ஒழிய, தார்மீக பிரச்சனை குறித்து பேசுவதில்லை. ரவி இதே போன்ற கருத்தை ஏற்கனவே சொல்லியுள்ளார். குடிப்பது, கஞ்சா அடிப்பதை கூட ஒரு சீரழிவாகவே அவர் பார்கிறார்(அதன் பிரச்சனைகளை பேசுவது என்பது வேறு). பாரதி கஞ்சா அடித்ததை ஒரு குறையாகவே அவர் பார்கிறார். நான் பாரதியின் தேடலின் ஒரு பகுதியாக அதை பார்கிறேன். ரவியால் இந்த பார்வையை ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சோ/சங்கராச்சாரி பார்வையை மீறி அவர் எதுவும் சொல்ல வாய்பில்லை என்றே நான் நினைக்கிறேன். இப்படி நினைப்பதால் அவரிடம் முரண்படுகிறேனே ஒழிய, அவர் மீதான காழ்ப்பினால் இப்படி நினைக்கவில்லை. அதற்கு காரனமும் இல்லை.

அதனால் அன்புமணி சினிமாவில் சிகெரெட்டை தடை செய்ததை கண்டிக்காமல் அதை அவர் ஆதரிப்பதிஒ எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. மற்ற நண்பர்களும் ஆதரிப்பது தாங்காமல்தான் என் மௌனத்தை உடைத்து சின்னதாய் சொன்னேன். உங்கள் கேள்விக்கு நன்றி. பிறகு மீண்டும் சந்திப்போம்.

5/17/2005 4:59 PM  
Blogger வன்னியன் said...

நன்றி.
வாசித்தேன்.

5/17/2005 5:16 PM  
Blogger ROSAVASANTH said...

சுந்தரமூர்த்தி சொன்னது: அன்புமணி/ராமதாஸ் முதல் உலகச் சுகாதார நிறுவனம் வரை புகைப் பிடிப்பதற்கெதிராக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத் துறையோடு சம்பந்தப்பட்ட இவர்களுக்கு இதைச் சொல்ல தகுதியும் உள்ளது.

அன்புமணி இப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற அவதாரத்தில் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.அவர் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஒரு ஜனநாயக அமைப்பில் அமைச்சர். பொதுநலத்தை முன்னிட்டு சில முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. அவர் எடுக்கும் முடிவுகளின் நல்ல/தீய விளைவுகளுக்கு அவரும் பொறுப்பு. அவர் அங்கம் வகிக்கும் அரசும் பொறுப்பு. அதைப் பாராட்டுவோர் பாராட்டலாம். அது அபத்தமாக இருந்தால் யாரும் தாராளமாக விமர்சிக்கவும் செய்யலாம். அதற்காக சினிமாவில் சிகரெட் குடிப்பதைத் தடை செய்வது எப்படி பாசிசம் ஆகும் என்று புரியவில்லை.

எதற்கெடுத்தாலும் கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று எகிறி குதிப்பது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மட்டும் எதைச் சொல்லவும், எதைச் செய்யவும் எங்கிருந்து அதிகாரத்தைப் பெற்றார்கள் என்று தெரியவில்லை. (எப்பேர்பட்ட கொம்பனான எழுத்தாளனாக/கலைஞனாக இருந்தாலும் "படைப்பாளி" என்று கடவுளுக்கு நிகராக வைத்து ஒளிவட்டம் சூடிக்கொண்டு மற்றவர்கள் வாயைப் பிளந்துகொண்டு அண்ணாந்து பார்க்கவேண்டும் என்பது எனக்கு உவப்பானதல்ல). பொதுக் களத்தில் கருத்து சொல்பவனுக்கு சுதந்திரம் இருப்பது போல சிலத் தார்மீகப் பொறுப்புகளும் உண்டு. சுதந்திரத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு பொறுப்பைக் காற்றில் பறக்கவிடுவேன் என்றால் பொதுநலத்தை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சியோ, அரசமைப்போ குறுக்கிடும் கடமையும், உரிமையும் உண்டு. இது திரைப்படங்களுக்கு பெயர் வைக்கும் விவகாரத்துக்கும் பொருந்தும். சினிமாவில் புகைப்பிடிக்கும் விஷயத்துக்கும் பொருந்தும். ரஜனிகாந்துக்கும் பொருந்தும். இவர்களின் அக்கறை கலையிலா, காசிலா என்றுகூட பிரித்தறிய இயலாமல் கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்வது. (இது தனிப்பட்ட யாரையும் நோக்கி எழுதப்பட்டதல்ல. பொதுப்படையாக சொல்லப்பட்டது).

இந்தப் பதிவின் மூல விஷயத்தைக் குறித்தும், பிரகாஷ், ரோசாவசந்த் ஆகியோர் எழுப்பிய கேள்விகள் குறித்தும் விரிவாக வார இறுதியில். இப்போதைக்கு வசந்தின் கேள்விக்கு சுருக்கமான பதில்: ரவி எழுதிய பதிவின் மூலக்கருத்துடன் ஒத்துப் போகிறேன்.


ரோஸாவசந்த்:சுந்தரமூர்த்தியின் பதிலை நான் நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. என் கருத்தை ஏற்கனவே சொன்னாலும் சுருக்கமாக மீண்டும்.

ஏற்கனவே சொன்னதுபோல் புகைபிடிப்பதற்கு எதிராக பிரசாரம் செய்வது வேறு. திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சியை தடை செய்வது வேறு. இரண்டாவதையே நான் பாசிசம் என்றேன்.

குழலிக்கு நான் எதையும் புரிய வைக்க முடியாது என்றே நினைக்கிறேன். அவர் செய்யும் தர்க்கத்தை நான் வேறு வார்த்தையால் அழைத்து வருகிறேன். (தயவு செய்து என்னை 'வணக்கத்திற்குரிய' என்று அழைக்க வேண்டாம்.)

பாசிசம் என்பது குறிப்பிட்ட மக்களின் இருப்பை நிராகரிப்பது அல்லது கேள்விகுள்ளாக்குவது. பிரகாஷ் சொன்ன உதாரணத்தில் சிவசேனா பெண்களின் இருப்பை கேள்விகுள்ளாக்குகிறது. இதையே நந்தலாலாவின் 'தலாக்..தலாக்..' பதிவில், பர்தா அணிவதை *கட்டாயபடுத்துவதை* நியாயப்படுத்தி வாதங்களை முன்வைத்தவர்களும், கணவனுக்கு கட்டாயபடுத்தும் உரிமை உண்டு என்று சொன்னவர்களும் வேறு வார்த்தைகளில் செய்கிறார்கள். ஜெயமோகன் ரஜினி ரசிகர்கள் அத்தனை பேரையும் 'பொறுக்கிகள்' என்று சொல்லும்போதும் அதையே செய்கிறார். சிகெரெட் குடிப்பதையே ஒரு சீரழிவாய் கருதி, அதை சினிமாவில் தடை செய்யும் போதும் அதுவே நிகழ்கிறது. சிகெரெட் குடிக்கும் ஒரே காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்க படுகிறது.

பாசிசம் என்பதற்கு முசோலினி கட்சி தொடங்கியபோது என்ன பொருளில் முன்மொழிந்தார் என்று பார்த்து நான் பேசவில்லை. ஒரு விரிவான அர்தத்திலேயே பேசியுள்ளேன். ஹிட்லரின் பாசிசம் அறுபது லட்சம் யூதர்களையும்,பல பல அரிய உயிர்களையும் வாங்கியது. அது பாசிசம் என்று சொன்னால் எல்லோரும் ஒத்துகொள்வார்கள். ஆனால் கருவறையில் இன்னார் நுழையகூடாது என்று சொல்வதும் பாசிசம் என்று சொன்னால் பலர் அதற்கு எதிராக வாதங்கள் தரக்கூடும். 'அதுவும் இதுவும் ஒன்றா' என்று இங்கே கேட்கும் பல வாதங்கள் அதை ஒத்ததாகவே இருக்கிறது. யோசித்து பார்த்தால் கருவறையில் நுழைய அனுமதியின்மையை எப்படி பாசிசம் என்று சொல்ல முடியும்? இதில் யாரும் கொலை செய்யபடுவதில்லை. அதைவிட முக்கியமாய் இங்கே *பார்பனரல்லாதவனே தனக்கு தகுதியில்லை என்று தானே நினைக்க கூடும்*. ஆகையால் அனுமதியில்லை என்ற வாத்ம் கூட செல்லுபடியாகவில்லை என்று சொல்ல முடியும். சொல்கிறார்கள்! சாதியமும் பார்பனியமும் பாசிசம் இல்லை என்று வாதங்களை முவைக்கிறார்கள். ஆனால் இந்த வாதத்தை நண்பர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வசதிப்படாது.

சுந்தர மூர்த்தி பொறுப்புணர்வு வேண்டும் என்று சொல்லும் அதே வாதத்தைத்தான் (அப்படியே இதே வாதத்தைதான்) ஃபயர் பட எதிர்ப்பில் சிவசேனா சொன்னது. பயர் படம் மூலம் பெண்கள் விடுதியில் எல்லாம் ஒருபாலுறவு பிரபலமாகும் என்றும் சொன்னது. சிகெரெட்டை காட்டும் சினிமாவை தடை செய்யலாம், ஒருபாலுறவை காட்டும் படத்தை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தால் அது பாசிசம் என்று சுமு நினைக்கிறாரா என்று புரியவில்லை. ஒருவேளை சிவசேனாவின் ஃபயர் பட எதிர்ப்புடனும் அவரும் ஒத்து போகிறார், அதில் தவறு எதுவும் காணவில்லை என்றால் மேலே பேச எதுவும் இல்லை. பயர்/வாட்டர் படம் ஓடலாம், அங்கே பொறுப்புணர்வு பற்றி பேச சிவசேனாக்கு அதிகாரம் கிடையாது, சிகெரெட் குடிப்பதை தடை செய்ய அன்புமணிக்கு மட்டும் உரிமை உண்டு என்று நினைத்தால் அதற்கு என்ன வாதம் வைத்திருக்கிறார் என்று அறிய விரும்புகிறேன்.

என்னை பொறுத்தவரை இதில் வித்தியாசம் பார்க்கவே முடியாது. சிகெரெட் குடிப்பவனை மாபாதகனாய் இங்கே வர்ணிப்பதை போன்ற அபத்தத்தை நிச்சயம் நான் சுந்தர மூர்த்தியிடம் எதிர்பார்க்கவில்லை. கிட்டதட்ட 15 வருடமாய் மாபாதகனாய் இருந்த ஒருவனுடன்(நான்தான்!) நட்பு வைத்ததற்கு அவர் வருத்தப்பட்டு கொள்ளலாம். (ஒருவேளை நான் சினிமாவில் சிகெரெட்டுடன் நடித்தாலோ, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாலோதான் ரஜினி அளவிற்கு மாபாதகனாக ஆகமுடியுமோ என்னவோ!)

என்னை பொறுத்தவரை பாய்ஸ் படத்தை புலிகள் தடை செய்ததும் பாசிசம் என்றே நினைக்கிறேன். அது பாசிசம் அல்ல என்றுதான் ரவியும் சுமுவும் நினைக்க கூடும். மேலும் அதற்கு வக்காலத்து வாங்கவும் கூடும். ஆனால் பாய்ஸ் படத்தை தடை செய்த பார்வைதான் எத்தனையோ பாலியல் தொழிலாளர்களை ஈழத்தில் கொன்று போட்டது. (இதை புலிகள் மட்டும் செய்யவில்லை. எல்லா இயக்கத்தவர்களும் செய்திருகிறார்கள்.)

அன்புமணியிடன் சர்வாதிகாரம் கிடைத்தால் என்ன செய்யகூடும் என்பதுதானே கேள்வியே ஒழிய, சர்வாதிகாரமாய் வந்தால் மட்டுமே பாசிசம் என்று சுமு நினைக்க கூடுமேனில், அதைவிட இன்னும் 'ஜனநாயக பூர்வமாய்' நடைமுறை படுத்தப்படும் சாதியம் குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. ரஜினிக்கு சிகெரெட் குடிக்க உரிமை இல்லையெனில், தீபா மெஹ்தாக்கு ஃபயர் படம் எடுக்கவும் உரிமை இல்லைதான். ஆனால் இங்கே எல்லொருக்கும் தங்கள் வசதிக்கு ஏற்ப பேசும் நோக்கம் மட்டுமே இருக்கிறது.

என்னை பொறுத்தவரை சிகரெட், புகையிலை சமாச்சாரங்கள் பற்றிய பிரச்சனை மிகவும் சிக்கலானாவை. அதை ஆதரிக்கவோ பிரச்சாரம் செய்யவோ நிச்சயம் முடியாது. எதிராக பிரச்சாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை முற்றிலும் நீக்குவது சாத்தியமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, அதை எது வந்து பதிலீடு செய்யும் என்று தெரியாது. ஒருவேளை ஒரு சமுதாயத்திற்கு சிகெரெட்டும் கஞ்சாவும் சாராயமும் பாலியல் தொழிலும் தேவையானதாய் கூட இருக்கலாம். அதை நீக்குவது ஆபத்தானதாய் கூட இருக்கலாம். (அப்படித்தான் என்று அடித்து சொல்லவில்லை. கஞ்சாவை திடீரெனெ தடை செய்தால் (அதாவது உண்மையான அர்தத்தில் தடை செய்தால்) அது எத்தனை பெரிய பாதிப்பை சமூகத்தில் உண்டாக்கும் என்று எனக்கு தெரியும்.) இங்கே இதன் சிக்கலகளை பேச யாருக்கும் எண்ணம் இல்லை. மேலோட்டமாக பொறுப்புணர்வு என்று ஜல்லியடிப்பதெல்லாம் எரிச்சலை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

சிகரெட் எதிர்ப்பின் பின் இருப்பது வெறும் சுகாதார உணர்வு மட்டுமல்ல. தமிழ் சமூகத்தின் சநாதன உணர்வும் உள்ளது. தமிழ் சமூகத்தின் வெளியே போனால் (உதாரணமாய் பெங்காலி சமூகத்தில்)சிகெரெட் கலாசாரத்துடன் ஒன்றி போனது. எனினும் இங்கே அதுவெல்லாம் பிரச்சனையில்லை.

ஒரு சினிமா பாத்திரங்கள் எப்படி சித்திரிக்க படவேண்டும், இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்று அரசும் அமைச்சரும் சொல்வது, ஒருவேளை பாசிசம் வார்த்தை பிடிக்கவில்லை என்றால் ஸ்டாலினிசம் என்று சொல்லிகொள்ளலாம். அதை குறிப்பிட்ட மக்களின் இருப்பை மறுப்பது, கேள்விகுள்ளாக்கும் வகையில் செய்வது பாசிசம் என்ற வார்த்தையால் மட்டுமே என்னால் குறிக்க முடியும். அகராதியில் பாசிசத்திற்கு இதுதான் அர்த்தமா என்று தெரியாது. நான் இந்த பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறேன். மீண்டும் ஒருமுறை இதில் என்ன பாசிசம் என்று கேட்டால் பதில் சொல்லும் உத்தேசம் இல்லை.

ஆனால் தெளிவாக அன்புமணி ஆதரிப்பவர்களுக்கு சிவசேனாவை குறை சொல்ல எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று மட்டும் சொல்லிகொண்டு இது குறித்து மேலே பேசுவதிலிருந்து இப்போதைக்கு விலகி கொள்கிறேன். நன்றி.

//எதற்கெடுத்தாலும் கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று எகிறி குதிப்பது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மட்டும் எதைச் சொல்லவும், எதைச் செய்யவும் எங்கிருந்து அதிகாரத்தைப் பெற்றார்கள் என்று தெரியவில்லை//

இதே கேள்வியைத்தான், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலில் போதெல்லாம் அவர்கள்(ஆமாம் அவர்கள்) கேட்டார்கள். இப்போது ரவியும் சுந்தரமூர்த்தியும் கேட்கிறார்கள். வேடிக்கைதான்! காலம் எதையும் செய்யகூடியது.

5/18/2005 2:44 PM  
Blogger ROSAVASANTH said...

http://ravisrinivas.blogspot.com/2005/05/blog-post_15.html

'சுகாதார உணர்வு, சுகாதார அமைப்பு இதை முன்வைத்தெல்லாம் பதில் வரும் சாத்தியம் உள்ளதால் ஒரு நினைவூட்டல் மட்டுமே.

என் கருத்துக்கள் அத்தனையும், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தடை செய்வதை, அதை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டுள்ளது என்பதை வாசக பெருமக்கள் அனைவருக்கும், கவனம் திசை திரும்பாமலிருக்கும் பொருட்டு நினைவூட்டுகிறேன். வேறு எதையும் மையப்படுத்தி நான் பேசவில்லை.

ஒரு வழியாய் நானே 100வது பின்னூட்டத்தை எழுதி இந்த புக் கிரிக்கெட் வேலையை செய்துள்ளேன். யாரேனும் பதில் எழுதினால் இரு மாதங்கள் கழித்து வந்து அதை எதிர்கொள்வேன் என்று சொல்லி மிண்டும் விடைபெறுகிறேன்.

5/18/2005 3:09 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza,
Congrats on hitting your FIRST CENTURY :)) It has been due for a LONG TIME from YOU !

A big fight has been going on in my blog for posting some information on Chandramuki's success !!!

enRenRum anbudan
BALA

5/18/2005 5:32 PM  
Blogger Vijayakumar said...

ரெண்டு மாசம் கழிச்சி பதில் சொல்லுவேன்னு சொன்னாலும் நீங்க இந்த பின்னூட்டத்தை பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அதுக்காகவே கேட்க வந்ததைக் கேட்டுட்டு ஓடிப் போயிறேன்.

"ரோசா எப்படியிருக்கீங்க? பையன் என்ன பண்றான்?"

5/18/2005 6:43 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், இந்த விவாதம் குறித்துதான் இரண்டு மாதம் கழித்து என்று சொன்னேன். நான் நலம், வேலை நெருக்கடிகள் மட்டுமே! பையன் மிக மிக உற்சாகம்! தலைவரின் உற்சாகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. உங்கள் துணையும், செல்வமும் இணைந்துவிட்டார்களா? உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

பாலா, உங்கள் பதிவை பொதுவாய் பார்த்தேன். பின்னூட்டங்களை படிக்கவில்லை.

5/18/2005 7:19 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,
//"ரோசா எப்படியிருக்கீங்க? பையன் என்ன பண்றான்?"
//
மன்னிக்கவும். கேட்க மறந்து விட்டேன் !!!

மற்றபடி, இந்த "சினிமாவில் சிகரெட் பிடிக்கத் தடை" விடயத்தில், உங்கள் தர்க்கங்களை (எதிர்ப்பை!!) மிக அருமையாக, அமர்க்களமாக முன் வைத்துள்ளீர்கள் என்று நான்
நினைக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு வந்து, ஒரு நல்ல innings ஆடியிருக்கீங்க !

அதே போல், உபயோகமில்லாத கருத்துக்களுக்கு எதிர்வினை தராமல் இருப்பதை (இந்த விவாதத்தில் நீங்கள் செய்திருப்பதாகவேஎண்ணுகிறேன்!!) கடைபிடித்தால், நேரவிரயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

5/18/2005 8:13 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா கருத்துக்கு நன்றி.

வேலைக்கு வந்து http://ravisrinivas.blogspot.com/2005/05/blog-post_15.html#comments விவாதத்தை தொடர்ந்ததில் பதில் சொல்லுவதை கட்டுபடுத்த முடியவில்லை. இனி முற்றிலும் விலகுவதை தவிர வேறு வழியில்லை. ரவியின் பதிவில் எழுதியது கீழே!

(நேற்று வேலைக்கு வரவில்லை, வீட்டில் இணய இணைப்பும் இல்லை. இப்போதுதான் பார்க்க முடிந்தது.)

நேரடியாக இல்லாவிட்டாலும், பிரகாஷுக்கு சொல்வது போல் எனக்கும் சேர்த்து பதில் சொன்ன ரவிக்கு நன்றி.

பாசிசம் என்று நான் ஒன்றை அழைப்பதை மற்றவர்கள் ஒப்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கே வேறு ஒரு வார்த்தை கிடைத்தால் அதை பயன்படுத்த முடியும். மற்றபடி ரவி சொல்வது போல் சிவசேனா (இங்கே பிரகாஷ் குறிப்பிடும் காரணத்திற்கு) ஃபாசிஸ்ட் என்றால், 'செந்தமிழ் நாட்டு தமிழச்சியே' பாட்டு எழுதிய வைரமுத்துவும் பாசிஸ்ட்தான். அதைவிட மிக நிச்சயமாக ஃபர்தாவை *கட்டாயப்படுத்தும்* வாதங்களை முன்வைக்கும் முஸ்லீமகளும் பாசிஸ்ட்தான். அதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதே நேரம் பர்தா அணிவதை *முழுமையாய்* ஒரு அரசு தடை பண்ணுமாயின் அதுவும் பாசிஸம்தான்.

நான் பாசிசம் என்பதற்கு என் பாணியில் விளக்கம் தந்திருந்தேன். பாசிசம் என்பது அதுவல்ல என்று ஒருவர் தாரளமாய் நினைக்கட்டும். அல்லது நான் குறிப்பிடும் பிரச்சனைக்கு/என் விளக்கதற்கு வேறு பெயர் வைக்கட்டும். பிரச்சனை அதுவல்ல. நான் பேசிய (விளக்கமாய் அளித்த)விஷயம் இங்கே பொருந்துகிறதா, குறிப்பிட்ட மக்களின் இருப்பு பிரச்சனைக்குள்ளாகிறதா, அதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதுதான் கேள்வி. அதைவிட்டு விட்டு மேற்கோள்கள் ஆதாரங்களை அள்ளிபோடும் வேலையையும், மற்றும் அசட்டு கிண்டலையும் மட்டுமே ரவி (எதிர்பார்த்தபடி) அளித்திருக்கிறார். இப்படி ஏதாவது நடக்கும் என்றுதான் கருவறையில் ஒருவரை (மனத்தால்)தடை செய்யும் பார்பனியம் கூட பாசிசமில்லை என்று ஒருவர் வாதிடக்கூடும் என்று சொன்னேன். மற்றபடி பாசிசம் குறித்து இதுவரை நடந்துள்ள விவாதங்களை எல்லாம் படித்து விட்டுதான் பேச வேண்டும் என்றால் விவாதம் செய்வது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, அப்படி படித்த பின்னும் சிலருக்கு அதனால் எந்த பயனும் விளைவதில்லை என்று அறிய முடிகிறது என்பதானால் அது குறித்து மேலே சொல்ல எதுவுமில்லை.

நான் வலைப்பதிவு விவாதங்களிலிருந்து விலகியிருக்கவே விரும்பினேன். தமிழ்மணம் 3நாட்களாய் பார்காமல் செவ்வாய் பார்த்தபோது, ரவியின் பதிவில் அன்புமணியின் 'சினிமாவில் சிகெரட்டை தடை செய்யும்' பேச்சிற்கு சுவ, பெயரிலி, சுமு போன்றவர்கள் கூட ஆதரவாய் பேசியிருப்பதை பார்த்த பின்பே, எழுத தோன்றியதால் எழுதினேன். அதற்கு பின் அருணின் பதிவில் போய் அதற்கு ஆதரவாய் பின்னூட்டமிட்டேன். அது சரியானது அல்ல என்று உடனேயே தோன்றியது. அருணின் பதிவிற்கு இருக்க கூடிய உள்நோக்கம், பாரபட்சம் ஆகியவற்றை மனதில் கொண்டு நான் அதை செய்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். இப்போது அனைத்தையும் பரிசீலிக்கையில் அது மட்டுமே தவறு என்று நினைக்கிறேன். தவிர பாசிசம் என்பதற்கு வேறு வார்த்தை பயன்படுத்தியிருக்கலாம். அந்த சமயத்தில் வந்து விழுந்தது. மேலும் இப்போதும் பொருத்தமான வார்த்தை கையிலில்லை. சென்ற பின்னூட்டத்திலேயே பாசிசம் என்பதற்கு அகராதி அர்த்தம் கொண்டு நான் பேசவில்லை என்று சொன்ன பின்னும் கிண்டலடிக்க படுவதால் இதை சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் பிரச்சனை நிச்சயமாய் அதுவல்ல. பாசிசம் என்று எதை சொன்னேனோ அதுதான் முக்கியம்.

சுந்தரமூர்த்தி கேட்ட இரண்டு கேள்விகளும் மிக முக்கியமானவை. எனக்கு இது குறித்து கருத்துக்கள் உண்டு, சொல்லமுடியும். ஆனால் அதற்கும் இந்த விவாதத்திற்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் குழலி கேட்டதுபோல் 'ரோட்டில் ஆடையின்றி போகமுடியுமா?' என்பது போன்ற வாதங்களுக்கு மட்டுமே இது இட்டு செல்லும். இங்கே பிரச்சனை 'வைத்தால் குடுமி, சிரைச்சா மொட்டையா' என்பது அல்ல. நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை புகை பிடிக்கிறது. அவர்களில் 99%மக்களுக்கு அதன் நேரடி, நிகழ்கால, வருங்கால பாதிப்பு தெரியும் என்றாலும், அதன் தீமைகள் குறித்து அதனால் மற்றவர்களுக்கு வரகூடிய பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்யலாம். விளம்பரம் தொடுக்கலாம். ஆனால் அவர்கள் அத்தனை பேரின் இருப்பையும் கேள்விகுள்ளாக்கும் வகையில் அதை முற்றிலுமாக (முற்றிலுமாக) தடை செய்வது பாசிசம் (வேறு வார்த்தை கிடைக்கும் வரை) என்கிறேன். அன்புமணியின் அடுத்த நடவடிக்கையாய் அது இருக்கலாம். அவர் செய்யாவிட்டாலும் அவர் செய்ததை முன்வைத்து சுஷ்மா ஸ்வராஜ் அடுத்த ஆட்சியில் செய்யலாம். இங்கே உள்ள வாதங்களை ஒப்புகொண்டால், சினிமாவில் சிகெரட்டை தடை செய்வதை ஒப்புகொண்டால் இதை எதிர்க்கவும் வாதமும் தார்மீகமும் இல்லை. சினிமாவில் தடை செய்வதை விட நேரடியாய் தடை செய்ய வேண்டும் என்றுதான் இங்கே (அருணின் பதிவில்) பலரது வாதம் இருக்கிறது. அதுதான் நியாயமும் கூட.

சினிமாவில் சிகெரெட் பிடிப்பதை தடை செய்வதை நியாயபடுத்தினால் எதையும் நியாயபடுத்தமுடியும். இன்னமும் இதை நியாயபடுத்துபவர்கள் (எல்லோரும்) பயர் படத்தை தடை செய்தால் அதில் என்ன தவறு என்று சொல்லவில்லை. சொல்லபோனால் இந்திய அரசின் சட்டத்தில் ஒருபாலுறவு இன்னமும் அங்கீகரிக்க படவில்லை. சிகெரெட்டை தடை செய்வதை விட பயர் படத்தை தடை செய்யவே முகாந்திரம் அதிகM. ( என் கருத்துப்படி அல்ல.)

சுமுவின் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது. அரசாங்கம் ஒரு காலத்தில் டப்பாங்குத்து பாட்லகளை ரேடியோவில் ஒளிப்பரப்ப கூடாது என்பது போன்ற சிந்தனை கொண்டது. இன்று தூரதர்ஷனில் ஃபயர் படம் காண்பித்தால் ஆச்சரையப்பட மாட்டேன். இந்த காலத்தில் ரஜினியின் 'ஒழுக்க கேடுகளை' எல்லாம் பேசிகொண்டிருப்பது போல ஜல்லி ஒன்று கிடையாது. (ரஜினியின் இந்துத்வ சார்பு அரசியலை பேசுவது என்பது வேறு.)

குழலியை 'தள்ளிவிட்டேன்' என்று சுமு சொல்வதன் அர்த்தம் புரியவில்லை. நான் குழலியை எங்கும் ஆதரிக்க வில்லை. பாமக, அன்புமணி இது குறித்த எல்லாவற்ரையும் நியாயபடுத்தும் தர்க்கத்தை சமைக்க அவருக்கு தேவையிருக்கலாம். அதை நிபந்தனையின்றி ஆதாரிக்க எந்த தேவையும் எனக்கு இல்லை. அது ஆபத்தானதும் கூட. ஒரு வருடம் முன்னால் வரை தலித்கள் மீதான வன்கொடுமைகளை நியாயபடுத்திய இயக்கம் என்பதை மறந்துவிட முடியாது. 'தலித் எழில்மலையையும் ராமதாசுக்கு துரோகம் செய்தவராய்' அவர் சித்தரிக்கும் பதிவில் சுமுபோல் விமரசனமின்றி என்னால் பின்னூட்டமிட முடியாது. (மனதில் உருத்திய ஒன்றை சொல்கிறேனே ஒழிய பதிலுக்கு பதிலாய் அல்ல.)

மற்றபடி பாலாவை 'நான் தள்ளுவேனா?' என்ற கேள்விக்கு சுமுவே பதில் சொல்லிகொள்ள வேண்டும். என் 'செருப்படி' பதிவில் அவர் குறித்து பேசுவதற்கு முந்தய வாரம் வரை, அவருடய பதிவில் நான் பாட்டெழுதுவதும், அவர் என் 'பாடல் ஞானத்தை' பாராட்டுவதும், மகன் குறித்து அவர் வாழ்த்துவதும் என்று இப்போது இருப்பதை விட மிகவும் நட்பாய் இருந்தது. அவரை விட அதிக நட்பு மற்றும் கருத்து ஒற்றுமை உடைய தங்கமணி, பெயரிலி, சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டியுடன் (நட்புரீதியாய்) சண்டைபோட தயங்காதபோது, ஒரு பின்னூட்டத்தை பாராட்டுவதால் என்னில் ஏற்படபோகும் மாற்ரம் குறித்து சுமுவேதான் முடிவு செய்ய வேண்டும். மற்ரபடி என் பின்னூட்டத்தை இதுவரை அவர் பாரட்டிய போதெல்லாமே, எல்லோருக்கும் சொல்வது போல் நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் செய்வதில்லை. சுமு குறிப்பாக கேட்ட " ரோசாவின் தர்க்கத் திறமையைப் பற்றி இரண்டு extreme கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்களே அதைப் பற்றி ரோசா என்ன நினைக்கிறார்" என்ற கேள்விக்கு பதில் 'நான் அது குறித்து நினைப்பதில்லை' என்பது மட்டுமே.

கடைசியாக இங்கே தொடர்பு இல்லையெனினும் பத்மா எழுதியுள்ளது குறித்து. அவருடைய பதிவையும் படித்தேன். உண்மையில் அதில் மறுமொழி சொல்ல எதுவும் இல்லையெனினும், வெங்கட்டின் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல தோன்றியது. (அதை தொடர்ந்த பின்னூட்டங்களை படிக்கவில்லை. எழுத எனக்கு இருக்கும் தூண்டுதல் மட்டுமே காரணம்)

எனக்கு இது போன்ற கருத்துக்கள் என்ன சொல்ல வருகின்றன என்பது முக்கியம். உதாரணமாய் வெங்கட்டின் பின்னூட்டத்தை போலியானதாய், ஒரு பவனையாய் மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. இதே கருத்துடைய ஒரு பதிவை அவர் முன்பு எழுதினார். அதற்கு மீண்டும் மீண்டும் நான் ஒரே ஒரு கேள்வியை கேட்டேன். என் கடுமையான தொனி மற்றும் வசவுகளை அவர் கண்டிக்கட்டும், ஆனால் அதற்கு முன் 'அதற்கு காரணமான திருமா மீதானா வசையை கண்டிக்க வேண்டாமா' என்பதுதான் அது. மீண்டும் மீண்டும் அந்த கேள்வியை எழுப்பிய பின்னும், குறைந்த படசமாய்'அதையும் நான் கண்டிக்கிறேன்' என்று ஒப்புக்கு கூட சொல்லாதவர், இப்போது மீண்டும் கண்ணியம் குறித்து பேசுகிறார். இது வெறும் போலித்தனம் மட்டுமல்ல- இதற்கு பின்னால் உள்ள அரசியலை கணக்கில் கொண்டால். எனக்கு பதில் எழுத தோன்றியும் அடக்கி கொண்டேன்.

மற்றபடி, "எதற்கெடுத்தாலும் கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று எகிறி குதிப்பது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மட்டும் எதைச் சொல்லவும், எதைச் செய்யவும் எங்கிருந்து அதிகாரத்தைப் பெற்றார்கள் என்று தெரியவில்லை" என்று கருத்து சுதந்திரத்தை கொல்லும் போதெல்லாம் பாசிஸ்டுகள் முன்வைக்கும் நியாயபடுத்தும் வாதத்தை ஒத்த, சுமுவின் 'கருத்தை' கடுமையாய் மறுதலிக்கிறேன். பத்மா தன் பதிவில் எழுதியது மிகவும் ஸ்டீரியோடைப்பானது.வெங்கட் பின்னூட்டம் அளவிற்கு அதை போலியானது என்று சொல்லமாட்டேன். ஒரு உண்மையான அக்கறையிலேயே கூட பத்மா எழுதியிருக்க கூடும். மாறுபடும் கருத்துக்களை ஈகோ, காழ்புணர்வு, தர்க்கதின் ஏமாற்றும் தன்மை, இதையெல்லாம் தவிர்த்து பேச முயற்ச்சிக்க வேண்டும், அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் அதன் சிக்கல்களை விவாதிக்கும் நோக்கம் இது போன்ற ஸ்டீரியோடைப் வாதங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. குறிப்பிட்ட நபர்களை 'கண்ணியமற்ரவர்களாய்' முத்திரை குத்த மட்டுமே இது உதவும் என்று நினைக்கிறேன்(பதமாவின் நோக்கம் அப்படியில்லாமல் நல்லதாக இருந்தாலும்).

வரமாட்டேன் என்று சொன்னாலும் வந்துவிட்டேன். இனி தமிழ்மணம் பக்கமே வராமல் இருந்தாலொழிய, தலைக்கு மேல் வெள்ளம் போய்விடும் வாய்ப்பு இருப்பதால் வேறு வழியில்லை. இனி இந்த விவாதம் உட்பட எதையும் வாசிக்க கூட மாட்டேன் என்று சொல்லிகொள்கிறேன். நன்றி!

5/20/2005 2:53 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter