ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, May 29, 2006

இன்னும் சில கவிதைகள்.

(புத்தகங்களுக் கிடையில் மனப்போக்கில் தேடியதில் சிக்கி, இந்த தருணத்தில் உள்ளுணர்வு தேர்வு செய்த, சில கவிதைகளை இங்கே தட்டுகிறேன். இது எந்த விதத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள், சிறந்த கவிதைகள் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டவை அல்ல. கையிருப்பில் குருட்டாம் போக்கில் தேர்வு செய்யப்பட்டவை. நான் உண்மையில் தட்ட நினைத்த வேறு சில பிரமீள், ஆத்மாநாம், கலாப்பிரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், இன்னும் பலரது கவிதைகள் இப்போது கைவசமில்லை என்பதால்....)



மௌனமாய் ஒரு சம்பவம்.

-- தேவதேவன்.


கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.
கலவர முற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.

விரைத்து போய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.

என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங் கனவோ?

என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர் பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?

இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கை புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.

முடிவுறாத காலச் சங்கிலி
தன் கணத்த பெருமூச்சுடன்
கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,
இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?

எதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.



பனம் பழம்

--- அச்சுதன் தங்கவேல் முருகன்


முப்புரி சுற்றிய
மூளை பொட்டலத்தான்களுக்கு
முப்பத்தி முக்கோடிக் குறி
இனம் மொழி இஸம் என
அவை செய்யும் ஏராள விறைப்பு வித்தைகள்
முப்புரி அரைஞாணாகும் நிர்பந்தச் சூழலின்று
வழக்கம் போல்
வைதீகக் கோவணத்துள்ளிருந்து
விறைக்கிறது புதிய 'தலித்'
அது சரி
பனம் பழம் திங்கும் பாமரனுக்கு தெரியாதா
'பாப்பான் பொச்சும் பறையன் பொச்சும்'



Untitled

A.M. Budzish


அட முஹம்மதுவே

யேசு கிறிஸ்து
ஒரு சிறந்த
ராக்-இசை நாடகத்தில்
சூப்பர்-ஸ்டாராக இருந்தான்.

ஆனால் தடை செய்யப்பட்ட நாவல்களிலும்
நிராகரிக்கப் பட்ட கவிதைகளிலுமே
நீ தோன்றுகிறாய்.

(மொழி பெயர்ப்பு: எஸ் பாலச்சந்திரன். நன்றி: உன்னதம். )



வரைபடக் கடல்

--T. கண்ணன்


கடலறியா
நினைவின் உறைகுளிர் குகையொன்றில்
நான் வரைந்த விரல்களின் தழும்பைத்
தடவிப் பார்தேன்

உணராது காணாது ஒப்பிப்பில்
வரைந்த வரைபடக் கடலது
தழும்பகன்ற கடல் கண்டுணர் அறிவுடன்
மீண்டும் படக் கடல் வரைய விழைந்து
காலம் தாண்டி என் மேசையமர்ந்தேன்

அருகமர்ந்தான் என்னருகே மூலிகை
மணம் பரப்பும் காந்த கண்
சிறுவன் நான் காகிதத்துடன்
நீலம் தடவி காகிதத்துள் நிறம் சேர்தேன்
உப்பை தேய்த்துக் காற்றை பூசினேன்
V வரைந்து பறவை உள்நுழைத்தேன்
படகு தீட்டி வலு சேர்த்தேன்
ரேகை பதித்து அலை மற்றும்
சூரிய சந்திரருக்காய் அடிவான வட்டம்
நான் காண எனை நகல் செய்யும்
அருகாமை சிறுவன் நான்
என் வரைபடம் அதன் அருகே செல்லச்
செல்ல விலகிக்கொண்டே இருந்தது கடல்
விரக்தியின் விரல்களால் படம் கிழித்தேன்
கிழிந்த காகிதத் துண்டுகளில் சொட்டிக்
கொண்டிருந்தது நீர்
சிறூவன் நான் தான் வரந்த படத்தில்
கப்பல் செய்து அதில் மிதக்க விட்டான்
நெகிழ்ந்து நான் அவன் விரல் பற்ற
வடுவில்லை அதில்
சிரித்தபடிக்கு வெளியேறினான்.



தீவினைப்பூக்கள்

--பிரம்மராஜன்


தீவினைப் பூக்களை தீண்டுவதும் அணை உடைக்கும் இன்பம்
கனிகளின் கனிவில் வியர்வை மூச்சாகும்
குலையும் கூலாங்கற்கள் சீறிச்சாகும்
ரகசியங்களில் கசிந்துருகும் காம சேகரம்
இசைந்து புண்ணாகும் பெண்ணின் பேய் வழி
கற்றும் மறந்துவிடும் விருப்பின் பேதபின்னம்
வக்ர ராகங்களின் போதை மிஞ்சும்
குப்புற மிதக்கும்
மதகின் திருகில் அருகில்
ஈர்ப்புகளை வென்ற சுயம்
இன்னும் சாமந்திப் பூக்களின் புழுக்களை வியக்கும்
நாளும் நாளும்
நீள்கிற போதிலும்
அபயம் கேட்கும் மனம்
நித்ய கன்னியிடம்
பேசா மடந்தை எனில்


(நன்றி: உன்னதம், சிலேட் இதழ்கள்)

Post a Comment

1 Comments:

Blogger Boston Bala said...

நன்றி

12/09/2007 4:04 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter