ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, May 30, 2006

ஸ்ரீரங்கனுக்காக!

நண்பர் ஸ்ரீரங்கன் புலிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தன்னை தேடுவதாகவும் ஒரு பதிவு எழுதியுள்ளார். அது தனது கடைசி பதிவாகவும் இருக்கலாம் என்று எழுதியுள்ளார். இதை இலகுவாக எடுத்து கொள்ள முடியாதுதான். வறலாறு அப்படியிருக்கிறது! புலிகள் மீது களங்கம் கற்பிக்க யாராவது கிளப்பி விட்டிருக்கலாம், தலைமைக்கு தெரியாமல் பொடியன்கள் ஆடலாம் என்றெல்லாம் யாராவது சொன்னால் விரக்தி சிரிப்பு மட்டுமே வரும். களங்கம் புதிதாக வர, அதையும் கற்பிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. 'இப்படி சொல்லிவிட்டு செய்வார்களா' என்றும், ஜெர்மனியில் செய்வார்களா என்பதும், இன்னும் பல லாஜிக்கல் கேள்விகளைக் கேட்பதும் மகா அபத்தமானது என்பது வறலாற்றை பார்த்தால் தெரியும். உலகின் கருத்து பற்றி புலிகளுக்கு பெரிய கவலை முன்பு இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் சமாதான பேச்சுக்கள் என்ற அவல நாடகம் காரணமாய் கவலை கொள்ளலாம் என்று தோன்றினாலும், தனிமைபடுத்தப் பட்டுகொண்டிருக்கும் சூழலில் அதை பற்றி கவலைப்படாமல் கூட போகமுடியும். ஆனாலும் ஐரோப்பாவில் மட்டுமே இன்னும் இயங்க கூடிய வகையில் தற்பொழுது தடையில்லாமல் இருக்கும் நிலையில், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்படிக்கூட ஒரு சால்ஜாப்பை சொல்ல பயமாய்தான் இருக்கிறது. அந்த வகையில் வறாலற்றில் புலிகள் ரத்தக்கறை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் நான் தனிப்பட்ட முறையில் இது ஒரு வெத்து மிரட்டலாக மட்டும் இருக்கும் என்று நம்புகிறேன். மிரட்டி, அதன் மூலம் ஸ்ரீரங்கனின் எழுத்தை தடுப்பது நோக்கமாக இருக்கலாம், செயலில் இறங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அதுவும் கண்டிக்கத் தக்கதுதானே என்று கேட்டால், ஆமாம் அதிலென்ன சந்தேகம்! ஆனால் இப்போது நமக்கு இன்னும் முக்கியம் ஸ்ரீரங்கனின் உயிர்.) இவ்வாறு நான் நம்ப முக்கிய காரணம் புலிகள் இதுவரை செய்த கொலைகள் அனைத்துமே அரசியல் முக்கியத்துவம் வாய்தவை, அவர்களுக்கான லாபநோக்கில் செய்யப்பட்டவை என்ற என் புரிதல்தான். ஸ்ரீரங்கன் புலிகளுக்கான வருவாயை தடுக்கும் விதமாகவோ, உள்ளூரில் புலிகள் இயங்குவதற்கான சவாலாகவோ, அவர் மூலம் (இன்னும் அறியப்படாத உண்மை) ஏதாவது வெளிவரகூடும் என்றால் நிச்சயமாய் செய்வார்கள். அப்படி புலிகள் தீர்மானித்து விட்டால் காப்பாற்ற யாரும் இல்லை என்றுதான் முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த வகையில் புலிகள் புள்ளி வைத்து விட்டால் புஷ்ஷை கூட போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்பது எண்ணம். ஆனால் அப்படியில்லாமல் வெறும் வலைப்பதிவில் எதிர்த்து எழுதுவதற்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் வன்முறை பயங்கரவாதத்தை கைகொண்டாலும், ஒரு கார்பரேட் நிறுவனம் அளவிற்கு லாபநஷ்டங்களை ஆராய்பவர்கள், அவர்களுடய இன்றய வெற்றியடைந்த நிலைக்கு அதுவும் ஒரு காரணம் என்ற புரிதலில் இதை சொல்லுகிறேனே ஒழிய, அவர்களின் சகிப்புதன்மையை முன்வைத்து அல்ல.

ஆனாலும் இப்படி சொல்ல தயக்கமாகவும், பயமாகவும் இருக்கிறது. ஸ்ரீரங்கன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் அவருடன் தொடர்பை தொடர்சியாய் வைத்து அவர் பற்றிய தகவல்களை அவ்வப்போது எழுத எழுத வேண்டும். நானும் முயற்சிக்கிறேன். புலிகளை (அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளாமல், ஆனால் வேறு வழிவகையில்லாமல்) ஆதரிப்பவர்களும் ஸ்ரீரங்கனுக்கு ஆதரவாக ஆறுதலாக குரல் கொடுக்க வேண்டும். எல்லா வகையிலும் அவர் பக்கம் நிற்க வேண்டும். இட நினைத்த பின்னூட்டம் பெரிதாகி விட்டதால் இங்கே இடுகிறேன்.

இது குறித்த பெயரிலியின் பதிவு.

Post a Comment

13 Comments:

Blogger முகமூடி said...

ரோசா,

இப்பதிவின் ஒரு சுட்டியை ஸ்ரீரங்கன் பதிவிலே கொடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. அந்த அபத்த லாஜிக்கல் கேள்விகள் குறித்து நீங்கள் வெளிப்படுத்தியதும் அதற்கு மேலேயுமான என் கேள்விகளை பதிவாக எழுதும் எண்ணம் வந்து பின் அந்த கேள்விகளில் சம்பந்தப்பட்ட சிலருக்கும் எனக்கும் உள்ள நட்பின் காரணமாக அது அரசியலாக்கப்படும் சூழலை விரும்பாததால் - அரசியல் என்பது பழகியதுதான் என்றாலும் ஸ்ரீரங்கனின் இக்கட்டான சூழ்நிலையிலும் அதை வைத்து வெளியே ஒரு ஆபாசம் (என்னால்) அரங்கேற வேண்டாமே என்று நிறுத்திக்கொண்டேன்.. இங்கு ஏதாவது "தெளிவான" விளக்கம் வருகிறதா எனப்பார்ப்போம்.

இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை :: சிலருக்கு ஸ்ரீரங்கனின் பதிவிலே பின்னூட்டம் தருவதில் தயக்கம் தரும் அரசியல் இருக்கலாம். அவர்கள் தனிப்பதிவாக எழுதலாம் அல்லது அமைதியாக இருக்கலாம்.. அதை விடுத்து ஸ்ரீரங்கனுக்கு அறிவுரையையும் ஆறுதலையும் உங்கள் பதிவிலோ பெயரிலி பதிவிலோ தருவது - ஜாபர்கான் பேட்டையில் மேடை போட்டு ஜார்ஜ் புஷ்ஷை கேள்வி கேட்கும் - அபத்தமாக தோன்றுகிறது.

5/30/2006 5:36 PM  
Blogger ROSAVASANTH said...

வழக்கம் போல ஸ்ரீரங்கன் பதிவில் பல அனாமதேயங்கள் அராஜகமாய் ஒல்லிகிறது. வன்னியன் போன்றவர்கள் ஸ்ரீரங்கனுக்கு ஆதரவாகவும், அராஜகத்தை கண்டிப்பதும் நல்ல விசயம்.

5/30/2006 5:51 PM  
Blogger ரவி said...

ஆனால் அவர் பதிவுகளை படிக்கும்போது எதிர்க்கும் மனநிலை தெளிவாகிறது...அவர் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்..

பிறகு நாமனைவரும் முதலைகண்ணீர் வடிக்கலாம்...

5/30/2006 6:07 PM  
Blogger ROSAVASANTH said...

இப்படிச் சொல்லும் நீங்கள் ஒருவேளை கண்ணீர் விட்டால் அதற்கு பெயர்தான் 'முதலைக் கண்ணீர்'.

எதிர்ப்பு மனநிலை இருப்பது தவறு என்பதாகவும், அதற்கு தண்டனையாய் உயிரை பறிக்கலாம என்ற தொனியில் எழுதுவதும், மிரட்டல் இருக்கும் போது 'மாற்றிகொள்ளட்டும்' என்பதும், உங்களின் வக்ரமான முரட்டுத்தனத்தை காட்டுகிறது. உங்கள் தகவலுக்கு, நான் அதிகம் எழுதவில்லையெனினும், என்னிடம் இருப்பதும் எதிர்ப்பு மனநிலைதான்.

5/30/2006 6:15 PM  
Blogger Thangamani said...

வசந்த்:
ஸ்ரிரங்கனுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மிரட்டல் கடும் கண்டனத்துக்கு உரியது. அப்படியே நாளந்தம் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்று போராட்டத்தை, இன அழிப்பை செய்யும் அரச/ துணைப்படைகளின் மிரட்டலும், அதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க துணைபுரியும் சர்வதேச மிரட்டலும், சர்வதேச மிரட்டலை முன்னெடுக்க உழைக்கும் 'நடுநிலைவாதிகளின்' மிரட்டலும் கடும் கண்டனத்தைக் கோருகிறது.

இந்தக் கண்டனத்தை இப்படி எழுதுவது எத்தனை எளிதோ அப்படியே கொலைகளும், கொலைகளை காணமறுக்கும் சர்வதேச அரசியலை முன்னெடுப்பதும் எளிதாகவே இருக்கிற சூழலின் வக்கிரத்தை உணர்ந்தேஎழுதுகிறேன்.

ஆனால் அமெரிக்க அதிபரை ஜாபர்காண்பேட்டையில் எதிர்த்தே மக்களை அரசியல் படுத்தி, ஒன்று திரட்டி, அமரிக்க ஏகாதிபத்தியத்துக்கு, பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்து வியட்நாம் போராகட்டும், பாலஸ்தீன பிரச்சனையாகட்டும் போராடி வரும் இடது சாரி மக்கள் அரசியலை செய்யும் வழியொன்றை ஒட்டி எழுதபட்ட இப்படியான பதிவுக்கு நன்றி. அதே வேளையில் சோ - சங்கராச்சாரி - சுப்பிரமணியசாமி வகை அதிகார மையங்களை அடிவருடி செய்யப்படும் அரசியல் உங்களுக்கு பழக்கமில்லை என்றும் தெரிகிறது. அதற்காக ஒரு வந்தனம்.

5/30/2006 9:36 PM  
Blogger Unknown said...

//வழக்கம் போல ஸ்ரீரங்கன் பதிவில் பல அனாமதேயங்கள் அராஜகமாய் ஒல்லிகிறது.//

இந்தக் கருமத்துக்காகத்தான் ஓநாய்கள் வர முடியா பெயரிலியின் பதிவில் எண்ணங்களையும் ஆறுதல்களையும் சொல்லிக் கொள்வது.

5/30/2006 9:39 PM  
Blogger SnackDragon said...

மூன்று நாட்கள் , இணையப்பக்கம் அதிகநேரம் செலவிட முடியவில்லை. ஸ்ரீரங்கனுக்கு மிரட்டல் வந்துள்ளது என்று எந்த வரியும் குறிப்பிட்டு வாசிக்க இல்லையாயினும், அவ்வாறு வந்திருக்கும் பட்சத்தில் பலரும் இங்கு சொன்னது போலவே எனது வன்மையான கண்டனங்களை இங்கு பதிகிறேன். புலிகள் தங்கள் உண்மையான எதிரிகளையும் பிறரையும் பிரித்துணரவேண்டும்..

5/31/2006 12:39 AM  
Blogger ஈழபாரதி said...

ஏதோ ஒரு அனானி அனுப்பிய மின்னஞ்சலுக்கு பயந்து நடுங்கும், இந்த போராட்ட வாதிகள். எப்படி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்போகிறார்கள்? சத்தியத்தை நம்புவனுக்கு ஏதுபயம், சத்தியத்தை பேசுபவனுக்கு ஏது வீழ்ச்சி?

5/31/2006 2:20 AM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி,

சர்வதேச மிரட்டல், சிங்கள அரசின் வன்முறை, இந்தியா இவற்றை பற்றி மேலோட்டமான என் கருத்துக்களை 'கூத்து' பதிவில் எழுதியுள்ளதை படித்தீர்களா என்று தெரியவில்லை.

http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_11.html


சில வித்தியாசங்கள் எனக்கு புரிகிறதா என்று நீங்களே முடிவு செய்யலாம்.

நீங்கள், மற்ற புலி சார்பாக சித்திப்பவர்கள், பெயரிலி உட்பட, எப்படி இந்த மிரட்டலை, அல்லது மிரட்டப்பட்டதாக கிடைத்த செய்தியை கண்டிக்கிறீர்களோ, அப்படியே நானும் கண்டிக்கிறேன். அதே நேரம் இந்த பதிவின் முக்கிய கருத்து, ஸ்ரீரங்கன் மீது உண்மையில் புலிகள் கைவக்க மாட்டார்கள் என்பதுதான். அதை தெளிவான வகையில் நேரடியாக சொல்லவும் செய்திருக்கிறேன். அதே நேரம் அதை மட்டும் சொல்வது இந்த (வெத்தாக இருந்தாலும்) மிரட்டலை நியாயப் படுத்துவதாக இருக்கும். அதற்காக கவனக்குறைவாய் இருக்கவும் முடியாது என்பதனால்...

ஆனால் நீங்கள், புலிகள் அப்படி செய்யமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் லட்சியம் வேறு, 'துரோகிகளை' மட்டும்தான் போட்டுத் தள்ளுவார்களே தவிர ஸ்ரீரங்கன் போன்ற அப்பாவிகளை அல்ல, என்று சொன்னால் சந்தோஷப்படலாம். அப்படி சொல்ல என்னால் முடியாது. 15 ஆண்டுகள் முன்னால் கூட முடியாது, இப்போது நிச்சயம் முடியாது.

//அதே வேளையில் சோ - சங்கராச்சாரி - சுப்பிரமணியசாமி வகை அதிகார மையங்களை அடிவருடி செய்யப்படும் அரசியல் உங்களுக்கு பழக்கமில்லை என்றும் தெரிகிறது.//

உண்மையிலேயே அப்படியா நினைக்கிறீர்கள். சரி, அப்படியெனில் நானும் வந்தனம்!

5/31/2006 2:54 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

வன்முறை வழியில் செல்லாத, ஆயுதமேந்தாத, தன் நோக்கத்திற்காக மற்றவரை வன்முறையில் ஈடுபடுத்தாத எந்த ஒரு மனிதரையும் வன்முறையால் அழிக்க நினைப்பதோ, வன்முறையைக் காட்டி எச்சரிப்பதோ கூட மனிதத்தன்மையற்ற செயல், அதை அனைவரும் கண்டிக்க வேண்டும். சில நேரங்களில் திரு.ஸ்ரீரங்கன் யாருக்காக எழுதுகிறார் என்ற கேள்விகள் எழுந்தாலும், அவர் சொல்ல வந்த விசயங்கள் பல சிந்திக்க வைப்பவை. அவற்றைப் பிடிக்காதவர்கள் பொருட்படுத்தாமல் செல்லுவதே சரி. அதை விட்டு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது, அது புலிகளின் தலையில் இருந்து உதித்தாலும் சரி, வால்களில் இருந்து உதிர்ந்தாலும் சரி.

இலங்கை வரலாற்றின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் - இலங்கை அரசு-இராணுவமானாலும் சரி, சிங்கள அரசியல் கட்சிகளானாலும் சரி, தமிழ்ப் போராளிக் குழுக்களானாலும் சரி, அல்லது மோப்பமிட்டுக் கொண்டிருக்கும் ரா-உளவினராலும் சரி - எந்தப் பாம்பு, எந்தப் புற்றிலிருந்து கிளம்பி, எந்த நேரத்தில் யாரைக் கொலை செய்து அல்லது கொலை செய்யத் தூண்டி/மிரட்டி யார் மீது பழியை வீசும் என்பது தெரியாது. தடயங்களை விட பொய்களையும், பிரச்சாரங்களையும் நம்பியே பழக்கப் பட்டு அனைத்து தரப்பினருமே இரத்த வெறியர்களாக மாறிக்கொண்டிருப்பது தான் மிச்சம். அதுவும் குறிப்பாக தமிழர்களுக்குள்ளாக நடந்து வரும் இத்தகைய கொலைகள்/முயற்சிகள் ஈழமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விடுதலையைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

5/31/2006 1:46 PM  
Blogger Balamurugan said...

ஸ்ரீரங்கன் ஸீன் போடுகிறார் என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கனை கொல்வதற்கா புலிகள் உண்டியல் குலுக்குவார்கள்? நம்ப முடியவில்லை.

5/31/2006 1:55 PM  
Blogger தமிழரங்கம் said...

சிறிரங்கன் மீதான எதிர்வினைகள் மீது
பி.இரயாகரன்
31.05.06

சிறிரங்கனை அடிபணிய வைக்கவும், புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை பாதுகாக்கவும், விடப்படும் மிரட்டலின் ஒரு வடிவம் தான் இது. இது ஒன்று ஆச்சரியமானதல்ல. புலியின் தேசிய மொழியே, அவர்களின் பண்பாடே இது தான். ஆயிரம் ஆயிரம் உயிர்களை இப்படி பலியெடுத்தவர்கள், பலியெடுக்க அதற்குரிய சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள். இதற்கு வெளியில் புலி தேசிய அரசியல் என்பதே கிடையாது. இதை சிறிரங்கன விடையம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

இந்த அரசியல் செய்தி சிறிரங்கன் பதிவாக கொண்டு வந்தவுடன் பலர் பதறிப் போகின்றனர். மோட்டுக் கூட்டம் என்று மனதுக்குள் திட்டுகின்றனர். இதற்கு எப்படி பதிலளிப்பது என்று மண்டையை போட்டு குடைகின்றனர். பதிலளித்தோரின் கருத்துக்கள் சில இழிவானவை, நரித்தனமானவை. இது எப்படி இருந்தது என்றால், ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருந்தது.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், இந்த ஆணாதிக்க (தமிழ்) சமூக அமைப்பு பெண்ணை மீளவும் கூண்டில் ஏற்றி மீள மீள எப்படி கற்பழிக்கின்றனரோ அதே போன்றதே இது. ஆணாதிக்கத்தை விமர்சிக்காத, ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற வடிவத்தில் இது கையாளப்பட்டது. எப்படி சமூகத்தின் பல்வேறுபட்ட பாத்திரங்கள் இதை அணுகுகின்றதோ, அப்படித் தான் இதுவும் கையாளப்பட்டது. இங்கு ஆணாதிக்கத்தின் இடத்தில் புலித் தேசியம் அவ்வளவே. வழக்கம் போல் பாசிசத்தின் தசையாட, உரோமங்கள் ஆட்டுவிக்கப்படுகின்றது.

1. நடந்த சம்பவத்தில் புலிகளின் தலைமையின் நேரடியான உத்தரவுக்கு அமைய இது நிகழவில்லை என்பதே சரியானது. உள்ளுர் அளவில் இது நிகழ்ந்த சாத்தியக் கூறே அதிகமானது. குறிப்பட்ட பிரதேசத்தை சேர்ந்தோர், தன்னியல்பாக இதை செய்திருக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. இருந்தபோதும் இது புலிகளின் அரசியலுக்கு முரணானதல்ல. தலைமை இதுவாக இருப்பதால், அதில் பொறுக்கித் தின்னும் அணிகள் துள்ளிக் குதிக்கின்றனர்.

சிலர் வன்னி தலைமையுடன் தொடர்பு கொண்டு, இதை அணுக கோருகின்றனர். இப்படிக் கோருபவர்கள் ஒன்றில் அப்பாவிகளாக இருக்கவேண்டும் அல்லது நரித்தனம் கொண்ட சதியாளராக இருக்க வேண்டும். பொதுவாக தலைமை சரியாக உள்ளது, அணிகள் தான் தவறு இழைக்கிறனர் என்ற புலியின் வழமையான பிரச்சார உத்தியைச் சார்ந்தது. மற்றறொரு விதமாகவும் கூறலாம். ஜெயதேவனின் அண்ணன் எழுதியது போல், கீழ் அணியில் உள்ள இழிந்த சாதிகள் தான், இதைச் செய்கின்றது, மேலே உள்ள உயர்சாதிகள் இப்படி ஈடுபடுவதில்லை என்ற யாழ் மேட்டுக் (மோட்டுக்) குடியின் புலித் தேசிய வகைப்பட்டதாகவும் விளக்கலாம்.

வன்னியை அணுகுங்கள் என்பது, வன்னித்தலைமை இதை வேறுவிதமாக அணுகும் என்று நம்புவதே நம்ப வைப்பதே முட்டாள்தனம் தான். அவர்களின் அறியாமையின் உள்ளகத்ததையே இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கம் வன்னியுடன் தொடர்பு கொண்டு, மேலும் பலத்த மிரட்டலைப் பெற்று அடங்கியொடுங்கிப் போங்கள் என்ற உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது.

வன்னித் தலைமையின் வழி தான், அவர்கள் அணிகள் இழிந்து சீரழிந்து இயங்குகின்றனர். மாற்றுக் கருத்தை புலிகள் எப்படி எதிர்கொள்வர்! கொலை, கைது, சித்திரவதையின்றி புலியின் தேசிய கட்டமைப்பே இயங்கவில்லை. இது தான் ஏகப் பிரதிநித்துவம்.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அணுகுமுறைக்கு உட்பட்டுத் தான் கீழ் அணிகள் இயங்குகின்றன. தலைமை எப்படியோ, அப்படித் தான் அணிகள் இயங்குகின்றன. தலைமையுடன் பேசி இந்த விடையத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்புவோம் என்றால், எமது மண்ணில் இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்து இருக்காது. அதாவது மக்கள் தலைமையாக இருந்திருந்தால், எங்கேயாவது ஒரு தவறு நிகழும் போது அதை திருத்தியிருக்க முடியும். தலைமையே கொலைக் கலாச்சாரத்தில் வாழ்கின்ற போது, மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள வக்கற்ற ஒரு நிலையில் இருக்கின்றது. அதன் பொது அணுகுமுறையே, விதிவிலக்கின்றி கொலை தான் அதன் தேசிய மொழியாகின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் பரிமாறப்படும் மொழியே கொலைதான். மக்கள் வாயைப் பொத்தி, காதுக்கு பஞ்சை அடைந்து, கண்ணை மூடிக் கொண்டு வாழ்வதே வாழ்வு, இது தான் புலித் தேசியம்.

2. இது உண்மையாக நடந்ததா என்று ஒரு குதர்க்கம். ஒவ்வொரு தமிழ் மக்களும் இது போன்ற ஆயிரம் சம்பவங்களை சொந்த அனுபவத்தில் அறிவர். புலிக்கு பின்னால் கொடி பிடிக்கும் குருபக்த கும்பலுக்கும் கூட இது தெரியும். எம்மண்ணில் அன்றாடம் நடக்கும் புலி அல்லாத கொலைகளைக் கூட, நடக்கவில்லை என்று மார்பில் தட்டி சொல்பவர்கள் தான் புலிகள். நாங்கள் யாரை இதுவரை கொலை செய்தோம் என்ற கேட்பவர்கள் தான் இந்தப் புலிகள். ஆனால் எம் மண்ணின் நிகழ்வுகள், உயிருள்ள சாட்சியாக இந்த பொய்யையும் புரட்டுகளையும் எதார்த்தமாக இயல்பாகவே எல்லாவற்றையும் மறுக்கின்றது.

ஆயிரம் ஆயிரம் கொலைகள், புலிசெய்யாத கொலைகளாகவே காட்டப்படுகின்றது. யாரும், ஏன் அவர்களே நம்புவதில்லை. அப்படி இதை மீறி கூறினால் மரண தண்டனைதான் பதிலாக எதார்த்தத்தில் கிடைக்கின்றது. எமது தமிழ் சமூக அமைப்பில் இது போன்ற மிரட்டல் நேரடியாக வருகின்றதோ இல்லையோ, அந்த ஆணைச் சார்ந்து வாழும் பெண்ணும், உற்றார் உறவினரும் புலியை விமர்சிப்பதை நிறுத்த நச்சரிக்கின்றனர். அவர்களுக்கு நன்கு தெரியும் இதன் விளைவை. எம் மண்ணில் மூச்சுக்கு மூச்சு நடக்கும் கொலைகள், இதைவிட வேறு எதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. தாய்மையும், தாய்மை சுமந்த தனது குழந்தைகளுடன் வாழும் எந்தப் பெண்ணும் மகனுக்காக, தனது கணவருக்காக இந்த மாதிரியான கொலைகாரக் கும்பலுக்கு அஞ்சி சதா அழுகின்றது. குறிப்பாக சமூக ரீதியான ஆணாதிக்க மற்றும் சமூக ஒழுக்குமுறையால் சமூகம் பற்றிய பின்தங்கிய பார்வை, அச்சத்தையும் அவர்களையே சிதைக்கும் அளவுக்கு புலி தேசிய கொலைக் கலாச்சாhரம் பரிச்சயமானதே.

தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த மொழி கூட கொலைதான். புலியை விமர்சித்தாலோ, அது எதார்த்த உண்மையாகிவிடுகின்றது. இதற்கு சாட்சியம், உண்மை பொய் என்ற விதண்டாவாதம் எல்லாம் கொலைகார பாசிசக் கும்பலின் கைதேர்ந்த தொழில்முறை மூடிச்சுமாற்றிகளுக்கு நிகரானது.

இந்த நிகழ்வை உண்மையா என்று கேட்பதும், பின் கொல்லப்பட வேண்டும் என்று கூறுவதும் கூட பாசித்தின் வக்கிரம் தான். இதையும் கருத்திட்டோர் இடையே நாம் காண்கின்றோம். என்ன வக்கிரம். புலித் தேசிய நாற்றம் தாங்க முடியாது, இணைய விவாதத் தளமே நாறுகின்றது.

சிறிரங்கன் பற்றி எழுதிய அவதூறுகள், அவர் மீதான அச்றுத்தலை மீண்டும் தெளிவாக உறுதி செய்கிறது. கொல்வோம் என்று கூறுவது கூட இங்கு பதியப்படுகின்றது. இது தான் அவர்கள். இது தான் புலித் தேசியம். அவர்கள் அதை பதிவிலேயே இட்டுள்ளதுடன், இப்படி அவரை குதர்க்கம் செய்வது அவர்களின் தேசியத்தில் சாதாரணமானது. யாருக்குத் தான் அவர்கள் பட்டம் கட்டவில்லை. பொம்பளைப் பொறுக்கி முதல் ஆயிரம் பட்டங்கள் எப்போதும் புலித் தேசிய மூளையில் தயாராகவே வைத்திருப்பவர்கள். இதையெல்லாம் தமது சொந்த நடத்தைகளில் இருந்து, மற்றவன் மீது காறித் துப்புவது தான்.

ஊரார் பணத்தில் சொகுசாக வாழும் கும்பல், மற்றவன் சொகுசாக வாழ தங்களைப் போல் இழிந்து வாழ்வதாக கூறுவது எதிரொலிக்கின்றது. சிறிரங்கன் ஒரு தொழிலாளியாக உழைத்து வாழும் ஒருவர். உங்களைப் போல் தண்டல் சோறு உண்டு, தூசணத்தால் சமூகத்தை புணர்ந்த விபச்சாரம் செய்பவரல்ல. அது உங்கள் தேசிய குலத் தொழிலாகிவிட்டது. காட்டுமிராண்டிகளாக இழிந்து போன, பண்பற்ற நீங்கள் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று கூறுவதை, எந்த தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதே கிடையாது. உங்களைப் போல் பொறுக்கித் தின்னும் கும்பல் மட்டும் தான் உங்கள் பின் அரோகரா போடுகின்றது.

தமிழ் மக்கள் வாயைப் பொத்தி, அடக்கவொடுக்கமாக ஏகபிரதிநிதிகளுக்கு கால்தூசு துடைத்து அடங்கி வாழும் பாசிச சர்வாதிகார அமைப்பை யாரும் திரிக்க முடியாது. அது அவர்களின் சொந்த நடத்தையால், அவர்களின் சொந்த அரசியல் நெறியால் நிர்வாணமாகவே உள்ளது. சிறிரங்கன் போல் ஆயிரம் ஆயிரம் பேர் இந்த அனுபவத்தையும் துன்பத்தையும் சதா அனுபவித்தபடி தான் வாழ்கின்றனர். இதற்கு யாரும் விளக்கு பிடித்து காட்ட வேண்டியதில்லை. அதை புலிகளே யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் போது தெளிவாக கூறியுள்ளனர்.

''விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய, மேலும் இரு கோரிக்கைகள் வெகுஜன அமைப்பின் மூலம் எம்முன் கொண்டு வரப்பட்டு பேச்சுவார்த்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." என்று புலிகள் அறிவித்து நிராகரித்த அந்த இரு கோரிக்கை

1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

இந்தக் கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறிய போது, பாசிசம் குதிராட்டம் போடுவதையே காணமுடியும். எந்த வகையிலும் இதை மக்களுக்கு நிராகரிக்கும் உரிமை புலிகளுக்கு கிடையாது. மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். இந்த உரிமை மக்களின் அடிப்படை உரிமையாகும். இதை நிராகரிக்கும் புலிகளின் வக்கிரமான மக்கள் விரோத போக்கு, வரலாறு காணாத வகையில் அனைத்து துறையிலும் விசுவரூபம் எடுத்துள்ளது. இன்று வரை இது தான் புலிகளின் அரசியலாக, ஒழுக்கமாக, படுகொலையாக நீடிக்கின்றது. சர்வாதிகார பாசிச மக்கள் விரோத வன்முறை அரசியலே, எப்போதும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிக்கின்றன. புலிகள் அதன் ஒட்டு மொத்த மக்கள் விரோதிகளாக இருப்பதையே, அவர்களின் துண்டுப்பிரசுரம் அன்றே அம்பலமாக்கியது. மக்கள் மக்கள் என்று வாய் கிழிய பிதற்றும் புலிகளின் உண்மை முகம், மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பதை ஆதாரமாக கொண்டே எழுகின்றது. இவற்றை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக்குகின்றன.

மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடக் கூடியது என்றால், மக்கள் விரோத கொடூரத்தை நாம் அவர்களின் சொந்த கூற்றின் ஊடாகவே புரிந்து கொள்ளமுடியும். அதி புத்திசாலியாக தனிமனித வழிபாட்டின் மூலம் நிறுவ முனையும் புலிகளின் தேசிய "மேதகு" தலைவர் பிரபாகரனினதும், புலிகளினதும் "தணியாத தாகமான தமிழீழக் கோரிக்கை" தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திர மறுப்பில், அதன் கல்லறையின் மீதே கோரப்படுகின்றது. தமிழீழம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, புலிகளை அரசியல் அநாதையாக்கி விடுமல்லவா. அதனால் புலிகள் தமது பாசிச தனிமனித சர்வாதிகார அதிகாரத்தில் மக்களை துப்பாக்கி முனையில் மந்தைகளாக, வாய்பொத்தி கைகட்டி தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். இதைததான் ஏகபிரதிநிதித்துவம் என்கின்றனர்.

6/01/2006 6:45 AM  
Blogger ROSAVASANTH said...

மேலே உள்ள பின்னூட்டத்தில் உள்ள பல 'தகவல்களின்' உண்மைதன்மை பற்றி எனக்கு தெரியாது. அதை பரிசோதித்து பார்க்கவும் எனக்கு வழியில்லை. நான் ஸ்ரீரங்கன் பதிவுகளை அவ்வப்போது படித்தாலும், அதில் நடக்கும் பின்னூட்ட விவாதங்கள் சண்டைகளை படிப்பதில்லை.

என் பதிவில், போலி பின்னூட்டங்கள் தவிர்த்து, எல்லா பின்னூட்டங்களும் அனுமதிக்கப் படுவது போல் இதுவும் அனுமதிக்கப் படுகிறது. அதுவும் ஸ்ரீரங்கன் இதை பார்த்து தன் தரப்பு விளக்கத்தை அளிக்கும் சந்தர்ப்பம் இருக்கும் காரணத்தால் அனுமதிப்பதில் தவறில்லை, நியாயமானதே என்று நினைக்கிறேன்.

6/04/2006 3:45 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter