ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, November 10, 2006

இளயராஜாவின் அடிமை தன்னிலை!

ஞானராஜசேகரன் எடுத்து வரும் பெரியார் படத்திற்கு தன்னால் இசையமைக்க முடியாது என்று இசைஞானி மறுத்துள்ளார். அதற்கு அவர் அளித்த காரணத்தை படித்தால், நியாயம் போலத்தான் தோற்றமளிக்கிறது. பெரியார் மீது தனக்கு பெரிய மரியாதை இருப்பதாகவும், இன்றும் கூட பெரியாரின் பல கருத்துக்கள் பொருத்தமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்; ஆனால் தனது வாழ்வும் எண்ணங்களும் பெரியாருக்கு முற்றிலும் எதிராக இருப்பதால், தன்னால் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாது, தான் அதற்கு பொருத்தமானவன் இல்லை என்றும் கூறுகிறார். முன்பு இதே போல 'ஹேராம்' படம் கோட்சேயை போற்றுவதாக இருப்பதால், அதற்கு இசையமைக்க முடியாது என்று முதலில் இளயராஜா மறுத்தாராம். அதனால் கமல் எல்.சுப்ரமணியத்தை இசையமைக்க தேர்ந்தெடுத்தாகவும், பின்னர் கமல் திரைக்கதை முழுவதையும் விளக்கிய பின்னர் இளயராஜா மனம் 'தெளிவாகி' (இதற்குள் எல்.சுப்பு வேறு காரணங்களால் விலக) இசையமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. இதையெல்லாம் பார்த்தால், இசையை தனது வாழ்வாய், ஆன்மீக தேடலாய் கொண்டுள்ள இளயராஜா மீது, எல்லாவற்றிலும் இசைவு கொண்டபின்னரே இசையமைக்கும் அவரது பண்பு மீது மீது சிலருக்கு மரியாதை வரலாம். வேறு சிலர் தான் ஒப்புகொள்ளாத எண்ணவோட்டங்கள் கொண்ட கதையமைப்புக்கும் இசையமைக்க முடியும், அவ்வாறு செய்வதுதான் சவாலானது என்றும் கருதி, இளயராஜா செய்ததை முட்டாள்தனம் என்றும் சொல்லலாம். இப்படி பேச இன்னும் பல இருக்கிறது. ஆனால் தமிழின் 'ஆபாச' பாடல்கள் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றிலும் அவர் மன இசைவுடன் இசையமைத்தாரா என்று கேட்பது நியாயமில்லை என்றே நினைக்கிறேன். அதில் அவருக்கு பிரச்சனை இருந்திருக்கலாம்; இல்லாமலும் இருந்திருக்கலாம்; வணிகக் கட்டாயத்திற்காக செய்திருக்கலாம். ஆனால் அதில் உள்ளது உணர்வு மட்டுமே; இசை எல்லாவகை உணர்வுகளுக்கும் இடமளிக்க வேண்டிய ஒன்று. சரச காட்சிகளும் அதில் அடக்கம். அதனால் 'பெரியாரு'க்கு இசையமைப்பது போன்ற பிரச்சனை அதில் இல்லாமலிருக்கலாம்.

எனக்கு பிரச்சனை என்னவென்றால், பெரியார் படத்துக்கு இசையமைப்பதில் இசைவு கொள்ள முடியாத இளயராஜாவிற்கு, 'தேவர்மகன்' படத்திற்கு இசையமைக்கும் போது எந்த இடத்திலும் நெருடலே ஏற்படவில்லை என்பதுதான். படத்தில் எத்தனை இடங்களில் தேவர் பெருமைகளை துக்கி பிடிக்கும் காட்சிகளுக்கு பிண்ணணி இசையமைக்க வேண்டியிருந்தது. அதைவிட எல்லாம் 'போற்றி பாடடி பெண்ணே!' என்று தன் சொந்த குரலில் பாடும்போது, இளயராஜாவிற்கு எங்குமே நெருடவில்லை என்பதுதான். வணிக நிர்பந்தம் காரணமாய் மட்டும் இசையமைத்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் கோடிரூபாய் அளித்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாதவருக்கு, தேவர் காலடிமண்னை (தேவர் சமூகம் ஒரு பெரிய வன்முறையை தலித் சமுதாயம் மீது அவிழ்த்து விட்ட காலகட்டத்தில்) போற்றி பாடும்போது, எந்த நெருடலும் இல்லாமல் இசைவு கொள்ள முடிகிறதென்றால் அதை என்ன சொல்லலாம்?! ஒரு விமர்சனமற்ற முழுமையான அடிமை மனோபாவத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நமது சாதிய சமூகம் ஏற்படுத்தி இருக்கும் அடிமை தன்னிலைகள் அளவிற்கு, ஆழமான கருத்துலக வன்முறை வேறு இருப்பதாக தெரியவில்லை. அதற்கான முக்கியமான உதாரணம் இளயராஜா.

பிகு: இளயராஜவை முன்வைத்து முன்பு தெரிவித்த எந்த கருத்துக்களிலும் இப்போதும் மாற்றமில்லை.

Post a Comment

91 Comments:

Blogger ROSAVASANTH said...

மேசிண்டோஷ் ஸஃபாரியில் தமிழ்மணத்தில் சேர்க்க முயன்று முடியாமல், செய்த சில குளறுபடியில் பல முறை பதிவு வந்து விட்டது. இதை தவிர மற்றவற்றை நீக்கியிருக்கிறேன். அலைச்சலுக்கு உட்பட்டவர்கள் மன்னிக்கவும்.

11/10/2006 7:24 PM  
Blogger arulselvan said...

இன்னொரு இளையராஜாவின் தீவிர ரசிகன் சொல்கிறேன்.
இதைப்போன்ற பல இரட்டைநிலைக் கொள்கைகளை அவர் முன்பே எடுத்திருக்கிறார் - நம் எல்லோரைப்போலவும், தன் வசதிக்கேற்ப.ஆனால், எல்லாவற்றிலும் இதுதான் உச்சகட்டம். I give up. !
அருள்

11/10/2006 7:31 PM  
Blogger கானா பிரபா said...

நான் கூட ராஜாவின் தீவிர ரசிகன், ஒரு படத்துக்கு இசையமைப்பதும் இசையமைக்காததும் கூட அவரின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் அதனை அவர் கையாண்டவிதம் தவறு. பெரியார் படம் பக்தி மறுப்பு பேசுகின்றது என்று சொல்லும் இவர், இசையமைத்த காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ என்ற பக்திபூர்வமான பாடலை (காட்சியமைப்பு வேறாக இருந்தாலும் கூட) கலைஞருக்கு நடாத்திய துதிபாடல் நிகழ்ச்சியில் "காற்றில் வரும் கீதமே என் கலைஞரை அறிவாயோ" என்று மாற்றியவர்.

11/10/2006 7:42 PM  
Blogger ROSAVASANTH said...

தேவர் மகன் படத்தின் கதை நோக்கம் என்பதாக பாவனை செய்தது வேறு; மக்களால் அது வாசிக்கப் பட்டவிதமும் வேறு. தேவரின் அடையாளங்களை கொண்டாடுவதாய் படம் இருந்தது என்பதுதான் உண்மை.

என் பழைய பதிவு ஒன்றிலிருந்து ....
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_110724374325167412.html

//கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். //

11/10/2006 8:01 PM  
Blogger G.Ragavan said...

ரோசாவசந்த், இளையராஜா "நேத்து ராத்திரி யம்மா"விலும் "போற்றிப் பாடடி பொண்ணே"யிலும் தவறு செய்ததாகவே வைத்துக் கொள்வோம். அவர் திருந்தியிருக்கக் கூடாதா?

நேற்றை விட இன்று ஒருவனுக்கு அறிவு கூடுவதும் அல்லது குறைவதும் நடக்கக் கூடாததா? முடியாததா?

உங்களது கருத்துகளின் படி பத்து வருடத்துக்கு முந்திய இளையராஜாவும் இன்றைய இளையராஜாவும் ஒன்று. அல்லது தவறு செய்தவன் தவறு மட்டுமே செய்ய வேண்டும்.

ம்ம்ம்ம்...என்னவோ போங்கள். கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டிய ஒன்றைப் பெரிதாக்கி வளர்த்து விடுகின்றீர்கள். அப்படியே ஆகட்டும்.

இளையராஜாவின் இசையில்லாவிட்டால் பெரியார் படம் சிறக்காதா என்ன? அடுத்த ஆளைப் பார்ப்பதை விட்டு விட்டு.....காரியத்தை முடிப்பதை விட.....செருப்பைத் தூக்குவது எளிதாக இருக்கிறது! ம்ம்ம்.

11/10/2006 8:09 PM  
Blogger G.Ragavan said...

இன்னொரு விஷயம். சொல்வது சரியோ தவறோ....தன்னுடைய கருத்தைத் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொண்டு சொன்ன இளையராஜாவிடம் கூட கொஞ்சம் நேர்மை உண்டு. அந்த வகையில் பார்த்தால் அந்த நேர்மை உங்களிடமும் இல்லை. நீங்களும் இரட்டைக் கொள்கைக்குள் சிக்கியவர்தான். மன்னித்துக் கொள்ளுங்கள் இப்படிச் சொல்வதற்கு. பொதுவில் விமர்சகர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். அதை எடுத்துக்காட்டி உங்களுக்கு அது பொருந்துவதைச் சொல்வதே என் நோக்கம். உங்களைப் புண்படுத்துவது அல்ல.

11/10/2006 8:13 PM  
Blogger ROSAVASANTH said...

சிநேகிதன், நீங்கள் இளையராஜவிடம் பேசவேண்டியவற்றை என்னிடம் பேசுவதாக தெரிகிறது. இளயராஜா சொன்னதை (சொன்னதாக வந்த செய்தியை) வைத்து மட்டும்தான் பேசமுடியும். அதற்கு உண்மை ஏதாவது இருந்தால் அவர்தான் அதை சொல்லவேண்டும்.

ராகவன், நான் பெரியார் படத்துக்கு இசையமைக்காதது பற்றி எதுவும் சொல்லவில்லையே (அதுவும் செருப்பு எங்கிருந்து வந்தது). ஒரு தலித்துக்கு, தேவர் காலடி மண்ணை போற்றி பாடும்போது எந்த நெருடலும் ஏற்படாதது பற்றிதான் எழுதியுள்ளேன். அதற்கும் அவர் காரணமல்ல, இந்த சாதிய சமூகம் உருவாக்கியுள்ள ஒரு அடிமை தன்னிலை என்று மட்டுமே எழுதியுள்ளேன்.

எல்லோருடைய கருத்துக்களுக்கும் நன்றி.

11/10/2006 8:18 PM  
Blogger ROSAVASANTH said...

//அதற்கு உண்மை ஏதாவது இருந்தால் அவர்தான் அதை சொல்லவேண்டும். //

அதற்கு மேல் உண்மை ஏதாவது இருந்தால் அவர்தான் அதை சொல்லவேண்டும்.

11/10/2006 8:19 PM  
Blogger ROSAVASANTH said...

//அந்த வகையில் பார்த்தால் அந்த நேர்மை உங்களிடமும் இல்லை. நீங்களும் இரட்டைக் கொள்கைக்குள் சிக்கியவர்தான்.//

தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

நான் என் பெயரில் பேசாமல் யார் பெயரில் பேசுகிறேன்? அதுவாவது கொஞ்சம் புரிகிறது (ரோஸாவசந்தில் பாதி புனைபெயராய் இருப்பதால்), அது என்ன இரட்டை கொள்கை?

11/10/2006 8:22 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் போடும் பாட்டை ரசித்தேன்;அவர் கொள்கைகளை ஆய்வதில்லை. யாருக்குதான் இன்று அது இருக்கிறது.
யோகன் பாரிஸ்

11/10/2006 8:32 PM  
Blogger ROSAVASANTH said...

சிநேகிதன் எழுதிய பின்னூட்டத்தில் சில வசை வார்த்தைகள் மட்டும்(என்னை பற்றியது அல்ல, மற்றவர்களை பற்றியது) நீக்கப்பட்டு, கருத்து மாறாமல் கீழே!

"//சிநேகிதன், நீங்கள் இளையராஜவிடம் பேசவேண்டியவற்றை என்னிடம் பேசுவதாக தெரிகிறது. இளயராஜா சொன்னதை (சொன்னதாக வந்த செய்தியை) வைத்து மட்டும்தான் பேசமுடியும். அதற்கு உண்மை ஏதாவது இருந்தால் அவர்தான் அதை சொல்லவேண்டும்.//

உண்மை அறியாமல் விமர்சிப்பது சாதீய உணர்வைத்தூண்டிவிடுவதாகத்தான் அமையும்.

ஏற்கனவே இங்கு சாதி இல்லாமல் எப்படி அரசியல் நடத்தமுடியாதோ அதே போலத்தான் இங்கு சாதி பற்றிப்பேசாமல் சிலரால் வலைப்பதிவுகளில் பிழைப்பு நடத்த முடியாது.

முத்து, லக்கிலுக், குழலி, விடாது கருப்பு மற்றும் பல வலைப்பதிவாளர் மத்தியில் சாதி தீயை வளர்த்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த கூட்டத்தில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள்.

11/10/2006 8:33 PM  
Blogger ROSAVASANTH said...

//அந்த கூட்டத்தில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள்.//

நான் அந்த கூட்டத்தில் இருக்கிறேனா, சேரப்போகிறேனா என்பது சரியாக தெரியாது. என் பார்வை முழுக்க விமர்சன பூர்வமானது. எல்லாரை பற்றியும் எனக்கு விமர்சனம் உண்டு.

ஆனால் சாதி வெறியை தீவிரமாய் எதிர்ப்பதும், சாதி பெருமையை மறுப்பதும், அது குறித்து பேசுவதும்தான் அந்த கூட்டம் என்று ஒரு வேளை நீங்கள் வரையறுத்தால் அதை இவர்களுக்கு முன்னால் துவங்கி வைத்தவனே நான்தான். நன்றி!

11/10/2006 8:37 PM  
Blogger ROSAVASANTH said...

கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதால் மீதி பின்னூட்டங்கள் நாளை.

ஜி.ராகவன், இந்த பக்கம் வந்தால், அது என்ன இரட்டை கொள்கை, அதை எப்படி விமர்சகர்கள் செய்கிறார்கள்,எனக்கு அது எப்படி பொருந்துகிறது என்று விளக்கவும். நன்றி!

11/10/2006 8:41 PM  
Blogger லக்கிலுக் said...

//ஆனால் சாதி வெறியை தீவிரமாய் எதிர்ப்பதும், சாதி பெருமையை மறுப்பதும், அது குறித்து பேசுவதும்தான் அந்த கூட்டம் என்று ஒரு வேளை நீங்கள் வரையறுத்தால் அதை இவர்களுக்கு முன்னால் துவங்கி வைத்தவனே நான்தான். நன்றி!//

நன்றி

11/10/2006 8:47 PM  
Blogger Muthu said...

This comment has been removed by a blog administrator.

11/10/2006 8:51 PM  
Blogger Muthu said...

சிநேகிதனுக்கு இந்த கட்டுரையை சிபாரிசு செய்கிறேன்.

http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_114984409010914307.html


உண்மையான பெயரில் என்னை தொடர்பு கொண்டால் சாதியை பற்றி சில விஷயங்களை அவருக்கு சொல்ல ஆசை.

11/10/2006 8:55 PM  
Blogger அருண்மொழி said...

//வேலு பிரபாகரனின் கடவுள் படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பாளர்.//

அந்த படத்திலும் ஒரு பாடலுக்கு இசை அமைக்க அவர் மறுத்துவிட்டார். வேலு பிரபாகரன் அதை பற்றி ஒரு விளம்பரமே செய்திருந்தார். என்ன தான் கொள்கைவாதியாக, பக்தி பழமாக இல.கணேசனுக்கு காட்சி அளித்தாலும் இளையராஜாவால் எந்த கோவிலிலும் மணி ஆட்ட முடியாது. அவருக்கு இருக்கும் தெளிவு அவ்வளவுதான். விட்டுத்தள்ளுங்கள்.

11/10/2006 9:44 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

இனி பார்ப்பனீயத்தின் ஊடகச் செயற்பாடுகளைக் கீழ்க்காணும் வடிவங்களில் காணலாம்-
இதுவரையில்லாதவகையில் இப்போது இளையராஜாவின் மேதைமை புகழப்படும்.

அவரது வாழ்வுக்கும், கருத்துகளுக்கும், தொழிலுக்கும் ஒன்றோடொன்று முரணற்ற ஒத்திசை இருப்பதாகப் போற்றப்படும் (சுட்டியின் கடைசி வரி).

இப்படத்துக்கு இசையமைக்காமற்போனது அவருடைய தனிமனித உரிமை, மேற்கண்ட ஒத்திசைவை இனிமேலாவது பேண வேண்டும் என்ற மனமாற்றத்தைத் தற்போது அவர் அடைந்திருக்கக் கூடும் (அதாவது திருந்துதல்) போன்ற நிலைகளிலேயே விமர்சனங்களின் எல்லைகள் முடக்கப்படும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துலக வன்முறையையோ, சாதீய சமூக மனவமைப்பு உருவாக்கியிருக்கும் பண்பாட்டு அடிமைத்தனத்தையோ பற்றி யோசிப்பதோ, விமர்சிப்பதோ சாதீயப் பகைமையை வளர்ப்பதாய், குழப்பம் விளைவிப்பதாய்ச் சித்தரிக்கப்படும்.

11/10/2006 10:56 PM  
Blogger BadNewsIndia said...

ரோசாவசந்த்,

இது உண்மையான செய்தியா என்று தெரியவில்லை? இதை பற்றி வந்த செய்தியின் உரல் சொன்னீங்கன்னா எல்லாரும் படிக்கலாம்.

ராஜா, இது வரைக்கும் போட்ட படங்களின் கதையின் தத்துவத்திர்க்கு (தேவர் மகன்,... விருமாண்டி உள்பட) அவர் ஒப்புதல் அளிக்கிறார் என்று அர்த்தம் இல்லை.

வயது ஆக ஆக, அனுபவம் கூடும்.
ஒவ்வொரு நாளும் நமது நிலை மாறும். இன்னிக்கு தப்புன்னு தெரியரது நாளைக்கு தப்பில்லாம தெரியும் இல்லையா.

அவரின் இன்றைய மனநிலையில், பெரியார் படத்துக்கு இசை போட முடியாது என்று சொல்வது சரியாக இருக்கலாம். அது அவரின் முழுச் சுதந்திரம்.

கடவுள் இல்லை என்பவரின் வாழ்க்கை சரிதை சொல்ல கடவுள் பக்தியும் பயமும் இருப்பவர் யோசிக்கிறார் போலும்.

ஹிட்லர் டாக்யுமெண்டரிக்கு இசை கோர்த்தவன், ஹிட்லரின் கொள்கையில் பிடிப்பு உள்ளவனா என்ன? என்றும் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

ராஜா, இசை அமைப்பதை வெறும் வேலயாக நினைத்து செய்யாததனால் இந்த நிலை என்று நினைக்கிறேன்.

முழு ஈடுபாடு வரவில்லை என்றால் இசை அமைத்தாலும் அது சரியாக வராது.

so, அவர் எடுத்த முடிவில் தவறில்லை.

ஆனால், பெரியார் படத்துக்கு அது மிக மிகப் பெரிய இழப்பு.
வேறு யார் அந்த பணி செய்தாலும், ராஜா தரக்கூடிய ஒரு நிறைவு இருக்காது என்றே தோன்றுகிறது.

பாரதி படம் நினைவிருக்கிறதா? அதன் பாடலும் இசையும் அந்த படத்திர்க்கு ஒரு ஆணி வேர்.

11/11/2006 3:34 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

பிராமணீயத்திற்கு அடிமையான நவபிராமணீய புனிதப்பசுக்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை இப்போதாவது உணர்ந்த வசந்துக்கும், அருளுக்கும் அனுதாபங்கள். உணரவைத்த இசை"ஞானி"க்கு நன்றி.

பிரச்சினையென்னவென்றால் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட இத்தைகைய நவஞானிகள் மீது, ஒருவரின் பிறப்பை மட்டும் கணக்கிலெடுக்கும், கட்சி சார்ந்த பெரியார் பக்தர்களிடமிருந்து எந்த விமர்சனமும் வருவதில்லை என்பதுதான். "பெரியார் ராஜாஜி ஆனதென்ன" என்று வாலி எழுதியதற்காக துள்ளி குதித்து ஆர்ப்பாட்டம் செய்த தி.க.வினர் இதைப்பற்றி மூச்சு விடமாட்டார்கள்.

11/11/2006 10:00 AM  
Blogger ROSAVASANTH said...

சிநேகிதனின் பின்னூட்டத்தை எடிட் செய்த காரணத்திற்காகவாவது, முத்துவின் பின்னூட்டத்தையும் எடிட் செய்ய வேண்டியுள்ளது - சிநேகிதன் பயன் படுத்திய வசை வார்த்தைகள் அளவிற்கு முத்து கடுமையாக எழுதவில்லை எனினும்!

கருத்து மாறாமல் இரண்டு வார்த்தைகள் மாற்றப்பட்டு முத்துவின் பின்னூட்டம் கீழே.

"//ஆனால் சாதி வெறியை தீவிரமாய் எதிர்ப்பதும், சாதி பெருமையை மறுப்பதும், அது குறித்து பேசுவதும்தான் அந்த கூட்டம் என்று ஒரு வேளை நீங்கள் வரையறுத்தால் அதை இவர்களுக்கு முன்னால் துவங்கி வைத்தவனே நான்தான். நன்றி! //

ரோசா, நன்றி.

நான் கடுமையானவன் என்ற இமேஜ் பரவலாக இருந்தாலும் நான் அப்படி இல்லை என்பது பலருக்கும் தெரியும்.

எதற்கு இதை சொல்கிறென் என்றால் சிநேகிதன் என்ற பெயரில் எழுதுபவரை நான் திட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறேன்.

உளருவதற்கு முன் சிநேகிதன் சிந்திக்க வேண்டும் என்பது என் அவா.

நன்றி."

11/11/2006 8:46 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள சுமு,

இளயராஜா பற்றி இதற்கு முன்பு எழுதிய எந்த கருத்திலும் எனக்கு மாற்றம் எதுவும் இல்லை. அதை சொல்லவும் செய்திருக்கிறேன். மேலும் எதிர்பார்க்காத எதையும் இளையராஜா செய்துவிட்டதாக எனக்கு தோன்றவும் இல்லை. அதனால் அனுதாபம் கொள்ளும் அளவிற்கு தேவை இருப்பதாக தோன்றவில்லை. (நேர்மையாக சொன்னால், பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பார் என்பதை எதிர்பார்க்காவிட்டாலும், அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் ஏதோ நிகழ்ந்துவிட்டதாக தோன்றவில்லை என்ற வகையில் ...)

இன்னமும் இளையராஜாவை 'நவபிராமணியத்தில்' சேர்க்க முடியும் என்று எண்ணாதது மட்டுமின்றி, அப்படி வெளிபடுத்தப்படும் பார்வைகளை கடுமையாக (முன்பு போலவே) எதிர்க்கிறேன். குறைந்த பட்சம் நவபார்பனியம் என்பதை இந்த அளவு எளிமை படுத்த முயல்வது மிக ஆபத்தானது. பார்ப்பனியம் என்பது மிக தீவிரமானது, இளையராஜாவை அதற்குள்: அடக்குவது ஒரு மூர்க்கமான பார்வை மட்டுமே.

கடைசியாக 'ஞாநியின் விமர்சனம்' என்பது பார்பனியத்தை முன் வைத்து இளையராஜாவை அணுகவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஞாநியிடமும், மற்றவர்களிடமும் வெளிபட்ட இளையராஜா மீதான தாக்குதலில், ஒரு தலித் வெறுப்பு அடங்கியிருப்பதாகவும் நினைக்கிறேன். விளக்கமாய் இதை விரித்து எழுத முடியும்.

இவை இப்படியிருக்க, இளையராஜா பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது முட்டாள்த்தனம், அதிலும் அவரது மற்ற செயல்களிலும் (சாதிய அமைப்பு உருவாக்கிய) ஒரு அடிமை தன்னிலை வெளிபடுவதாகவே நினைக்கிறேன். அதை பார்பனியம் என்று சொல்லமுடியாது; பார்பனியம் அத்தனை ஆபத்தில்லாதது, எளிதானது அல்ல என்பது என் கருத்து.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மேலும் இருந்தால் நாளை.

11/11/2006 8:59 PM  
Blogger மிதக்கும்வெளி said...

வேலுபிரபாகரனின் கடவுள் படத்திற்கு ராஜா இசையமைத்திருந்தாலும் அவரது அடுத்த படமான 'புரட்சிக்காரன்' படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, கே.ஏ.குணசேகரன் மீது வழக்கு போட்டது, ஒரு தலித் அமைப்பு தன்னுடைய படத்தை தங்கள் விளம்பரத்தில் போட்டதற்காக அவர்கள் மீது வழக்குபோட்டது என்று பலவற்றைச் சொல்லலாம். நாம்தான் இளையராஜாவைத் தலித் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர அவருக்கு அப்படி எந்த உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பிரச்சினை அது இல்லை. பெரியார் என்பவர் வெறுமனே நாத்திகம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவரா? வேறு பெரியாரின் எந்த செயல்பாடுகளுமே ராஜாவுக்குத் தெரியாதா? பாரதி, காமராஜர் ஆகியோரோடு முழு உடன்பாடு கொண்டவர்தானா ராஜா?

11/11/2006 9:09 PM  
Blogger PRABHU RAJADURAI said...

திரை இசையில் இளையராஜா தொட்ட இடங்களை நெருங்க கூட யாருமில்லையென்றாலும், அவர் பொதுவில் பேசிய எந்த ஒரு கருத்தும் அபத்தக் களஞ்சியமாகவே எனது சிற்றறிவுக்கு படும். அபத்தமான சில பாடல்களையும் சில பாடல்களில் சேட்டையினையும் அவர் மேதமையினை கண்டு பொருட்படுத்தாதது போல பொருட்படுத்த வேண்டாம். ஆனால் மற்ற அபத்தங்களோடு ஒப்பிடுகையில் இந்த முறை பரவாயில்லையே என்று பாராட்டவே தோன்றுகிறது.

"தேவர் சமூகம் ஒரு பெரிய வன்முறையை தலித் சமுதாயம் மீது அவிழ்த்து விட்ட காலகட்டத்தில்"

இளையராஜா பிறந்து வளர்ந்த இடத்தோடும், காலத்தினையும் விட தேவர் மகன் காலம்...

if you can't beat them...join them என்பதை புரிந்து கொண்டவராயிருப்பார் போல...

ஆமாம், இங்கு இளையராஜாவும், ரஜினிகாந்தும்தான் பெரிய ஞானிகள்! ஆன்மீகவாதிகள்!! என்ன அப்படி மற்றவர்கள் வாழ்க்கையினை விட தங்களது வாழ்க்கையினை வித்தியாசப்படுத்தி வாழ்கிறார்கள் என்பது புரியவில்லை.

11/11/2006 9:57 PM  
Blogger ENNAR said...

இதில் சாதிக்கு வேலையில்லை நாத்திகம் ஆத்திகம் தானே. ஒரு நாத்திகருக்கு எப்படி இசையமைப்பது என்று இருக்கலாம்.

11/11/2006 10:52 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

ரோஸா,

சிரமம் பார்க்காம இதை ஒருமுறை படிச்சுடுங்களேன். இங்கே பின்னூட்டலாம்னுதான் நினைச்சேன், பெரிசா ஆகி பதிவு போட்டுட்டேன்.

11/11/2006 11:01 PM  
Blogger Parvees said...

Ilayaraja oru commercial music director. thats all. and avarudaya profession la ippadi than irukanum appadinu oru boudary vechurikirar.avlothan.athuvum avaraha erpaduthikitathu.so...avar eppo vena matralam. oru sthirathanmai illathathalathan avarnale recent-a success panna mudiyale.so nothing to disgus about him.

11/11/2006 11:43 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
//இளயராஜா பற்றி இதற்கு முன்பு எழுதிய எந்த கருத்திலும் எனக்கு மாற்றம் எதுவும் இல்லை. அதை சொல்லவும் செய்திருக்கிறேன்.//

பதிவின் கடைசி வரியாக இதை எழுதியிருந்ததைப் வாசித்தது மட்டுமில்லை, நீங்கள் முன்வைத்த காலை பின்வைக்காதவர் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

//குறைந்த பட்சம் நவபார்பனியம் என்பதை இந்த அளவு எளிமை படுத்த முயல்வது மிக ஆபத்தானது. //

பார்ப்பனராக பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பார்ப்பனர் ஆக முயற்சிக்கும், பார்ப்பனர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கும், தன்னையே மறுக்கும் பார்ப்பனல்லாதவருக்கு வேறு பெயர் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். மாற்றிக்கொள்கிறேன்.

//ஞாநியிடமும், மற்றவர்களிடமும் வெளிபட்ட இளையராஜா மீதான தாக்குதலில், ஒரு தலித் வெறுப்பு அடங்கியிருப்பதாகவும் நினைக்கிறேன். //

இதில் உண்மையில்லை என நினைக்கிறேன். இளையராஜா போன்ற ஆளுமைகள் தங்களையே மறுத்து பார்ப்பனீயத்தின் விழுமியங்களை, கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, தங்களின் வெற்றிகளை பயன்படுத்தி பார்ப்பனியத்தின் வேரறுக்க உதவாமல், அதற்கு நீரூற்றி வளர்ப்பதை எதிர்த்தார்கள் என்பது என் புரிதல்.

11/12/2006 9:37 AM  
Blogger G.Ragavan said...

// ROSAVASANTH said...
கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதால் மீதி பின்னூட்டங்கள் நாளை.

ஜி.ராகவன், இந்த பக்கம் வந்தால், அது என்ன இரட்டை கொள்கை, அதை எப்படி விமர்சகர்கள் செய்கிறார்கள்,எனக்கு அது எப்படி பொருந்துகிறது என்று விளக்கவும். நன்றி! //

இந்தப் பதிவு பற்றிய கருத்தைச் சொல்லி விட்டேன். இளையராஜாவிடம் இசையை மட்டும் எதிர்பாருங்கள். அதைத் தவிர அவருக்கு எதுவும் சரியாக வராது. ஆன்மீகத்திலும் அவர் இன்னும் தெளிவற்ற நிலையில்தான் இருக்கிறார் என்பது என் கருத்து.

உங்கள் கருத்துக்கு வருகிறேன். நீங்கள் ரோசாவசந்த். நீங்கள் ரோசாவசந்த் மட்டும்தானா? அப்படியில்லாமல் வேறு யாராகவேனும் இருந்தால் ரோசாவசந்த் என்று உங்களைத் தெரிந்தவர்க்கெல்லாம் நீங்கள் அந்த இன்னொரு யார் என்று தெரியுமா? அல்லது அந்த இன்னொரு யாரென்று உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நீங்கள் ரோசாவசந்த் என்று தெரியுமா? இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ரோசாவசந்த். தன்னை மறைத்துக் கொண்டு விமர்சனம் சொல்வது மிக எளிது. இதுதான் என் கருத்து. இதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் எனக்குக் கவலையில்லை. நன்றி.

11/12/2006 4:26 PM  
Blogger suvanappiriyan said...

பிராமணீயத்திற்கு அடிமையான நவபிராமணீய புனிதப்பசுக்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

11/12/2006 7:17 PM  
Blogger ROSAVASANTH said...

மீண்டும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனத்கு நன்றிகள். பதில் சொல்ல தேவையுள்ள, மாற்று கருத்து உள்ளவற்றை மட்டும் ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறேன்.

சுரேஷ், உங்கள் பதிவை முன்பே பார்த்துவிட்டேன். எதிர்வினையாக சொல்ல எதுவும் இல்லை. ஒரு விஷயத்தை பல விதங்களில் பார்க்காலாம். இப்படி பார்க்கலாமே என்று நீங்கள் சொன்னால், 'பாருங்கள், நன்றாக பார்த்து கொள்ளுங்கள்' என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்ல இல்லை. அதையே வேறு விதமாய் பார்க்கலாம். பெரியார் படத்துக்கு இசையமைப்பதற்கு தான் பொருத்தமானவன் இல்லை என்று நினைக்கும் இளயராஜாவிற்கு, தேவர் மகனில் ஏன் எந்த நெருடலுமே ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பலாம். இது காலாம் சார்ந்த பிரச்சனை இல்லை, இன்றைக்கும் அவ்வளவு அருமையாக தேவர் மகனுக்கு இசையமைத்தது பற்றி இளயராஜாவிற்கு நெருடல் இருக்க வாய்பில்லை. ஏன் இல்லை என்று பார்ப்பது இன்னொரு பார்வை, அதை தான் பதிவில் தந்திருக்கிறேன். நன்றி.

11/13/2006 8:34 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு,

//நீங்கள் முன்வைத்த காலை பின்வைக்காதவர் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.//

இது அவரவர் விருப்பம், வசதி, சட்டகம், பார்வை சார்ந்த வாசிப்பு. இதற்கு பதில் சொல்ல முடியாது. மேலும் எத்தனை பேருக்கு முன் சொன்ன காருத்துக்களை காலத்தின் போக்கில் மாற்றிகொள்ளும் விவேகம் இருக்கிறது என்று அவரவர்கள்தான் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். (தனிப்பட்ட முறையில் எனக்குள்ளே நான் காலத்தின் போக்கில் பல கருத்துக்களை மாற்றி கொண்டதாலேயே இன்று பல விஷயங்களை பேசி கொண்டிருப்பதாக உணர்கிறேன். அதே நேரம் இந்த 'முன் வைத்த கால்' பிரச்சனை இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். )

//பார்ப்பனராக பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பார்ப்பனர் ஆக முயற்சிக்கும், பார்ப்பனர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கும், தன்னையே மறுக்கும் பார்ப்பனல்லாதவருக்கு வேறு பெயர் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். மாற்றிக்கொள்கிறேன்.//

நவப்பார்பனியம் என்பதற்கு 'பார்ப்பனராக பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பார்ப்பனர் ஆக முயற்சிக்கும், பார்ப்பனர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கும், தன்னையே மறுக்கும் பார்ப்பனல்லாதவர்' என்று ஒரு விளக்கம் வைத்திருந்தால் அது மிகவும் நகைப்பிற்குரியது ஆகும் என்பது என் கருத்து. இந்த சமுகத்தில் 90 விழுக்காடு மக்கள் அதில் இடம்பெறுவர். ஓரளவு கல்விபெற்ற அனைவரிடமும் அப்படி ஒரு மனநிலை இருப்பதை காணமுடியும். பார்பனர்களை எதிர்ப்பது என்று பார்த்தால் 10 சதவிகிதம் தேறுமா என்பதே மிக மிக சந்தேகமே. (மேலும் பார்பனராவது, பார்பனரின் இடத்தை அடைவது, அதாவது ஏதேனும் ஒருவழியில் பார்பன அதிகாரத்தை பெறுவது என்பதில் என்ன பெரிய தவறு என்பதும் புரியவில்லை. மாறாக தன் பிறப்பின் காரணமாக தான் அதற்கு தகுதியானவனல்ல என்று நினைப்பதுதான் சாதிய சட்டகத்திற்கு உட்பட்ட மனநிலை.)

பார்பனராக ஆக பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் இளையராஜாவிடம் வெளிப்பட்டதற்கு எந்த ஆதாரத்தை தருகிறீர்கள் என்று புரியவில்லை. (அதாரம் தந்தால் மற்ற யாரிடம் அது இல்லை என்பதையும் விளக்க வேண்டும்.) அவர் பார்பன அங்கீகாரத்தை பெற என்னவென்ன செய்தார் என்பதையும் நீங்களே சொல்ல வேண்டும். உதாரணமாய் தியாகராஜரை மறுத்துவிட்டு, நிராகரித்து விட்டு ஒருவரால் இந்திய சூழலில் இசைபயணமே செய்யமுடியாது. பிராமணிய கருத்துக்களை வைத்திருந்ததால், ராமானுஜத்தை மறுத்து கணிதத்தில் ஈடுபட முயற்சிப்பது போன்றது இது. தியாகராஜரை மறுக்க ஒரு பரிமாண வளர்ச்சியை மறுக்க வேண்டும். மேலும் தியாகராஜரிடம் வெளிப்பட்டது முழுவதும் சுயம்புவானது அல்ல; அந்த இசை பார்பனர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதை பார்பன சட்டகத்திலிருந்து வெளிகொண்டு வருவதுதான் இளையராஜா போன்ற ஒரு கலைஞாநி (அவர் உண்மையிலேயே ஞாநிதான், மேற்கோள் குறியிடுவது, அவர் தகுதியை திட்டமிட்டு மறுப்பதாகும்) செய்யவேண்டும். அதை இளையாராஜா சுயநினைவுடன் செய்யவில்லை; மேலும் ஒரு எதிர்ப்பு மனநிலையுடன் ஒருவர் இங்கே செயல்படவும் முடியாது. ஆனால் இளையராஜா அளவிற்கு தியாகராஜரை உள்வாங்கி, அதே நேரம் அவரை மறுவாசிப்பு செய்தது யாருமில்லை. ('தியாகராஜருக்கு நாய் குறைப்புக்கும் வித்தியாசமில்லை' என்று அவர் சொன்னது மட்டுமல்ல உதாரணம். 'Chamber welcomes thiyagaraja' என்ற 'How name it" இல் தியாகராஜரை மேற்கை முன்வைத்து வாசிக்கிறார். அது நேர்மறையானது. ஆனால் 'எல்லாம் இன்பமயம் திரைப்படத்தில் ',மாமன் வீடு மச்சி வீடு' பாடலில் கவிழ்த்துவிடுகிறார். இன்னும் பல பல உதாரணங்கள் உண்டு.)

அடுத்து யாருக்கெல்லாம் பார்பனராக பிறக்காத ஆதங்கம் இருக்கிறது என்று பார்த்தால், பெரியார் பெயரை சொல்லும் (அதே நேரம் தலித்தை எதிர்க்கும்) மக்களில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். பார்பனர்கள் இளையராஜாவை வேறு வழியில்லாமல் அங்கீகரித்த காரணத்தினால் மட்டுமே, நவபார்பனியராக முடியாது. நவப்பார்பனியம் என்பதற்கு என்ன விளக்கம் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றும் புரியவைல்லை. இன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வெளிப்படுத்தப் படும் பல கருத்தியல்கள் நவபார்பனியம்; லோக் பரித்திரன் கட்சி நவபார்பனியத்தின் சிறந்த உதாரணம். இதனுடன் இளையராஜா போன்ற, இந்திய அளவில் யாருடனுமே ஒப்பிட இயலாத இசைமேதையை சேர்ப்பது மடமையாகும். மன்னிக்கவும் இப்படித்தான் என்னால் சொல்ல முடியும்.


// //ஞாநியிடமும், மற்றவர்களிடமும் வெளிபட்ட இளையராஜா மீதான தாக்குதலில், ஒரு தலித் வெறுப்பு அடங்கியிருப்பதாகவும் நினைக்கிறேன். //

இதில் உண்மையில்லை என நினைக்கிறேன். இளையராஜா போன்ற ஆளுமைகள் தங்களையே மறுத்து பார்ப்பனீயத்தின் விழுமியங்களை, கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, தங்களின் வெற்றிகளை பயன்படுத்தி பார்ப்பனியத்தின் வேரறுக்க உதவாமல், அதற்கு நீரூற்றி வளர்ப்பதை எதிர்த்தார்கள் என்பது என் புரிதல்.//

இளையாராஜா பார்பனியத்திற்கு எப்படி நீருற்றி வளர்த்தார் என்பது புரியாவிட்டாலும், அதை வேரறுக்க உதவவில்லை; அதன் கூறுகளை உள்வாங்கியுள்ளார் போன்றவற்றை நிச்சயம் ஏற்றுகொள்கிறேன். சமூகத்தின் 99%மக்களுக்கு இது பொருந்தும் என்பதுதான் என் வாதம். பெரியார் மாதிரி சிலரை தவிர எத்தனை பேர்களால் பார்பனிய கூறுகளிலிருந்து விடுபட முடியும், அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதெல்லாம் மிகவும் கேள்விக்குரியது.

கடைசியாக, ஞாநி, சாருநிவேதிதா இவர்கள் இளையராஜாவை பற்றி கூறியவை வெறுப்பு சார்ந்தது. இதை 'அப்படி நினைக்கவில்லை' என்று நான் மொட்டையாக சொல்லவில்லை. இதற்கான ஆதாரம் அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அபாண்டமாய் இருப்பது. பார்பனியம் சார்ந்த எந்த காரணத்தை காட்டியும் இளையராஜாவை அவர்கள் விமர்சிக்கவில்லை என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அரசாங்கத்தை மோசடி செய்தார் (ஞாநி வாதப்படி பெரியார் படத்துக்கு அரசாங்கம் நிதி தருவதையும் மோசடி என்றுதான் சொல்லவேண்டும்), பரி திருடியது போல் திருடினார், பாட்டுக்கு மெட்டமைக்காமல்ம் மெட்டுக்கு பாட்டு எடுத்தார்; இப்படி பத்து பைசா பெறாத குற்றச்சாட்டுக்கள். மேலும் இசையை பற்றி எதுவுமே தெரியாத முட்டால்களான சாருவும், ஞாநியும் (ஆதாரம் அவர்களின் எழுத்து) திருவாசகத்தை ஒருமுறை கேட்டு தீர்பளித்தனர். (உங்களை போன்றவர்கள் திருவாசகத்தை கேட்காமலேயே ஞாநி சொன்னதை (இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகின்றன) ஏற்றுக்கொண்டது இன்னும் ஒரு வேடிக்கை). இவையெல்லாம் வெறுப்பு சார்ந்தது அன்றி வேறு என்ன?

ஞாநியிடம் 'தலித் வெறுப்பு' இப்போது மட்டும் வெளிப்படவில்லை, ஜெயலலிதா 'மிருக பலியை' தடை ச்ய்த போது எழுதிய கட்டுரைகளிலும் அது உண்டு. (திருமாவளவனை விமர்சித்தால் தலித் வெறுப்பு என்று சொல்லவில்லை. என்னவகை விமர்சனம், அதில் பயன்படுத்தப்பட்ட வாதங்கள் என்பது). ஞாநியை பற்றி நான் எழுதுவதற்கான சூழல் இப்போது இல்லை. ஏனெனில் அவர் தவறான காரணங்களுக்காக (கண்னகி சிலை, குஷ்பு விவகாரம் என்று) 'பார்பான்' என்று திட்டப்படுகிறார். இந்த இடத்தில் அவரை ஆதரிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரிடம் உறைந்திருக்கும் பார்பனியத்தை அடையாளம் காட்டவதற்கு சந்தர்ப்பம் எதிர்காலத்தில்தான் வரும். ரவி ஸ்ரீனிவாஸ் மாதிரி அவரும் வெளிபட்டால் நான் ஆச்சரியமே படமாட்டேன். இதையும் ஓரளவிற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருகிறேன். யோசிக்க வேண்டியது என்னவெனில், ஒரு வருடம் முன்பு ரவியை நான் திட்டிகொண்டிருந்த காலத்தில் உங்களை போன்றவர்கள், அதை தேவையற்ற தனிப்பட்ட தாக்குதலாக பார்த்து வந்தீர்கள். இப்போது ரவியை பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். (உண்மையிலேயே உணர்ந்திருக்கிறீர்களா என்று சந்தேகமும் அடிக்கடி வருகிறது.) ஞாநியை புரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.

11/13/2006 8:45 PM  
Blogger ROSAVASANTH said...

ஜி.ராகவன், சரி, இனிமேல் எதையும் எழுதும் முன்பு, வாசிக்கும் அனைவருக்கும் என் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், CV, சம்பள விவரம், என் அப்பாவின் பயோடெட்டா எல்லாமும் தரமுயற்சிக்கிறேன். அதே நேரம் பதிவு எழுதிய உடன் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து என் ஆஃபிஸில் வேலை செய்பவர்கள், உறவினர்கள், எல்லாவகை நண்பர்கள், துணைவியின் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கு ஒரு காப்பி அனுப்பி விடுகிறேன். அவ்வளுவுதூரம் நேர்மையை காப்பாற்றி உங்களுளிடம் பேர் வாங்கவேண்டுமா என்று மட்டும் ஒரு கேள்வியிருக்கிறது. அந்த கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் நிச்சயம்! நன்றி!

11/13/2006 8:52 PM  
Blogger ROSAVASANTH said...

ஒரு விஷயம் எழுத விடுபட்டுவிட்டது. ஒரு தலித் தியாகராஜரை பாடக்கூடாது, அவரிடமிருந்து 'புருஷ சுக்தம்' ஒலிக்கக் கூடாது என்பது பார்பனியம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவகையில் இளையராஜா அதை எதிர்த்து செயல்பட்டுள்ளார். இதுதான் சரியான செயல்பாடு என்று சொல்லவில்லை. ஒரு தலித் புருஷசுக்தம் சொல்லும் போது, அதற்கான பார்பனிய வரையறைகள் உடைகிறது. ஆனால் புருஷ சுக்தம் சொன்னதால் இளயராஜாவை பார்பனர் என்பது என்ன வகை பார்வை?

உதாரணமாய் எல்லோரும் அர்சகராகக்கூடது என்பது பார்பனியம். ஒரு தலித் அர்சகராகி, அர்ச்சனை செய்யும் போது, அவர் பார்பனர்தான் என்றால் அது என்ன பார்வை?! ஒருவேளை உதாரணத்தில் ஏதேனும் பிரச்சனையோ?!

(சுமு இப்படித்தான் சொல்கிறார் என்று சொல்லவில்லை. அவர் எப்படிச்சொல்கிறார் என்பது சரியாக தெரியவில்லை. இப்படி சொல்லும் ஒரு பெரிய கூட்டத்தை தமிழ் சூழலில் காட்டமுடியும்.)

11/13/2006 9:07 PM  
Blogger ROSAVASANTH said...

இன்னும் சற்று நிறுத்து நிதானமாய் அவசரம் இல்லாமல் எழுதியிருக்கலாம். எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். மேலும் ..

//தியாகராஜரை மறுக்க ஒரு பரிமாண வளர்ச்சியை மறுக்க வேண்டும். //

தியாகராஜரை மறுக்க ஒரு பரிணாம வளர்ச்சியை மறுக்க வேண்டும்.

11/13/2006 9:15 PM  
Blogger Sridhar V said...

ரோசா வசந்த் அவர்களே,

பல புதிய விவாதங்கள், புதிய கருத்துகள். மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது

பதிவுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

11/13/2006 11:13 PM  
Blogger G.Ragavan said...

// ROSAVASANTH said...
ஜி.ராகவன், சரி, இனிமேல் எதையும் எழுதும் முன்பு, வாசிக்கும் அனைவருக்கும் என் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், CV, சம்பள விவரம், என் அப்பாவின் பயோடெட்டா எல்லாமும் தரமுயற்சிக்கிறேன். அதே நேரம் பதிவு எழுதிய உடன் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து என் ஆஃபிஸில் வேலை செய்பவர்கள், உறவினர்கள், எல்லாவகை நண்பர்கள், துணைவியின் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கு ஒரு காப்பி அனுப்பி விடுகிறேன். அவ்வளுவுதூரம் நேர்மையை காப்பாற்றி உங்களுளிடம் பேர் வாங்கவேண்டுமா என்று மட்டும் ஒரு கேள்வியிருக்கிறது. அந்த கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் நிச்சயம்! நன்றி! //

:-)))))))))))))))))

என்னிடம் நீங்கள் கண்டிப்பாக பெயர் வாங்க வேண்டியதில்லை ரோசாவசந்த். உங்களிடம் பெயர் வாங்க வேண்டிய நிலைக்கு இளையராஜா வந்து விட்டதை எடுத்துச் சொன்னேன். அவ்வளவே.

11/14/2006 1:09 AM  
Blogger The Talkative Man said...

This is really stupid..what the hell was Maestro thinking???

Social reforms have nothing to do with religion, why cant Ilayaraja understand this simple fact?

A question to Maestro: When he composed for Kamagni, a porn movie, did he agree with whatever was shown in it?

11/14/2006 1:44 AM  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

11/14/2006 3:09 AM  
Blogger porukki said...

இளையராஜா பற்றிய விவாதங்களில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரின் பிறப்பை வைத்து அவரது சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளை விமர்சனம் செய்வதா? அல்லது தன்னை ஒருவர் அடையாளப்படுத்தும் சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளின் அடிப்படையில் விமர்சிப்பதா? இங்கே இளையராஜா தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையிலேயே விவாதங்கள் நடக்கின்றன. இது தவறென்றே நான் கருதுகின்றேன்.

11/14/2006 12:37 PM  
Blogger porukki said...

இளையராஜா பற்றிய விவாதங்களில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரின் பிறப்பை வைத்து அவரது சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளை விமர்சனம் செய்வதா? அல்லது தன்னை ஒருவர் அடையாளப்படுத்தும் சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளின் அடிப்படையில் விமர்சிப்பதா? இங்கே இளையராஜா தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையிலேயே விவாதங்கள் நடக்கின்றன. இது தவறென்றே நான் கருதுகின்றேன்.

11/14/2006 12:40 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

11/14/2006 7:00 PM  
Blogger ROSAVASANTH said...

//porukki said...
இளையராஜா பற்றிய விவாதங்களில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரின் பிறப்பை வைத்து அவரது சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளை விமர்சனம் செய்வதா? அல்லது ன். தன்னை ஒருவர் அடையாளப்படுத்தும் சிந்தனை/அரசியல்/சமூக செயற்பாடுகளின் அடிப்படையில் விமர்சிப்பதா? இங்கே இளையராஜா தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையிலேயே விவாதங்கள் நடக்கின்றன. இது தவறென்றே நான் கருதுகின்றேன்.//

பொறுக்கி, ரொம்ப அப்பாவியாய் தெரியும் இந்த பிரச்சனை மிகவும் குழப்பமானதும், சிக்கலானதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் சின்னதாக என் புரிதலை பிறகு வந்து எழுதுகிறேந். நன்றி,

ஜி,ராகவன், ஸ்ரீதர் வெங்கட், டாக்கடிவ் மேன் நன்றி. இதுவரை கருத்து அளித்த அனைவருக்கும் நன்றி.

11/14/2006 7:04 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக்கின் பின்னூட்டமும், அதற்கான எனது பதிலும், அவர் தன் பின்னூட்டத்தை நீக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீக்கப்பட்டுள்ளது. அவருடைய அஞ்சலை -எல்லாவற்றிற்கும் பதில் எழுதிவிட்டு - தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. மிகவும் மன்னிக்கவும்.

11/14/2006 7:11 PM  
Blogger aathirai said...

// பாட்டுக்கு மெட்டமைக்காமல் மெட்டுக்கு பாட்டு எடுத்தார்; //
திருவாசகம் கேட்டபோது எனக்கும் இதுதான் தோன்றியது. பாட்டின்
கருத்துக்கு சம்மந்தமேயில்லாமல் folksy மெட்டமைத்திருந்தார்.
ரொம்ப காலமாக சினிமாவில் மெட்டுக்கு பாட்டெழுதி பழக்கப்பட்டதால்
இந்த குறை தெரியாமல் இருந்திருக்கலாம்.

11/14/2006 11:12 PM  
Blogger SnackDragon said...

ரோசா,
உங்கள் பதிலை வாசிக்கவில்லை. வாசிக்க ஆர்வமுள்ளது. நிற்க.


குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி.

11/14/2006 11:51 PM  
Blogger ROSAVASANTH said...

ஆதிரை,

நீங்கள் எதற்கு பழக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் அடையாளம் காணுதல் அமைகிறது. முதல் முறை கேட்டதற்கும், இப்போது ஒரு வருடத்திற்கு மேல் பல முறை கேட்ட பிறகு கேட்பதிலும், எனக்கு மிக பெரிய வித்தியாசம் தெரிகிறது. ஆகையால் இது கேட்பவரிடம் உள்ள பிரச்சனையா, ராஜாவின் பிரச்சனையா என்ற கேள்விக்கு பிறகு வருவோம். அதற்கு முன்பு, அது எப்படி ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட சில பாடல்களிலிருந்து, தன்னிடம் முன்னமே வைத்திருக்கும் மெட்டுக்கு ஏற்ப சிலவற்றை தேர்ந்து எடுக்க முடியும் என்பதை விளக்க முடியுமா? சாருவும் ஞாநியும்தான் விவஸ்தையில்லாமல் உளருகின்றார்கள் என்றால் ...! (இதன் சாத்தியமின்மை பற்றி ஏற்கனவே சாரு பற்றிய பதிவில் எழுதியுள்ளேன்.) நன்றி!

11/15/2006 2:15 PM  
Blogger ROSAVASANTH said...

கவியின் பின்னூட்டம் யூனொகோடில் கீழே. எனது கருத்துக்களை சில மணி நேரங்களில் தருகிறேன்.

"ரோசாவிற்கு
சுமூ இளையராஜாவை நவ பார்ப்பனியர் என்று கூறுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. நீஙகள் சொல்வது போல இளையரஜா "புருஷ சுக்தம்" பாடியதால் பார்ப்பனிய
விழுமியங்களை உடைத்தார் என்பது உண்மையாக இருப்பினும் புருஷ சுக்தமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த பார்ப்பனிய கருத்தாக இருந்தாலும் அது மனிதர்களித்தில் உயர்வு தாழ்வு
பேதத்தை விதைத்து அதன் பலனை அறுவடை செய்கிறது.

இந்த பார்ப்பனிய கருத்தாடல்களை புத்தர் காலம் முதல் பெரியார் காலம் வரை பலரும் எதிர்த்து போராடி வந்திருக்கும் நிலையில் ஒரு தலித்தாக பிறந்தவர் தானே அவற்றை
புகழ்வதால் (எந்த விதமான விமர்சனமும் இல்லாமல் - விவேகாநந்தர் ஆதி சங்கரைப் பற்றி கூறுகையில் அவரின் புத்தி விசாலமானது ஆனால் இதயம் குறுகலானது எண்கிறார்)
அவரிடம் வெளிப்படுவது அடிமை மனநிலை அல்ல தன்னையும் பார்ப்பனர்களைப் போல என்னும் மனநிலையே. இதில் தவறேதும் இல்லை என்று நீங்கள் கருதலாம் ஆனால் இவரைப்
போன்றவர்களை குறிக்க சுமூ சொன்னதப்போல வெறு சொற்கள் இல்லை என்பதுதான் உண்மை.

மற்றபடி இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மற்றும் லோக் பரித்ரன் கட்சியின் கூறுகள் இவற்றில் வெளிப்படுவது நவ பார்ப்பனியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இவற்றை
ஆதரிப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பின் அவர்கள் நவ பார்ப்பனர்களாகி விட மாட்டார்கள். இதில் உங்களின் இன்னுமொறு கருத்து சுவாரசியமானது "ஏதெனும் ஒரு வழியில்
பார்ப்பன அதிகாரத்தைப் பெறுவதில் என்ன தவறு என்று புரியவில்லை" அதிகாரத்தை பெறுவதில் தவறிருக்க வாய்ப்பில்லை அதைத்தான் ஜனநாயகம் சொல்கிறது(?). ஆனால்
பார்ப்பனிய அதிகாரம் என்பது என்ன? இதை வளர்த்துக் கொன்டு போக விருப்பமில்லை ஆ.ண். ஸ்ரினிவச் அவர்களின் (ரவி ஸ்ரினிவாஸ் அல்ல :) ஸன்ச்க்ரிடிழடிஒன் தியரி
பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அதை ஒத்ததுதான் இளையராஜாவின் செயல்பாடும்.

ராமானுஜரும் பாரதியும் எல்லோரும் சமம் என்ற கருத்தைப் பரப்ப அனைவருக்கும் பு+ணூல் அணிவிப்பதை ஒரு வழியாக நினைத்தார்கள் ஆதை செயலிலும் காட்டினார்கள் (அவர்களை
மிகவும் மதிக்கிறேன்) அது ஒரு வழிமுறை ஆனால் எல்லோரும் சமம் என்றால் சிலரின் உயர் வர்க்க அடையாளங்களை துறப்பதுதானே சிறந்த வழிமுறை. உங்களின் பார்வையில்
பார்ப்பனர்களின் பு+ணுலை தலித் அணிவதில் என்ன தவறு என்று தோன்றலாம் ஆணால் அதன் விளைவு பார்ப்பனிய விழுமியங்களை ஏற்கும் நவ பார்ப்பனியர் உருவாவது
மட்டுமே (இதை சம்மந்தமில்லாமல் இங்கு கூறவில்லை இளையராஜாவின் வாரிசுகளின் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது என்பது செய்தி) ராமானுஜரும் பாரதியும் ஏன்
தோற்றார்கள் என்பதற்கான பதில் எளிது.

முடிவாக இளையராஜா யாராலும் மறுக்க முடியாத மாபெரும் இசை மேதை என்பதற்கு நமக்கு ஞானியிடமிருந்தோ அல்லது சாருவிடமிருந்தோ சான்றிதழ் தேவையில்லை அது போலவே
அவர் ஒரு நவ பிராமனர் என்பதை மறைக்க வாதங்களை அடுக்கவும் தேவையுமில்லை. என்னளவில் அவர் ஒரு புதிர் எத்தனையோ விழுமியங்களை தகர்த்தெறிந்தவர் முடிவில் அவற்றோடு
சமரசம் செய்து கொண்டதாகவே நினைக்கிறேன். "

11/15/2006 2:27 PM  
Blogger ஜோ/Joe said...

"அவர் ‘பெரியார்’ படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப் பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, ‘பெரியார்’ படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "


‘‘நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். "

-இளையராஜா ஜூ.வி -ல்

11/15/2006 2:45 PM  
Blogger அருண்மொழி said...

ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் ‘பெரியார்’ படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக் கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசை யினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!’’

என்னிடம் கொண்டு வந்து கொட்டும் எத்தனையோ குப்பைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மாட்டேனா?

‘‘நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்."

நன்றி - ஜூனியர் விகடன்

11/15/2006 3:16 PM  
Blogger ROSAVASANTH said...

கவி,

முதலில் நவபார்பனியம் என்பதற்கு (ரொம்ப கறாராக இல்லாவிட்டாலும்) என்ன பொருள் வைத்திருக்கிறீர்கள் என்று விளக்கினால்தான் மேலே பேச முடியும். நான் என்ன வைத்திருக்கிறேன் என்றால், நவீனத்துவ காலகட்டத்து மாற்றங்களுக்கு ஏற்ப பார்பனியம் பரிணமித்ததை நவபார்பனியம் என்கிறேன். குறிப்பாக பழைமைவாத பார்பனியத்திலிருந்து வேறுபடுத்த, நவப்பார்பனியம் அளவிற்கு பழமைவாதம் ஆபத்தானது இல்லை என்பதை உணர்த்த இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன். தேவையானால் இன்னும் அதிகமாக எனது தரப்பு விளக்கங்களை பிறகு தருகிறேன். இந்த பொருளிலேயே நியோ பிரமினிஸம் என்று வேறு பலரும் குறிப்பதாக அறிகிறேன் (ஒரு வேளை 'புதிய பார்பனியம்' என்ற ஏதாவது பொருளில் நீங்கள் சொல்கிறீர்களோ என்னவோ; அப்படியெனில் ஒரு வசதிக்கு 'பார்பனரல்லாத பார்பனியம்', ஞாநி ஒருமுறை சொன்ன மாதிரி 'சூத்திர பார்பனியம்' அல்லது ' தலித் பார்பனியம்' என்று எதாவது ஒரு பெயர் வைத்துக் கொள்ளுங்கள். பார்பனராய் பிறக்காமல் அவ்வாறு மாற விரும்புபவர்களை குறிக்க இது வசதியாய் இருக்கலாம்.) . Neo Brahminism என்பதற்குள் இளயராஜாவை, அவர் புருஷ சுக்தம் சொல்வதற்காகவும், தன் மகன்/ள் திருமணத்தில் மந்திரங்கள் ஒலித்ததற்காகவும், தமிழ் சூழலை தவிர வேறு எங்காவது யாராவது சொல்வார்களா என்று தெரியவில்லை. (அப்படி பார்த்தால், சுந்தர வடிவேலின் சித்தப்பாவும் நவப்பார்பனியர்தான்.(நான் அப்படி சொல்லவில்லை.))

நான் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நீங்கள் எதிர் கொள்ளவில்லை. ஒரு தலித் அர்சகாராவதை எப்படி பார்பது என்பது. தலித் அர்சகராகி, பார்பனியத்தின் ஒரு கூறை உடைத்தாலும்,அவரும் வேதத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். நீங்கள் சொல்வதை போல பார்த்தால், தலித் அர்சகாரானால் அதுவும் நவபார்பனியராவதுதான் (என்ன வேறு பாடு என்று விளக்கும் படி கேட்டிருந்தேன்.) எதற்கு இவ்வாறு நவப்பார்பனியத்துக்கு ஆதரவாக பெரியார் தனது கடைசி கால போராட்டத்தை முழுக்க குவிக்க வேண்டும், அதை இன்றுவரை தொடர வேண்டும், அல்லது நவப்பார்பனியத்தின் வளர்ச்சிக்கு எதிராக பார்பனர்கள் இந்த அளவு விட்டுகொடுக்காமல் இறுக்கமாக இருக்க வேண்டும் என்றும் புரியவைல்லை.

புருஷ சுக்தமானாலும், வேதமானலும் அதன் பொருளை நேரடியாக கொள்ள வேண்டிய தேவையிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை புருஷ சுக்ததை புக்ழந்து, அதை பாட தன்னை போன்ற பிறவிக்கு அருகதையில்லை என்று இளயராஜ நினைத்தால் அது பார்பனியத்துடன் இயைந்து போதல். (அதையும் நவபார்பனியம் என்று சொல்ல முடியாது என்பது என் கருத்து).

//மற்றபடி இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மற்றும் லோக் பரித்ரன் கட்சியின் கூறுகள் இவற்றில் வெளிப்படுவது நவ பார்ப்பனியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இவற்றை
ஆதரிப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பின் அவர்கள் நவ பார்ப்பனர்களாகி விட மாட்டார்கள். //

சரியாக புரியவில்லை. ஒருவேளை புதிய பார்பனர்கள் என்ற வரையரையில் வரமாட்டார்கள் என்கிறீர்களா, அதாவது பார்பனரல்லாதவர்கள் மட்டுமே (பார்பனிய விழுமியங்களை கொண்டிருந்தால்) நவபார்பனர்கள் என்று அழைக்க தகுதியானவர்கள் என்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

//இதில் உங்களின் இன்னுமொறு கருத்து சுவாரசியமானது "ஏதெனும் ஒரு வழியில்
பார்ப்பன அதிகாரத்தைப் பெறுவதில் என்ன தவறு என்று புரியவில்லை" அதிகாரத்தை பெறுவதில் தவறிருக்க வாய்ப்பில்லை அதைத்தான் ஜனநாயகம் சொல்கிறது(?). ஆனால்
பார்ப்பனிய அதிகாரம் என்பது என்ன? \\

உதாரணமாக கோவிலில் அர்சகாராவது, வேதம் ஓதுவது, இன்று இன்னும் பொருத்தமாக சொல்ல வேண்டுமானால் ஐஐடியில் படிப்பது; மற்றும் பார்பனர்கள் அன்றும், இன்றும், அனுபவிக்கும் உரிமையாக கோரும், இயல்பாக கருதும் அனைத்தும். இதை எப்படிவேண்டுமானாலும் அடையவேண்டும் என்பது என் வாதமல்ல; எப்படி அடைவது என்பது அந்தந்த சூழல், சாத்தியங்கள், வாய்ப்புகள், சந்தர்ப்பங்களை பொருத்தது. ஒருவர் அதை அடைந்தால், அதை கடுமையாக விமர்சிக்கும் அளவிற்கு அதில் என்ன பிரச்சனை என்பது நான் கேட்பது (பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை.)


//ஆ.ண். ஸ்ரினிவச் அவர்களின் (ரவி ஸ்ரினிவாஸ் அல்ல :) ஸன்ச்க்ரிடிழடிஒன் தியரி
பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அதை ஒத்ததுதான் இளையராஜாவின் செயல்பாடும்.//

எதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. முடிந்தால் விளக்கமாக எழுதவும்.

//ராமானுஜரும் பாரதியும் எல்லோரும் சமம் என்ற கருத்தைப் பரப்ப அனைவருக்கும் பு+ணூல் அணிவிப்பதை ஒரு வழியாக நினைத்தார்கள் ஆதை செயலிலும் காட்டினார்கள் (அவர்களை
மிகவும் மதிக்கிறேன்) அது ஒரு வழிமுறை ஆனால் எல்லோரும் சமம் என்றால் சிலரின் உயர் வர்க்க அடையாளங்களை துறப்பதுதானே சிறந்த வழிமுறை. உங்களின் பார்வையில்
பார்ப்பனர்களின் பு+ணுலை தலித் அணிவதில் என்ன தவறு என்று தோன்றலாம் ஆணால் அதன் விளைவு பார்ப்பனிய விழுமியங்களை ஏற்கும் நவ பார்ப்பனியர் உருவாவது
மட்டுமே (இதை சம்மந்தமில்லாமல் இங்கு கூறவில்லை இளையராஜாவின் வாரிசுகளின் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது என்பது செய்தி) ராமானுஜரும் பாரதியும் ஏன்
தோற்றார்கள் என்பதற்கான பதில் எளிது.//

ராமானுஜரும், பாரதியும் தோற்றிருக்கலாம். அதற்கான காரணமாக நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். அதே நேரம் எது சரியான வழிமுறை, வெற்றிபெறக் கூடியது என்பதும் தெளிவில்லை. பெரியார் உட்பட யார் பார்பனியதை முழுமையாக வென்றுவிட்டார்கள் என்று இன்னமும் தெளிவில்லை. மேலும் நான் இளையராஜாவை விமர்சிக்க கூடாது என்று சொல்லவில்லை. இங்கே காண்பிக்கப் படுவது இளையராஜ மீதான வெறுப்பு. ஒரு தலித் தாங்கள் விரும்பும் அரசியல் சட்டகத்தில் சிக்காததன் வெறுப்பு. உதாரணமாய் ஐஐடியில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் ஒரு (ஒரே ஒரு) தலித், பல பார்பனிய விழுமியங்களை உளவாங்கியவராக இருக்கலாம். அந்த சூழ்நிலையில் ஸர்வைவ் ஆக அது மிகவும் தேவையாகவும் கூட இருக்கலாம். அதற்காக அவரை antagonize செய்வது (அதுவும் அந்த அதிகாரத்தை அதிக பிரச்சனை இல்லாமல் அனுபவித்தவர்கள்) எந்த விதத்தில் நியாயம், அதன் பின்னுள்ள உளவியல் என்ன என்பதை பற்றியே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இதை முன்வைத்து பேசுவதாய் இருந்தால், இன்னும் விவாதிக்க பல உண்டு.

//முடிவாக இளையராஜா யாராலும் மறுக்க முடியாத மாபெரும் இசை மேதை என்பதற்கு நமக்கு ஞானியிடமிருந்தோ அல்லது சாருவிடமிருந்தோ சான்றிதழ் தேவையில்லை //

ஆமாம், ஆனால் இங்கே வெறுப்பில் இது குறித்துதான் பிரச்சனையை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பார்பனியதை முன்வைத்து ஞாநியோ, சாருவோ ராஜாவை விமர்சிக்கவில்லை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். அந்த ஞாநியின், சாருவின் ' விமர்சனங்களுக்கே' சுமு உட்பட பலர் ஆதரவாக வந்ததை முன்வைத்தே எனது பல கருத்துக்கள் பதிவாகி உள்ளன. மற்றபடி எனக்கு இளயராஜா ஒரு இசைமேதையாய் இருப்பதும், பார்பனியத்துடன் சமரசம் செய்துகொள்வதிலும் ஒரு consistency பிரச்சனை ஏதோ இருப்பதனால் இதை பேச தேவை வரவில்லை. இன்னும் சொல்லப் போனால், இசை என்பதிலேயே (கர்நாடக ஆனாலும், மேற்கு ஆனாலும்) நாம் விரும்பாத சட்டகத்தில் அது இருப்பதும், அதே நேரம் அது வளமானதாகவும், புறக்கணிக்க இயலாததாகவும், கவர்வதாய் இருப்பதிலும், இன்பம் தருவதிலும் பிரச்சனை இருப்பதாக் தோன்றவில்லை. இது குறித்த சமன்பாடுகள் சிக்கலானவை என்றே நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி!

11/15/2006 3:27 PM  
Blogger ROSAVASANTH said...

ஜோ, அருண்மொழி,

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி. இளையராஜா face savingற்காக இதை சொல்லவில்லை. நேர்மையாகவே இதை சொல்லியிருப்பதாகவே நான் நம்புகிறேன். மேலும் எனக்கு ஞானராஜசேகரன் மீது பெரிய மரியாதை கிடையாது. இவர் 'பெரியார் 'படம் எடுத்து விட்டால், பொருத்தமானதாக உருவாக வேண்டிய பெரியார் பற்றிய படம் உருவாகாமல் போய்விடுமே என்ற கவலை மட்டுமே உண்டு (ஞாநிக்கும், வேலு பிரபாகரனுக்கும் கூட என் கவலை பொருந்தும்).

இவை ஒரு புறமிருக்க, இந்த பதிவில் நான் குறிப்பிட்ட கருத்துக்களில் மாற்றமில்லை. பெரியார் படத்துக்கு இசையமைக்க ராஜா மறுத்தாக செய்தி வராமலிருந்தால் இதை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது என்பதை தவிர.

11/15/2006 3:36 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், நீங்கள் விரும்பினால் உங்கள் பின்னூட்டத்தையும், என் பதிலையும், அல்லது சில பகுதிகளை வெளியிட முடியும்.

11/15/2006 3:47 PM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இளையராஜா இந்த முழு சர்ச்சையையும் குறித்து தெளிவாகவே ஜுவியில் கூறியுள்ளார். இந்த விசயத்தை ஊடகத்தில் சர்ச்சையாக்கியதிலேயே ரோசாவசந்த் ஏற்கனவே குறிப்பிட்ட இளையராஜா மீதான வெறுப்பு செயல்பட்டு உள்ளது. ஈவெராவின் சமுதாய பார்வை (இன்றைய பதிப்புகளில் தூய்மைப்படுத்தி poitically correct பிம்ப உருவாக்கத்திற்கு அப்பால்) அப்படி ஒன்றும் தலித் ஆதரவு பார்வை கிடையாது. ஈவெரா தமது ஆயுதமாக கையிலெடுத்த ஆரிய இனவாதக் கோட்பாடு சித்தாந்த அளவில் ஹிட்லரின் மிரர் இமேஜாகத்தான் இருக்கிறது.அடுத்ததாக தேவர்கள் இன்றைய ஆதிக்க சாதியினர் ஆவதற்கு முன்னர் எந்த நிலையில் இருந்தனர்? முக்குலத்தோரில் 'கிரிமினல் இனத்தவர்' என முத்திரை குத்தப்பட்டு மாலைவேளைகளில் காவல்துறைக்கு குடும்பத்துடன் கணக்கு கொடுக்க சென்ற குடும்பத்தினர் என்கிற நிலையில் இருந்து இன்றைக்கு 'ஆதிக்க சாதியினராக' வளர்ந்ததில் திராவிட அரசியல் இயக்கத்தினரின் பங்கு என்ன? திமுக தேர்தல் சுவரொட்டியில் தேவர் குல சிங்கங்களுக்கு தாம் செய்த நன்மைகளை பட்டியலிட்டு ஓட்டு சேகரித்த போது ஈவெரா உயிருடன் தான் இருந்தார். காமராசர் தோற்ற போது அவரை கடவுள் காப்பாற்றவில்லையே என கிண்டலடித்து கொண்டுதான் இருந்தார். ஆனால் பார்ப்பனியம் உருவாக்கிய ஆதிக்க சாதிமுறை குறித்து பேசுபவர்கள் இந்த தகவுகளை எல்லாம் விட்டுவிடுவது ஏனோ? நிற்க, 'பார்ப்பனியம் உருவாக்கிய' சாதியத்திற்கு சற்றும் குறையாத சாதீயத்தை ஐரோப்பிய வரலாற்றிலும் பார்க்கலாம். காலனிய விரிவாதிக்கம், பெருமளவு முதல் உள்ளிறக்கம் ஆகியவையே இந்த சாதியத்தினை இல்லாமல் ஆக்க உதவியது. ஆனால் இன்றைக்கும் ஐரோப்பிய ஊர்ப்புற நடைமுறைகளில் அதன் எச்சசொச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக, ஏதோ பார்ப்பனியம் என்கிற மாயபிசாசு இன்றைய சாதிய கொடுமைகளை உருவாக்குவதாக கூறுவது எந்த அளவு உண்மை என்பது கேள்விக்குரியது. இதே ரீதியில் திரிக்கப்பட்ட செய்திகள், இல்லாத பார்ப்பனீயம், ஆகியவற்றின் அடிப்படையில் இளையராஜாவில் அடிமை தன்னிலையை கண்டுபிடிப்பது தனிமனிதன் மீது இன்று உருவாக்கப்படும் முற்போக்கு முலாம் பூசப்பட்ட கருத்தியல் வன்முறை.

11/15/2006 4:13 PM  
Blogger ROSAVASANTH said...

//ஈவெராவின் சமுதாய பார்வை (இன்றைய பதிப்புகளில் தூய்மைப்படுத்தி poitically correct பிம்ப உருவாக்கத்திற்கு அப்பால்) அப்படி ஒன்றும் தலித் ஆதரவு பார்வை கிடையாது. ஈவெரா தமது ஆயுதமாக கையிலெடுத்த ஆரிய இனவாதக் கோட்பாடு சித்தாந்த அளவில் ஹிட்லரின் மிரர் இமேஜாகத்தான் இருக்கிறது.//

இதை போன்ற பலர் எழுதிய, குறிப்பாக அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ளவை, தனக்கு வசதியான வகையில் விஷயங்களை திரிக்கும் உளரல்கள் என்பதற்கு மேல் என்னால் எதையும் காண முடியவில்லை. குறிப்பாக ஹிட்லரின் மிரர் இமேஜ் என்பது உளரல் மட்டுமல்ல, விஷமத்தனம்.

//முக்குலத்தோரில் 'கிரிமினல் இனத்தவர்' என முத்திரை குத்தப்பட்டு மாலைவேளைகளில் காவல்துறைக்கு குடும்பத்துடன் கணக்கு கொடுக்க சென்ற குடும்பத்தினர் என்கிற நிலையில் இருந்து இன்றைக்கு 'ஆதிக்க சாதியினராக' வளர்ந்ததில் திராவிட அரசியல் இயக்கத்தினரின் பங்கு என்ன? //

திமுக பங்கு நிச்சயம் இருக்கும். ஒருவகையில் திமுகவை நேர்மறையாகவும் இதை வைத்து பார்க்கலாம். தலித் பார்வையில் இதில் ஏற்படும் பிரச்சனைகள், நமது சாதிய சமூகத்திற்கு மட்டுமே உள்ளவை. அதை பற்றி பேசாமல் திமுகவை பற்றி மட்டும் பேசும் 'புத்திசாலித்தனம்' பற்றி புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது!

//திமுக தேர்தல் சுவரொட்டியில் தேவர் குல சிங்கங்களுக்கு தாம் செய்த நன்மைகளை பட்டியலிட்டு ஓட்டு சேகரித்த போது ஈவெரா உயிருடன் தான் இருந்தார். //

இதற்காக எல்லாம் சாக முடியுமா? அதுசரி இன்று தேவர்களுக்கு, முத்துராமலிங்க தேவருக்கு வக்காலத்து வாங்குவது பெரியாரிஸ்டுகளா, இந்துத்வவாதிகளா. தேவர் தலித் முரணை வைத்து, வசதிக்கு ஏற்ப பல்லவி பாடும் பார்பனர்களும், இந்துத்வவாதிகளும், உண்மையாக தேவர்களை பற்றி பேசும் சந்தர்ப்பங்களில் ('தேவரை' பற்றி பேசும் போது) என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பது வெளிப்படை. சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தேவர்களை முன்வைத்து பேசும் உத்தியை அலுப்புக்கு அளாகாமல் இன்னமும் இவர்கள் செய்வதை ஒரு புரிதலுக்காக கூட சுவாரசியமானதாக கொள்ள முடியவில்லை.

//பார்ப்பனியம் உருவாக்கிய' சாதியத்திற்கு சற்றும் குறையாத சாதீயத்தை ஐரோப்பிய வரலாற்றிலும் பார்க்கலாம். காலனிய விரிவாதிக்கம், பெருமளவு முதல் உள்ளிறக்கம் ஆகியவையே இந்த சாதியத்தினை இல்லாமல் ஆக்க உதவியது. ஆனால் இன்றைக்கும் ஐரோப்பிய ஊர்ப்புற நடைமுறைகளில் அதன் எச்சசொச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.//

இப்போதெல்லாம் இப்படி எதையாவது கேட்டால் ஜாலியாக மட்டுமே இருக்கிறது. சின்ன கருப்பன், நீலகண்டன் இப்படி குண்டு போடுவது இது முதல் முறையல்லவே. இவை இப்படியிருக்க 'பார்பனியம் மாயப்பிசாசு அல்ல' என்ற தொனியில் எழுதியதில் இருந்து அரவிந்தன் நீலகண்டனை முன்வைத்து மீண்டும் ஒருமுறை(இந்துத்வம் மீதான சில மறுவாசிப்புகள் பற்றி) யோசிக்க தொடங்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

பிகு: முத்துகுமரன் பதிவில் நீங்கள் எழுதியதை படித்தேன். இன்று இணையத்தில் எழுதும், பல கயமைத்தனம் மிகுந்த இந்துத்வ வாதிகளிட்ம் இருந்து உங்களை வேறு படுத்தி, ஓரளவு சுய நேர்மை கொண்டவராக கருதியிருந்தேன். அப்படி எல்லாம் எண்ணத் தேவையில்லை என்று உணர்த்தியதற்கு நன்றி.

11/15/2006 5:09 PM  
Blogger Muthu said...

ரோசா,

மேற்கண்ட கவியின் கருத்துக்களில் பெரும்பாலும் எனக்கு ஒப்புதல் உண்டு.அதற்கான உங்களின் பதிலிலும் சுந்தரமூர்த்திக்கான உங்களின் பதிலிலும் நீங்கள் பிரச்சினையை தேவையில்லாமல் ( அந்த அர்த்தத்தில் அல்ல) too complicated ஆக பார்ப்பது போல் தோன்றுகிறது.(நவ பார்ப்பனியம் இன்ன பிற)அதற்காக நான் பிரச்சினையை மிகவும் எளிமைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். இதைப்பற்றி விளக்கமாக பிறகு எழுதுகிறேன்.ரொம்பவே பிசி.

சண்டே ஈவினிங் ஃப்ரியா?

11/15/2006 5:18 PM  
Blogger இளவெண்ணிலா said...

//இவை ஒரு புறமிருக்க, இந்த பதிவில் நான் குறிப்பிட்ட கருத்துக்களில் மாற்றமில்லை. பெரியார் படத்துக்கு இசையமைக்க ராஜா மறுத்தாக செய்தி வராமலிருந்தால் இதை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது என்பதை தவிர//

அது எப்படி? இந்தச் செய்தியே பொய் என்னும்போது நீங்கள் சொல்லும் அடிமை மனோபாவம் என்னும் குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லையே..அவரே சொல்கிறாரே, வணிக ரீதியில் எவ்வளவோ குப்பைகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு இசையமைத்துள்ளதாக?...

ஒரு வதந்தியை கையில் எடுத்துக் கொண்டு அதை ஏதோ பெரிய அறிவாளி போல ஆராய்ந்து, அடிமை மனோபாவம் எனத் தீர்ப்பளித்து விட்டு, இப்போது அந்த செய்தியே பொய் எனும்போதும் என் கருத்துக்களில் மாற்றமில்லை என பல்லிளிக்கும் உங்களுக்கெல்லாம் மான,வெட்கம் ஏதாவது உள்ளதா? வேலை வெட்டியாவது உள்ளதா?

11/15/2006 6:16 PM  
Blogger ROSAVASANTH said...

புலிப்பாண்டி, அடுத்தவர் எழுதியதை வாசித்து உணரும் புத்தி உங்களிடம் கொஞ்சமாவது உண்டா? நான் அடிமை தன்னிலை என்றது பெரியார் படத்துக்கு இசையமைக்காததை முன்வைத்து அல்ல.

(மற்றபடி இண்டியாக்ளிட்ஸில் செய்தி என்று ஒன்று வந்தது, இப்போது ஜுவியில் வேறு வருகிறது. இதற்காக வாசிப்பவர்கள் பொறுப்பாக முடியாது.)

11/15/2006 6:31 PM  
Blogger Thangamani said...

அன்புள்ள வசந்த்:

இந்தப்பதிவும், விவாதங்களும் அருமை.

நவபார்பனீயம் குறித்த உங்கள் பார்வையைப் புரிந்துகொள்கிறேன். நவபார்ப்பனீயத்தின் உண்மையான தீவிரத்தன்மையை முழுமையாக உணர்ந்ததால் பார்பனீயக்கருத்துகளுக்கு ரசிகராகவும், அடிமை மனநிலையை அடைந்தவராகவும் மட்டும் இருக்கும் இளையராஜாவை நவபார்ப்பனீயத்தின் உருவமாக பார்க்க உங்களால் முடியவில்லை என்று புரிந்துகொள்கிறேன். எனது புரிதலின் பேரில் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ராஜா வெறும் ரசிகர்தான், அடிமைதான்; சித்தாந்தவாதி ஆகிவிடவில்லை; ஆகிவிடவும் முடியாது. எப்படி வேண்டும்போது மதக்கலவரங்களுக்கு சிலர் தேவைப்படுகிறார்களோ அப்படி வேண்டுமனால் ராஜாவும் வேறு ஒரு களத்தில் பயன்படுத்தப்படலாம்.

பெரியாராலும், இளையராஜாவாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட (படுகிற) உங்களிடமிருந்து வருகிற இப்பார்வை முக்கியமானது என்பது என் எண்ணம்.

11/15/2006 6:41 PM  
Blogger ROSAVASANTH said...

/அதற்கான உங்களின் பதிலிலும் சுந்தரமூர்த்திக்கான உங்களின் பதிலிலும் நீங்கள் பிரச்சினையை தேவையில்லாமல் ( அந்த அர்த்தத்தில் அல்ல) too complicated ஆக பார்ப்பது போல் தோன்றுகிறது.(நவ பார்ப்பனியம் இன்ன பிற)//

சரி, எழுதியதை படித்தீர்கள் என்று நம்புகிறேன்.


//சண்டே ஈவினிங் ஃப்ரியா?//

நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

11/15/2006 6:47 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, கருத்துக்கு நன்றி.

11/15/2006 6:54 PM  
Blogger G.Ragavan said...

ஜோ, பார்த்தீர்களா? அவசரப்படாதீர்கள் என்று சொன்னது எவ்வளவு சரியாகப் போயிற்று. அவசரப்பட்டு முடிவெடுப்பது இப்படித்தான் முடியும். நான் உத்தமன் என்று சொல்லிக் கொள்ள வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் பொறுமை நமக்கெல்லாம் அவசியமாகிறது. முழு விவரம் தெரியுமுன்னமே...நமக்கு அந்தக் குறிப்பிட்ட நபர் மேலுள்ள தனிப்பட்ட வெறுப்பு அவரைத் தாளிக்க வைக்கிறது.

11/15/2006 6:56 PM  
Blogger ROSAVASANTH said...

//நமக்கு அந்தக் குறிப்பிட்ட நபர் மேலுள்ள தனிப்பட்ட வெறுப்பு ...// நான், ஜோ இதுவரை எழுதியதை பார்தால் அப்படித்தான் தெரிகிறதா? ரொம்ப நன்றி!

11/15/2006 7:00 PM  
Blogger ஜோ/Joe said...

ராகவன்,
இப்போது நீங்கள் தான் அவசரப்படுகிறீர்கள் .நான் ஒரு இளையராஜா ரசிகன் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறேன் .எனவே அவர் மேல் வெறுப்பு என்பது அபத்தம் .மேலும் இளையராஜா சொல்லியதாக சொல்லப்பட்டது உண்மையாக இருந்தால் இது என் கருத்து ,இளையராஜா ரசிகனாக இது எனக்கு ஏமாற்றம் என்று தானே நான் சொல்லியிருக்கிறேன் .இப்போது இளையராஜா அப்படி சொல்லவில்லை என்பதால் மகிழ்கிறேன் .அதற்காகத் தான் இங்கே அவர் சொன்னதை பின்னூட்டமிட்டேன் .இதிலே எங்கே நான் தவறு செய்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள் ?

11/15/2006 7:06 PM  
Blogger Muthu said...

அட குழப்பாதீங்கப்பா..இளையராஜா உஷார் ஆயிட்டாரு..அல்லது அவர் அப்படி சொல்லவே இல்ல..
சொன்னத மறுத்தவங்க(அல்லது இளையராஜாவை ஆதரித்தவர்கள்) இளையராஜா அப்படி சொல்லியிருக்க மாட்டாருன்னு மறுத்திருந்து இப்ப வூடு கட்டுனா அது நியாயம். இல்லாட்டி எதுக்கு சும்மா உதாரு விடறீங்க?

11/15/2006 7:15 PM  
Blogger ROSAVASANTH said...

//இளையராஜா அப்படி சொல்லியிருக்க மாட்டாருன்னு மறுத்திருந்து இப்ப வூடு கட்டுனா அது நியாயம்.//

ஆமாம். அவர்களும் செய்தியை அல்லது வதந்தியை நம்பி, ராஜா சொன்னதை நியாயப்படுத்தினார்கள். ஆனால் செய்தியை நம்பி ராஜாவை விமர்சிப்பவர்களை மட்டும் இப்போது திட்டுகிறார்கள். தேவைன்னா லாஜிக் எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யும் வாத்யாரே!

11/15/2006 7:21 PM  
Blogger இளவெண்ணிலா said...

//புலிப்பாண்டி, அடுத்தவர் எழுதியதை வாசித்து உணரும் புத்தி உங்களிடம் கொஞ்சமாவது உண்டா?//
உண்டு ரோசாவசந்த்..வாசித்து எளிதில் உணரமுடியாத அளவுக்கு நீங்கள் ஒன்று பெரிய காவியமோ,இலக்கியமோ படைத்துவிடவில்லை..இது வெறும் வதந்தியின் அடிப்படையிலான வம்பு மட்டுமே..எந்த மடையனுக்கும் புரியும்..

//நான் அடிமை தன்னிலை என்றது பெரியார் படத்துக்கு இசையமைக்காததை முன்வைத்து அல்ல.//
இது இப்போது உண்மை வெளிவந்தவுடன் சொல்லும் ஒரு சப்பைக்கட்டு அய்யா..உங்களுக்கு பிரச்னையாகவும், நெருடலாகவும் சொல்லியுள்ளவைகளை பொதுப்படையாக நீங்கள் சொல்லவில்லை..அதை பெரியார் படத்துக்கு இசைஅமைக்காத விஷயத்துடன் பொருத்தி இதற்கு கொள்கை தடுத்தால் அப்புறம் அதுமட்டும் எப்படி செய்தார் என்றே கேட்டுள்ளீர்கள்..கீழே நீங்கள் சொன்னது...

//எனக்கு பிரச்சனை என்னவென்றால், பெரியார் படத்துக்கு இசையமைப்பதில் இசைவு கொள்ள முடியாத இளயராஜாவிற்கு, 'தேவர்மகன்' படத்திற்கு இசையமைக்கும் போது எந்த இடத்திலும் நெருடலே ஏற்படவில்லை என்பதுதான்.//

//அதைவிட எல்லாம் 'போற்றி பாடடி பெண்ணே!' என்று தன் சொந்த குரலில் பாடும்போது, இளயராஜாவிற்கு எங்குமே நெருடவில்லை என்பதுதான். வணிக நிர்பந்தம் காரணமாய் மட்டும் இசையமைத்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் கோடிரூபாய் அளித்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாதவருக்கு, தேவர் காலடிமண்னை (தேவர் சமூகம் ஒரு பெரிய வன்முறையை தலித் சமுதாயம் மீது அவிழ்த்து விட்ட காலகட்டத்தில்) போற்றி பாடும்போது, எந்த நெருடலும் இல்லாமல் இசைவு கொள்ள முடிகிறதென்றால் அதை என்ன சொல்லலாம்?!//

வணிக நிர்ப்பந்தம் என்றால் விட்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள்..ஆனால் தேவர் மகனில் அவர் பாடியதை அப்படி விட்டுவிடமுடியாது ..ஏனெனில் பெரியார் படத்திற்கு அவர் கொள்கை ரீதியில் வணிக நிர்ப்பந்தங்களை ஒதுக்கி மறுப்பு தெரிவிக்கிறார், என்கிறீர்கள்..எனவே எல்லா இடங்களிலும் இந்த பொருத்திப் பார்ப்பது வருகிறது..
இப்போது பெரியார் படத்துக்கு இசையமைப்பதற்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்பதன் மூலம் வணிகத்துடன் கொள்கைகளை கலப்பதில்லை என்று ராஜ தெளிவாக சொல்லி விட்டார்..

பிறகு என்ன?தேவர் மகனில் அவர் பாடியதை வணிக நிப்பந்தம் என்று விட்டு விட வேண்டியதுதானே??...

//மற்றபடி இண்டியாக்ளிட்ஸில் செய்தி என்று ஒன்று வந்தது, இப்போது ஜுவியில் வேறு வருகிறது. இதற்காக வாசிப்பவர்கள் பொறுப்பாக முடியாது//

வெறும் ஒரு வரிக்கு ஆயிரம் வரி விளக்கம் தரும் தங்களைப் போன்ற அறிவாளி, இப்படி ஒரு கேவலமான சப்பைக்கட்டு கட்ட் நேர்ந்ததன் காரணம் பாழாய்ப்போன அகம்பாவம்(அல்லது காலக்கொடுமை)..உங்களுக்குத் தெரிந்ததுதான் ..இருந்தாலும் சொல்கிறேன்..இண்டியாக்ளிட்ஸில் வந்தது பேர் போடாமல் வந்த அனாமத்து செய்தி..ஜூ.வி.யில் வந்தது இளையராஜா தானே சொன்னது..உங்கள் போன்ற அறிவு சீவிகள் பொதுவாக எதை நம்புவீர்கள்???

11/15/2006 7:23 PM  
Blogger ROSAVASANTH said...

கொஞ்சம் பழையது. கார்திக் ஆசைப்பட்டதால் அவருக்கு எழுதிய பதில் பின்னூட்டத்தில், தனிப்பட்ட பதிலாக இல்லாததை, தனிப்பட்ட விஷயங்கள் தவிர்த்து, பொதுவான எனது சில கருத்துக்களை மட்டும் வெட்டி ஒட்டுகிறேன்.

// .... இளையராஜாவை "ஒரு தலித் ஏன் தம் அடையாளத்தை கட்டிக்கொள்ளவில்லை என்று ஒருபுறத்திலும்....//


நான் அப்படி கேட்கவில்லை; சொல்லவில்லை. ஏற்கனவே ஜாதிய சமூகம் ஒரு தலித்துக்கு அளிக்கும் சுமைகள் தாங்கவியலாதது. இதில் அடையாளத்தை வேறு சுமக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு கேள்வி கிடையாது. தலித் எதை சுமக்க வேண்டும், சுமக்க கூடாது என்று தலித் அல்லாதவர்கள் (நான் உட்பட) சொல்லக் கூடாது என்பதுதான் என் வாதம். அப்படி சொல்பவர்களையும், தங்கள் அரசியல் பார்வைக்கு எதிராக இருப்பதால், ராஜா மீதான இவர்கள் தாக்குதலையும் தீவிரமாக எதிர்கிறேன்.

மாறாக நான் பேசியது சாதிய சமூகம் உருவாக்கி இருக்கும் ஒரு குறிப்பிட்ட மனநிலை பற்றி மட்டுமே.

// ... பார்ப்ப‌ன‌ராய் எல்லோரும் மாற‌ முய‌ற்சித்தால் அதில் என்ன‌ பிர‌ச்சினை என்று கேள்வியை வைப்பது போல ...//

ஒரு பிரச்சனைக்கு பல பார்வைகள் இருக்கலாம். சமூகத்தில் அதை உடைப்பதற்கு பல போக்குகள் இருக்கலாம்.பாரதி பார்பனரல்லாதவர்க்கு பூணுல் போட்டது ஒருவகை; பூணுலை அறுப்பது இன்னொரு வகை. எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பது இன்னொரு வகை. நாம் ஏதோ ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து அடைந்த காரணத்தால் அதை மட்டும் பற்றிக்கொண்டு, மற்ற போக்குகளை புரிந்து கொள்ளாததுதான் மூர்க்கம். மேலும் நான் பேசியது அதிகாரத்தை பற்றியது. 'பார்பனர்களை போல எல்லோரும் ஆங்கிலத்தில் வீட்டில் பேசவேண்டும், மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரர்களுடன்' என்று பெரியார் சொன்னதை பார்த்தால், அதுவும் பார்பன நிலைக்கு போய், அவர்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். (பெரியாரின் இந்த ஆங்கிலம் தொடர்பான கருத்து எனக்கு ஒப்புதலில்லை என்பது வேறு விஷயம். கருத்தின் பின்னுள்ள பெரியாரின் நோக்கத்தை மட்டுமே..) கருவறை நுழைவும் அதுதான். கருவறை நுழைவு ஓகே, தியாகராஜரை ராஜா பாடினால் அது நவப்பார்பனியம் என்பது எப்படி என்று விளக்க வேண்டும்.

11/15/2006 7:25 PM  
Blogger Thamil said...

அப்படி என்றால் தகவல் வெளியிடுவற்குமுன்னர் அதன் உண்மை தன்மையை நீங்கள் ஏன் ஆரய்ந்து இருக்க கூடாது, அல்லது அது கிடைத்தவுடன் ஆதாரத்துடன் மீள்பதிப்பு, அல்லது திருத்தம் செய்திருக்ககூடாது, நீங்கள் வெளியிட்ட செய்திக்குதான் இங்கு கருத்துகள் இடப்படுகிறது, வெளியிடப்படும் செய்திகளுக்கு வலைபதிப்பவரே பொறுப்பு என்பது பொதுவான விடயம்.

11/15/2006 7:26 PM  
Blogger ROSAVASANTH said...

புலி, தமிழ் அருமையான கருத்துக்கள். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் வல்லமை நாக்கு லேது. தேங்கஸண்டி!

11/15/2006 7:30 PM  
Blogger இளவெண்ணிலா said...

அய்யோ..எந்துக்கண்டி தேங்ஸூ..பரலேதண்டி..நாக்கு தெலுசு மீரு டேலன்ட்டு...:):)

11/15/2006 7:39 PM  
Blogger ஜோ/Joe said...

//குற்றம் கண்டுபுடித்தே பெயர் வாங்கும் பேர்வழிகள் அய்யா நீங்களெல்லாம்.//

இது தேவை தான் எனக்கு!

11/15/2006 7:48 PM  
Blogger ROSAVASANTH said...

இளயராஜா இசையமைக்க மறுத்ததாக செய்தி வந்தது; இளயராஜ ரசிகர்கள் நடத்தும், யாஹு க்ரூப்பில் நடந்த விவாதத்திலேயே இதை முதலில் அறிந்தேன். பின்பு இல.கணேசன் பாராட்டியதாக படித்தேன். மேலும் சில பாராட்டுக்கள் விமர்சனங்களை படித்தேன். இதன் அடிப்படையிலேயே என் பதிவு எழுதப்பட்டது. முதலில் வந்த செய்தி பொய் என்றால், அதை முன்வைத்து எழுதியது நிச்சயமாய் பொருந்தாது. அந்த வகையில் எழுதப்பட்ட கருத்துக்களை திரும்ப பெற்றுதான் ஆகவேண்டும். எல்லா விஷயம் பற்றியும் இப்படித்தான் கருத்து சொல்ல முடியும், பார்க்க முடியும். இளயராஜா சொனன்னதை பாராட்டியவர்களும், நியாயப்படுத்தியவ்ர்களும் கூட, செய்தியை உண்மை என்றே எடுத்து பேசியுள்ளனர். இதில் விமர்சித்தவர்கள் மட்டும் பொறுப்பு ஏற்கமுடியாது. இன்னமும் ஜூனியர் விகடனை படிக்கவில்லை; படிப்பேன். படித்தாலும் உண்மை முற்றிலும் என்னவென்பதை அறியக்கூடிய சாத்தியம் இல்லை. ஆனால் இளயராஜா இதை மறுத்தால், தன் கருத்து என்று ஒன்றை பேட்டியில் சொன்னால் அதைத்தான் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் தனிப்பட்ட முறையில் ராஜா தனது கருத்துக்களை, நிர்பந்தங்களுக்கு அளாகாமல் நேர்மையாக சொல்ல கூடியவர் என்பது என் கருத்து. அதை சொல்லவும் செய்திருக்கிறேன்.

இதை எல்லாம் மீறி, தேவர் மகன் விஷயத்தில் ராஜா மீது நிச்சயமாய் விமர்சனமாய் எழுதலாம். அந்த கருத்துக்களில்தான் மாற்றமில்லை. இதற்கு மேல் விளக்க ஏதாவது இருப்பதாய் தெரியவில்லை. பதிவு எழுதிய பொறுப்புக்கு இதை சொல்ல வேண்டியுள்ளது. வேலைக்கு இடையில் இந்த அளவுதான் கன்ஸிஸ்ண்தண்தாக எழுத முடியும். மீதி கருத்தும் மற்ற பின்னூட்டங்களும் நாளை. நன்றி!

11/15/2006 8:47 PM  
Blogger aathirai said...

என்னுடைய ஏமாற்றத்துக்கு அதிகமாக ஏற்றிவிடப்பட்ட
எதிர்பார்ப்பும் காரணம்.

எனக்கு லேசாக நினைவில் இருக்கும் யாப்பிலக்கணப்படி பழைய
தமிழ் செய்யுள்கள், இலக்கியங்கள் ஏற்கெனவே இசைக்கு,
தாளத்துக்கு கட்டுப்பட்டுதான் அமைந்திருக்கும்.
இவர்கள் தானா என்றால் அவர்கள் தேமா என்பார்கள்.
இதற்கு classic example திருப்புகழ்.
அதனால் இவர் மெட்டுக்கு பொருந்திய பாடலை
ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும்.
புது கவிதைகளுக்கு வேண்டுமானால் இது பொருந்தாது.

உங்களுடைய பழைய பதிவை நேரம் கிடைக்கும்போது தேடி பார்க்கிறேன்.

11/16/2006 2:16 AM  
Blogger ROSAVASANTH said...

உஷா, உங்கள் கருத்துக்கும் அன்பிற்கும் நன்றி.

ஆதிரை, ஏற்றிவிடப்பட்ட எதிர்ப்பார்ப்பு என்பது சரியாக இருக்கலாம். ராஜா திருவாசகத்துக்கு அமைத்த இசை மரபு சார்ந்து, இலக்கணம் சார்ந்து வருவதல்ல. அதை மீறி, அதே நேரம் வேறு ஒரு ஹார்மொனியை கொண்டது. நாம் பழக்கப்பட்ட வந்துள்ள மனநிலையை மீறி, அடையாளம் காணாத ஒன்றுக்கு மனதை திறந்து வந்தால்தான் அது நெருக்கமாகும். நன்றி.

இப்போது ராஜாவின் பேட்டி சூடாக ஆங்காங்கே பேசப்படுவதை காண்கிறேன். பேட்டியின் சில பகுதிகளையும், ஞானராஜசேகரன் சொன்னதையும் (தேர்ந்தெடுத்து பலர் இதை பற்றி பேசவில்லை) நாளை தட்டச்சுகிறேன்.

11/16/2006 3:37 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

முன்குறிப்பு: மூன்று நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்து நேற்று ஒருவழியாக முடித்த பிறகு ரவி ஸ்ரீநிவாஸைக் குறிப்பிட்டு எழுதியதற்கும் சேர்த்து எழுதலாம் எனத் தோன்றியதால் அனுப்பாமல் விட்டுவிட்டேன். இன்று பார்த்த இளையராஜாவின் விளக்கம் இந்த விவாதத்தின் சமன்பாட்டை மாற்றியிருக்கிறது. என்னுடைய பதிலில் விவாதத்திற்கு பொருத்தமாக இன்னும் ஏதேனுமிருப்பதாகத் தோன்றினால் வெளியிடவும். அல்லது எழுதியதை உங்களுடனாவது பகிர்ந்துகொள்ளும் நோக்கம் மட்டுமே நிறைவேறினாலும் சரி.
**********************

வசந்த்,
1. "முன்வைத்த காலை...." என்ற என்னுடைய வாசகம் நேர்மறையான தொனியிலேயே சொல்லப்பட்டது. அதை நீண்டகால நோக்கில் கருத்து மாற்றம் என்கிற பரிணாம வளர்ச்சியும், குறுகிய காலநோக்கில் அடிக்கடி பேச்சை மாற்றாத நேர்மையும் கொண்டவர் என்ற அடிப்படையில் என்பதாக எடுத்துக்கொள்ளவும்.

2. நவபிராமணீயம் என்பதை இரு பொருட்களில் பயன்படுத்திப் படித்திருக்கிறேன்.
தனக்கு சவால்களாக புதிதாகத் தோன்றுபவற்றையேல்லாம் கயமையாக உள்வாங்கி செரித்துக்கொண்டபடி தொடர்ந்து தன்னை புதுப்பித்துகொண்டு நவநாகரிக வேடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவல்ல பிராமணியமே நவபிராமணியம். இரண்டாவது பிராமணல்லாத சமூகத்தில் பிறந்தவர்கள் தமக்கிருக்கும் தாழ்வுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள தங்களை மறுத்து பிராமணியக் கலாச்சார விழுமியங்களை வலிய சுமந்துகொண்டு புதுப் பிராமணராகும் முயற்சி. நான் இந்த இரண்டாவது பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறேன். ஆய்வுச் சூழலில் நவபிராமணியத்திற்கு முதலாவது வரையரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இரண்டாவதுக்கு வேறேதாவது பெயர் கொடுக்கப்பட்டிருந்தால் அதை பயன்படுத்தலாம் (இங்கு “வெள்ளை” மனம் கொண்ட கருப்பர்களைக் குறிப்பிட Oreo cookie என்ற உருவகம் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட உருவகம் ஏதேனுமிருக்கிறதா?)
***********************

நிற்க.
ரஜனி/கமல், இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா, எஸ்பிபி/மலேசியா வாசுதேவன் போன்ற புது சினிமாக் கலைஞர்களின் வருகையின் போது கல்லூரியில் காலடி வைத்த எனக்கும் இவர்களின் பாதிப்பு தீவிரமாக இருந்து காலப்போக்கில் தேய்ந்து வந்திருக்கிறது. இதில் தலைமுறை மாற்றம் என்பதே மிக முக்கியமானது. மற்றபடி அந்த தாக்கத்திற்கு ராகம், தாளம், லொட்டு, லொசுக்கு... என்றெல்லாம் எதுவும் அறியாத ஒரு பாமர ரசிகத்தன்மைக்கு 'புதுமை' என்று ஒரு காரணத்தைத் தவிர வேறேதும் இல்லை. இசையின் நுணுக்கங்களையெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப்போட்டு அலசும், இசைவகைகளை-இசைக்கலைஞர்களை ஒப்பிடும் பாண்டித்தியம் கிடையாது. அந்த வகையில் இளையராஜா போலவே எனக்கும் "தியாகராஜ கீர்த்தனையும், நாய்க் குரைப்பும்" ஒன்று தான். இழவு வீட்டுக்கு வெளியே "நேத்திருந்தான்; இன்னிக்கு செத்தான்" பீட்டில் வாசிக்கப்படும் பறை மேளத்திலிருந்து, இங்கு ரேடியோவில் கேட்கும் மோசார்ட், பீத்தோவான் போன்ற மேற்கத்திய செவ்விசை வரை உள்ளத்தோடு இயைதல், உடல் அங்கங்களை இயக்குதல் மட்டுமே என்னுடைய "நல்லா இருக்குது. நல்லா இல்ல" என்று இருமை நிலை ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை. இசையைக் கேட்டு ரசிப்பதோடு சரி. அதைப் பற்றி பேசுவது இல்லை. இளையராஜா உள்பட எந்த இசையையும் விமர்சிப்பதில்லை. ஆகவே என்னுடைய விமர்சனம் அவருடைய இசையைப் பற்றியதோ, அதில் அவருடைய சாதனைகளைப் பற்றியதோ அல்ல.

நான் மேற்கோள் போட்டது இசைஞானி என்கிற முழுச் சொல்லுக்கும் அல்ல. ஞானி என்ற ஒட்டுக்கு மட்டுமே. என் புரிதலில் இந்த பின்னொட்டு அவருடைய இசையறிவை அளவிட்டு அளிக்கப்பட்டதல்ல. தமிழ் வெகுஜன, திரைத்துறைக் கலாச்சாரத்தில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுவது மன்னர், அரசு, பேரரசு, வேந்தர் போன்ற இடைக்கால நிலப்பிரபுத்துவ நெடி வீசும் பட்டங்களே. அந்த மரபில் எம்.எஸ்.வியை "மெல்லிசை மன்னர்" ஆக்கிய மாதிரி புதிய சாதனையாளரான இளையராஜாவுக்கு "இந்த இசைப் பேரரசு", “அந்த இசை மாமன்னர்” என்றெல்லாம் பிரம்மாண்டமான பட்டம் எதுவும் வழங்கப்படாமல் "ஞானி" என்று வித்தியாசமாக வழங்கப்பட்ட பட்டம் அறிவு சார்ந்தது அல்ல, “ஆன்மீகம்” சார்ந்தது. இந்தப் பட்டம் அளிக்கப்பட்டதற்குக் காரணம் இசைக்கு அப்பால் அவருடைய "ஆன்மீக" அடையாளங்களை கணக்கிலெடுக்கப்பட்டதே என்பது என் புரிதல். என்னதான் ஞானம் என்பதற்கு wisdom என்று நீங்கள் பொருள் கொள்ள முயற்சித்தாலும் ஞானி பட்டம் அவர் புனைந்துகொண்ட சாமியார் வெளித்தோற்றத்துக்காகவும், அவருடைய மத/ஆன்மீகச் செயல்பாடுகளுக்காகவும் கிடைத்தது தான் என்பது என் எண்ணம். எம்.எஸ்.விக்கு ஆன்மீக அடையாளங்கள் இல்லையா என்று கேட்கலாம். அவருக்கு அவை குலச்சொத்து மாதிரி தாமாகவே கிடைத்ததால் அதற்கு எந்த சிறப்பு அங்கீகாரமும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கு பிராமணீயக் குறியீடுகள், சடங்குகள் சார்ந்த ஆன்மீக அடையாளங்கள் குலச்சொத்தாக தாமாகவே கிடைத்தவையல்ல. தன் குலச்சொத்தாகக் கிடைத்த கிராமிய சிறுதெய்வ (அல்லது என் கல்லூரி காலத்தில் பரவலாக பேசிக்கொள்ளப்பட்ட மாதிரி அவர் கிறிஸ்தவராக இருந்திருந்தால் அந்த) மத, ஆன்மீக அடையாளங்களை உதறிவிட்டு, அந்த இடத்தில் புதிதாக நிரப்பப்பட்டவையே பிராமணீய மத, ஆன்மீக அடையாளங்கள். அந்த அங்கீகாரத்துக்காக கிடைத்ததே “ஞானி” என்கிற பட்டம். கிடா மீசை வைத்த சிறுதெய்வ வழிபாடு நடத்தும் சாமியாரையெல்லாம் (அல்லது சிலுவையணிந்த கிறிஸ்தவ சாமியாரை) நம்மூரில் யாரும் “ஞானி” என்று அழைப்பதில்லை. ஆன்மீகத் தேடல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் சிறப்புத் தகுதிகளாக, செய்திகளாக பொதுமக்களின் நுகர்வுக்காக வைக்கப்படுவதாலும், தொடர்ந்து இசை “ஞானி”யாக பிரபலப்படுத்தப்படுவதாலும் பொதுவில் அவை பேசப்படுவதிலோ, விமர்சிக்கப்படுவதிலோ தவறில்லை. கருணாதியின் “கலைஞர்” பட்டம் எப்படி சிலரால் நையாண்டி செய்யப்படுகிறதோ அதே போன்ற அரசியல் தான் காரணம். அது கலைஞர் பக்தர்களுக்கு எரிச்சலூட்டுவதைப் போல நான் ஞானியை மேற்கோளுக்குள் போட்டது உங்களுக்கு எரிச்சலூட்டினால் நான் செய்வதற்கு எதுவுமில்லை.

இசையிலும் தலித்திய/நாட்டுப்புற இசையையும், சாஸ்திரீய இசை இரண்டையும் தானே பயன்படுத்துகிறார் என வாதிடலாம். எனக்குத் தெரிந்தவரை இரண்டையும் சேர்த்தோ, மாற்றி மாற்றியோ பயன்படுத்தியிருப்பது திரையிசையில் மட்டும் தான். திரையிசைக்கு அடிப்படை இசைமட்டுமல்ல, படத்தின் தேவைகள் கருதி எங்கெங்கு எதெது ஒத்து வருகிறதோ அதை செய்ய வேண்டிய கட்டாயமும், கடமையும் இருக்கும். திரையிசைக்கு வெளியே இளையராஜா தன் ஆத்ம திருப்திக்காக, இசைக்காக மட்டுமென படைத்த இசைப்படைப்புகள் எனக்கு தெரிந்த வரை அல்லது புரிந்தவரை மேட்டுக்குடிகளின் ரசனைக்கானது. தேவைகளுக்கானது. பாமரர்களுக்கானதல்ல. பாமர இசையை தன் தேவைக்காக சினிமாவில் பயன்படுத்தியிருக்கிறார். சினிமாவுக்கு வெளியே பாமரர்களுக்கென்று பிரத்தியேகமாக கொடுக்கவில்லை. அதைவிட முக்கியமாக சாமான்யர்களுக்கு உதவும் எந்த நற்காரியங்களுக்காக பயன்படுத்தியதுமில்லை. இதையொட்டியே அவுட்லுக் ஆனந்தின் “Outlook asked Ilayaraja about Bob Marley, Bob Dylan, Gaddar, his communist brother Varadarajan and even the recent Live-8 performances where music became a mode of protest” கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு “I am beyond such garbage,” என்று பதிலளித்து ராஜா தன் நவபிராமணீய மனநிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு குப்பை என்று குறிப்பிடுவது இவர்களின் இசையை அல்ல. தானும் அவர்களைப்போலவே எதிர்ப்பிசை படைக்கவேண்டும், எதிர்ப்பரசியல் பேசவேண்டும் என எதிர்பார்ப்பதை . பொதுவாக எதிர்ப்பிசை, எதிர்ப்பரசியல் என்ற கருத்தாக்கத்தை. இந்த மனோபாவம் இசைக்கு ஆன்மீகப்பூச்சு பூசும் பிராமணீய மனோபாவமே.

இதுபோன்ற – தன் வேர்களை மறுக்கிறார், சமூக அக்கறையில்லாதவராக இருக்கிறார் ரீதியிலான – குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பாக நீங்கள் மீண்டும் மீண்டும் வாதமாக வைப்பது இளையராஜா தன் அண்ணன் பாவலர் வரதராஜனை பெருமையுடனும், மரியாதையுடனும் நினைவு கூர்வதை மட்டுமே. பாவலர் அவருடைய சகோதரர்களுக்கு தெய்வம் மாதிரி. ஆகவே தன் அண்ணனை நன்றியோடும், பக்தியோடும் நினைவு கூர்வதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. அதை மட்டுமே வைத்து தன் வேர்களை மறக்காமலிருக்கிறார் என்பதாகிவிடாது. அதை வேறெதன் – அதாவது திரையிசையல்லாத நாட்டுப்புற இசை, பொதுக்காரியங்கள், சமூகசேவைகள் போன்றவை – மூலமாவது அல்லது வேறு எந்த தமிழ்நாட்டு, இந்திய, உலக அளவிலான மக்கள் கலைஞர்களை சிலாகித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் வசந்த் அதையும் சுட்டிக்காட்டலாம். நமக்கு அறியக்கிடைப்பதெல்லாம் ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டப் பெருங்கொடை அளித்தது, தீவிர ரமண மகரிஷியின் பக்தராக இருப்பது, காஞ்சி மடத்து ஒத்துழைப்போடு இசைக்கல்லூரி ஆரம்பிக்க இருந்தது இசை போன்ற பிராமணீய சடங்காசார, கலாச்சாரச் சேவைகளும், , ரமண மாலை, How to name it, Nothing but Wind, திருவாசகம், போன்ற சாஸ்தீரீய சங்கீதம் அல்லது இந்திய-மேற்கத்திய இசைக்கலவைகளைப் படைத்தது, இந்திய, மேற்கத்திய செவ்விசையின் பிதாமகர்களைப் போற்றுவது மட்டும் தான். இவற்றைச் செய்யக்கூடாது, அதற்காக அவரை அவருடைய ரசிகர்கள் சிலாகிக்கக்கூடாது என்பதில்லை. ஆனால் அதை மற்றவர்கள் சொன்னாலோ, விமர்சித்தாலோ ராஜா வழக்கு போடுவதும், அவருடைய ரசிகர்கள் அதை சாக்கடை, மடமை என்று சாடுவதும் மூர்க்கத்தனமான மேட்டுக்குடி மனோபாவத்தின் வெளிப்பாடு என்பது போலத் தெரிகிறது.

ஞாநி பலியிடுவதை எதிர்த்தார் அதனால் தலித் எதிர்ப்புணர்வு கொண்டவர். ஆகவே இளையராஜவை எதிர்ப்பதற்கும் அந்த தலித் எதிர்ப்பு தான் காரணம் என்கிற தர்க்கம் வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் பிராமணீய ஆன்மீகத்தைக் கடைபிடிக்கும் இளையராஜா புலால் மறுப்பவரில்லையா? அப்படியானால் அதை நவபிராமணீயம் எனக் குறிப்பிடலாமா? நீங்களும் அவரை தலித் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளிவராத காரணத்தாலேயே தேவர்மகன் படத்துக்கு இசையமைத்து, பாடலும் பாடினார் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது? அவரே தான் அதிலிருந்து வெளிவந்துவிட்டதாக காட்டிக்கொள்கிறார். நீங்கள் அவரை இன்னும் அங்கேயே அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? நீங்கள் சொல்வதை விட நான் இளையராஜா வெளிப்படுத்துவதையே ஏற்றுக்கொள்கிறேன். I am beyond all such garbage என்பதை பழைய அடையாளத்திலிருந்து வெளியே வந்துவிட்டார் என்பதாகவும், ஸ்ரீரங்கம், காஞ்சி மடம், ரமண மடம் போன்றவற்றில் தஞ்சம் புகுந்து புதிய அடையாளங்களை வரித்துக்கொண்டதால் நவபிராமணராக மாறியிருக்கிறார் என்கிறேன். தேவர்காலடி மண்ணைப் போற்றிப் பாடச் சொல்லக் கூசாததற்குக் கூட பிரக்ஞைப் பூர்வமான வர்ணாசிரம மனநிலை காரணமாக இருக்கத்தேவையில்லை என்றாலும், நவபிராமணீயத்தை வரித்துக்கொண்டவரின் “ஜாதி வித்தியாசம் பார்க்காத சமரச” மனநிலைதானே தவிர, அடிமை மனநிலையல்ல. ஆனால் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது உண்மையென்றால் அதற்கு பிரக்ஞைப்பூர்வமான பிராமணீய “ஆன்மீக” மனநிலையே காரணமாக இருக்குமே தவிர இசை “ஞான” மனத்தின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்பில்லை. இப்போது என்னவென்றால் ராஜாவின் “ஆன்மீக” ரசிகர்கள் ‘அவர் இசைக்கலைஞராக்கும். அவரிடம் இசையை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இசையமைப்பதும் அமைக்காததும் அவருடைய உரிமை. அவரிடம் அரசியல் எதிர்பார்க்கக்கூடாது’ என்றெல்லாம் வியாக்கியானம் வழங்குகிறார்கள். அவரிடம் இசையை எதிர்பார்த்து தான் இசையமைக்கச் சொல்லிக் கேட்டிருப்பார்கள். பெரியார் ஆதரவாளர்களும் அந்த இசை கிடைக்காததிலேயே ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். பெரிய இசை ரசிகனல்லாத என்னைப் பொறுத்தவரை இளையராவின் முடிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இளையராஜாவின் “ஆன்மீக”த் தேடலையும், அந்தத் தேடலை நேரடியாகவோ, மறைமுகமாக இயக்கும் பிராமணீய அரசியலையும் புரிந்துகொள்ள இன்னொரு வாய்ப்பு. கிட்டத்தட்ட நூறாண்டு கால பெரியாரின் வாழ்க்கையை, மூன்று மணிநேரக் சினிமாச் சிமிழில் அடைத்து, அதற்கு சினிமாத்தனமான இசையை புனுகாகப் பூசுவதுமே வேடிக்கையாகத் தானிருக்கிறது. இதில் அந்த புனுகு இளையராஜாவிடமிருந்து என்கிற பிராமணீய பிராண்ட் ஆன்மீகவாதியிடமிருந்து கிடைக்கவில்லை என்பதற்காக எப்படி கோபப்பட முடியும்?
***************************

//ஒரு வருடம் முன்பு ரவியை நான் திட்டிகொண்டிருந்த காலத்தில் உங்களை போன்றவர்கள், அதை தேவையற்ற தனிப்பட்ட தாக்குதலாக பார்த்து வந்தீர்கள். இப்போது ரவியை பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். (உண்மையிலேயே உணர்ந்திருக்கிறீர்களா என்று சந்தேகமும் அடிக்கடி வருகிறது.)//

ரவி ஸ்ரீநிவாசை நீங்கள் திட்டிக்கொண்டிருந்தது ‘யார் பெரிய அறிவாளி’ என்று உங்களிருவருக்கும் நடக்கும் ஈகோ சண்டை என்று நீங்களே பலமுறை விளக்கமளித்திருக்கிறீர்கள். குஷ்பு விவகாரத்தில் அவர் மீது உங்கள் தாக்குதல் மூர்க்கத்தனமாக வெளிப்பட்டபோது அதைச் சுட்டிக்காட்டினேன். இடஒதுக்கீடு விவகாரம் தலையெடுத்தபோது OBCக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ரவி மூர்க்கத்தனமாக எதிர்த்தபோது அதற்குக் காரணம் அவரிடம் எஞ்சியிருக்கும் ஜாதி அபிமானம் என்று நான் குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என்று நீங்களும் தான் அவருக்கு சர்டிபிகேட் கொடுத்தீர்கள். கடைசியாக அவர் “இது எங்கள் மீது தொடுக்கப்படும் போர். எப்படிப் போராடுவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று பிரகடனம் செய்த பிறகே உங்களுக்கும் அவரின் ஜாதி அபிமானம் புரிந்தது. ஆக அவர் எல்லோரையுமே தான் குழப்பியிருக்கிறார். இன்னும் குழப்பிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்திய அப்சலின் மரண தண்டனை விவகாரத்திலும். ‘அரிதினும் அரிதான’ வழக்குகளில் (தேசவிரோத நடவடிக்கை போன்றவை) மரணதண்டனை கொடுப்பது சரியே, அப்சல் மரண தண்டனைக்கு உரியவரே என்று கறாராக எழுதிவிட்டு இன்னொரு இடத்தில் “அப்சலுக்கு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடிப் பங்கு இல்லை. சந்தர்ப்பசூழ்நிலை சார்ந்த சான்று மட்டுமே இருக்கிறது” என்றும் கூறுகிறார். மரணதண்டனைக்கு எதிரா ன எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரையை எடுத்து எந்தகுறிப்பும் இல்லாமல் பதிவு போடுகிறார். இப்போது மரணதண்டனையை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறாரா? வெறும் சந்தர்ப்பநிலைச் சான்றை மட்டும் வைத்து மரணதண்டனை அளிக்கப்பட்ட வழக்கை ‘அரிதினும் அரிதான’ வழக்காகப் பார்க்கிறாரா என்று எதுவும் சொல்லவில்லை. என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு குழப்பவாதியாக இருக்கிறார். அவருடன் ஈகோச்சண்டை போட எனக்கு தேவையில்லாதாதால் அவரைக் குறிவைத்து விமர்சிப்பதோ, தாக்குவதோ இல்லை. அவர் எழுதுவதைப் படிக்கக் காரணம் நீங்களே குறிப்பிட்டது போல துரதிர்ஷ்டவசமாக வலைப்பதிவில் எழுதுபவர்களில் கண்டதைப் படிப்பவராக அவர் மட்டுமே இருக்கிறார் என்பதும் முக்கிய காரணம். அவர் தரும் தகவல்களுக்காகவாவது படிக்கவேண்டியிருக்கிறது (எஸ். வி. ஆரின். கட்டுரையை அவர் எடுத்துப்போடவில்லையென்றால் நானோ, நீங்களோ படித்திருக்க மாட்டோம்). அவருக்கு பதிலாக ஒரு மாற்று கிடைக்கும் விஷயங்களில் அப்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதில்லை. உ-ம். சட்ட நுணுக்கங்களை விளக்கி எழுத பிரபு ராஜதுரை வந்த பிறகு ரவி ஸ்ரீநிவாஸின் ‘சுப்ரீம் கோர்ட் அப்படிச் சொன்னது. இப்படி எழுதியது’ போன்ற வியாக்கியானங்களை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. உ.பி.யில் போலியோ ஒழிப்பில் முஸ்லீம்கள் ஒத்துழைக்காததைப் பற்றி ஒரு குறிப்பைப் போட்டு உளறியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
******************

பொறுமைக்கு நன்றி. முடிந்தவரை என் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இவ்விஷயங்களில் தொடர்ந்து பேசவோ, வேறு விவாதங்களில் தீவிரமாக பங்கெடுக்கவோ தற்போது இயலாத சூழ்நிலை.

11/16/2006 8:17 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள சுமு, நேரம் செலவழித்து எழுதிய நீண்ட பதிலுக்கு நன்றி. தெளிவுக்கா சிலவற்றை எழுத வேண்டியுள்ளது. முடிந்த வரை இன்றே அதை செய்ய முயல்கிறேன்.

11/16/2006 8:32 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு,

முதலில் "முன்வைத்த கால்..." விளக்கத்திற்கு நன்றி.


// நவபிராமணீயம் என்பதை இரு பொருட்களில் பயன்படுத்திப் படித்திருக்கிறேன். ..... இரண்டாவது பிராமணல்லாத சமூகத்தில் பிறந்தவர்கள் தமக்கிருக்கும் தாழ்வுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள தங்களை மறுத்து பிராமணியக் கலாச்சார விழுமியங்களை வலிய சுமந்துகொண்டு புதுப் பிராமணராகும் முயற்சி. நான் இந்த இரண்டாவது பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறேன். //

இரண்டாவது பொருளுக்கு நவபிராமணியம் என்ற வார்த்தை பொருத்தமானது அல்ல என்பது என் கருத்து. இந்த வார்த்தை குழப்பத்தில் (அதை இடையில் உணர்ந்தாலும்) நேரமும், மேலும் வார்த்தைகளும் விரயமானது உண்மை.


'இசைஞானி' என்ற பட்டம் குறித்த உங்களின் வாசிப்பு புரிகிரது, ஆனால் ஏற்புடையதாக இல்லை. ஆன்மீகம் சார்ந்தல்ல, இசை சார்ந்தே, ராஜாவின் இசைபுலமையை குறிக்கவே (ராகதேவன் என்பதுபோல்) அந்த பட்டம் (அடைமொழி வழங்குவது ஒரு கலாச்சார பண்பாக இருக்கும் தமிழகத்தில்) வந்தததாகவே கருதுகிறேன். விளக்கமாய் எழுத இப்போது விருப்பமில்லை. கருத்தை பதிவு செய்வது மட்டுமே.


// அது கலைஞர் பக்தர்களுக்கு எரிச்சலூட்டுவதைப் போல நான் ஞானியை மேற்கோளுக்குள் போட்டது உங்களுக்கு எரிச்சலூட்டினால் நான் செய்வதற்கு எதுவுமில்லை.//

நான் கருணாநிதியையும் பொதுவாக (வாக்கியத்தில் உள்ள சந்தர்ப்பத்தை பொறுத்து) கலைஞர் என்றே அழைப்பதுண்டு. அண்ணாவின் 'அறிஞர்' பட்டத்துக்கு சார்பாக சிவக்குமாருடன் பேசிய நீங்கள் (அந்த விஷயத்தில் உங்கள் நிலைபாட்டுக்கே என் ஆதரவு) இப்போது எதிர்நிலையில் பேசுவது ஆச்சரியமாய், முரணாய் தெரிகிறது.

//இசையிலும் தலித்திய/நாட்டுப்புற இசையையும், சாஸ்திரீய இசை இரண்டையும் தானே பயன்படுத்துகிறார் என வாதிடலாம். எனக்குத் தெரிந்தவரை இரண்டையும் சேர்த்தோ, மாற்றி மாற்றியோ பயன்படுத்தியிருப்பது திரையிசையில் மட்டும் தான்.//

திரையிசைதான் ராஜாவின் அடையாளம். அதில் சாதித்த அளவு வெளியில் அவர் ஒரு சத்விகிதம் கூட செய்யவில்லை. ஆனாலும் How to Name it, Nothing but wind இரண்டிலும் நாட்டிசை, மற்ற எல்லா இசைகளும் உண்டு. நாட்டிசை மிக நிச்சயமாக உண்டு. அது இல்லாமல் ராஜா இல்லை. நீங்கள் விரும்பிய வண்ணத்தில் அது இருக்குமா என்பதற்கு என்னால் பதில் தர முடியாது, கேட்டுப்பாருங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். முழுக்க ஆன்மீக ரீதியில் அமைத்த ரமண கீதத்தில் வரும்
'எம் ஊரு சிவபுரம்' என்ற அற்புத பாடலை சாஸ்திரிய சங்கீதம் என்று சொல்லமுடியுமா, 'பாமரர்களுக்கானது' இல்லையா என்று கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

// சினிமாவுக்கு வெளியே பாமரர்களுக்கென்று பிரத்தியேகமாக கொடுக்கவில்லை.//

ராஜாவின் சாதனைகள் அனைத்தும் திரையில் இருக்க, சினிமாவில் செய்ததை தவிர்த்து மற்றதை முன்வைத்து பேசவேண்டிய தேவை என்ன இருக்கிறது? அடுத்து எது பாமரர்களுக்கானது என்று எப்படி தீர்மானிப்பது? அதற்கு முன் பாமரர்கள் என்று யாரை சொல்வது? செவ்வியல் இசை பாமரருக்கு உகந்தது அல்ல, தீவிர இலக்கியம் அவர்களுக்கானது அல்ல (இதை பொதுமை படுத்தி அறிவியலும், தத்துவமும், ஓவியமும், சிக்கலான இசையும்) 'பாமரருக்கானது' அல்ல என்று சொல்வதன் உளவியலை மிக நிதானமாய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். (இசையும், கல்வியும் மறுக்கப்படுவது என்பது வேறு விஷயம்). பாமரர் என்பது சாதியை வைத்தா, பொருளாதாரத்தை வைத்தா, (ஏதோ ஒரு வகை) கல்வியை வைத்தா? இந்த எந்த வரையரையை தந்தாலும், அதிலிருந்து வெளியேறி செவ்வியல் இசையை, தீவிர அறிவியல் தத்துவத்தை உள்வாங்கும், சாதிக்கும் உருவாக்கும் பாமரரை காட்டமுடியும் என்பதை ஒப்புகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அப்படி இருக்கும் போது எதற்காக பாமரருக்கானது என்று கற்பித்தவைகளை, பாமரருக்கு என்று உருவாக்கி தரவேண்டும்? ராஜா சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்தை, பாமரர் என்று கற்பிக்கப் பட்டவர்களின் நுகர்வுக்கு சினிமாவில் தருகிறார்; தந்திருக்கிறார். (எல்லா இடத்திலும் இந்த நோக்கதுடனேயெ அவர் செயல்படவேண்டும் என்பதும் வன்முறை இல்லையா?) மேலும் நீங்களும் நானும், செய்யும் ஆராய்சிகள் எந்த வகையில் 'பாமரருக்கானது'? ஒரு வேளை செய்யும் வேலையை ஒரு சமரசம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அப்படி நினைத்து கொள்ளவில்லை. (நாம் அனுபவிக்கும் அதிகாரமும், சலுகைகளும் வேறு).

// அதைவிட முக்கியமாக சாமான்யர்களுக்கு உதவும் எந்த நற்காரியங்களுக்காக பயன்படுத்தியதுமில்லை. //

எனக்கு சரியாக தெரியாது. அப்படியிருந்தாலும் அதை ஒரு சாதாரண சுயநலமாக, எல்லோருடனும் உள்ள (சாக்ய சங்கம் பற்றி நான் எழுதியதற்கு எத்தனை பேர்கள் உதவினார்கள் என்று கூட பார்க்கலாம்) ஒரு விஷயமாக மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இதற்கும் ஆனந்தின் கேள்விக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.


//“I am beyond such garbage,” என்று பதிலளித்து ராஜா தன் நவபிராமணீய மனநிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு குப்பை என்று குறிப்பிடுவது இவர்களின் இசையை அல்ல. தானும் அவர்களைப்போலவே எதிர்ப்பிசை படைக்கவேண்டும், எதிர்ப்பரசியல் பேசவேண்டும் என எதிர்பார்ப்பதை .\\

ஒப்புகொள்கிறேன், அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். எதற்காக ராஜா எதிர்பிசை படைத்தே ஆகவேண்டும் என்று நாம் கட்டாயபடுத்த வேண்டும், அப்படியில்லாத போது அதை நவபிராமணியமாக பார்க்க வேண்டும் என்றெல்லாம் புரியவில்லை.

//இந்த மனோபாவம் இசைக்கு ஆன்மீகப்பூச்சு பூசும் பிராமணீய மனோபாவமே.//

ராஜா இசைக்கு தரும் ஆன்மீகப் பூச்சு பற்றிய முழு பத்தியை -ப்ரேம்ரமேஷ் பேட்டியில் - நாளை தருகிறேன். அதை பிராமணிய மனோபாவமா என்று கேட்டுவிட்டு சொல்லவும். ஆனால் எனக்கு தெரிந்து எல்லா இசைஞர்களிடமும் அதை கேட்கமுடியும் என்றே தோன்றுகிறது. ஒருவேளை அப்படி எல்லோருமே நவபிராமணியர் என்றால்(என்றால்), இசையின்றி இந்த உலகம் வாழமுடியாததை கருதி அதை ஆதரிக்க எனக்கு தயக்கமில்லை.

//இதுபோன்ற – தன் வேர்களை மறுக்கிறார், சமூக அக்கறையில்லாதவராக இருக்கிறார் ரீதியிலான – குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பாக நீங்கள் மீண்டும் மீண்டும் வாதமாக வைப்பது இளையராஜா தன் அண்ணன் பாவலர் வரதராஜனை பெருமையுடனும், மரியாதையுடனும் நினைவு கூர்வதை மட்டுமே.//

"தன் வேர்களை மறுக்கிறார், சமூக அக்கறையில்லாதவராக இருக்கிறார்" என்று சொலவதை, அதற்கான ஆதாரமாக நியாயமாக எதையும் யாரும் சொல்லி கேட்டிராததை முன்வைத்தே கருதுகிறேன். வேர்களை மறுத்ததாக எதை வைத்தும் என்னால் முடிவு செய்ய முடியவில்லை (அவரது வேர் இல்லாமல் எந்த இசையும் அவரிடமிருந்து பிறக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க). ஆனால் எதையும் பாவலரை முன்வைத்து நான் பேசியதே இல்லை. பாவலருடன் 'கம்யூனிச பணியாற்றினாலும்' தனக்கு அந்த அரசியலில் என்றுமே ஆர்வம் இல்லை என்பதை ராஜா நேர்மையாக் சொல்லி வந்திருப்பதை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.


//– அதாவது திரையிசையல்லாத நாட்டுப்புற இசை, பொதுக்காரியங்கள், சமூகசேவைகள் போன்றவை – மூலமாவது அல்லது வேறு எந்த தமிழ்நாட்டு, இந்திய, உலக அளவிலான மக்கள் கலைஞர்களை சிலாகித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் வசந்த் அதையும் சுட்டிக்காட்டலாம்.//

மீண்டும் திரையிசை தவிர்த்து ஏன் பார்க்க வேண்டும் என்று புரியவே இல்லை. திரையிசையில் மக்கள் கலைஞர்களை பாடவைப்பதும், அந்த இசையை (முன் இல்லாத வகையில்) பயன்படுத்துவதற்கும் என்ன நிர்பந்தம் இருக்கிறது? அங்கே பயன்படுத்தியதை தவிர்த்து ஏன் பேசவேண்டும்?

//நமக்கு அறியக்கிடைப்பதெல்லாம் ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டப் பெருங்கொடை அளித்தது, தீவிர ரமண மகரிஷியின் பக்தராக இருப்பது, காஞ்சி மடத்து ஒத்துழைப்போடு இசைக்கல்லூரி ஆரம்பிக்க இருந்தது இசை போன்ற பிராமணீய சடங்காசார, கலாச்சாரச் சேவைகளும், , ரமண மாலை, How to name it, Nothing but Wind, திருவாசகம், போன்ற சாஸ்தீரீய சங்கீதம் அல்லது இந்திய-மேற்கத்திய இசைக்கலவைகளைப் படைத்தது, இந்திய, மேற்கத்திய செவ்விசையின் பிதாமகர்களைப் போற்றுவது மட்டும் தான். இவற்றைச் செய்யக்கூடாது, அதற்காக அவரை அவருடைய ரசிகர்கள் சிலாகிக்கக்கூடாது என்பதில்லை. ஆனால் அதை மற்றவர்கள் சொன்னாலோ, விமர்சித்தாலோ ராஜா வழக்கு போடுவதும், அவருடைய ரசிகர்கள் அதை சாக்கடை, மடமை என்று சாடுவதும் மூர்க்கத்தனமான மேட்டுக்குடி மனோபாவத்தின் வெளிப்பாடு என்பது போலத் தெரிகிறது.//

எந்த இடத்திலும் ராஜா மேற்கத்திய, இந்திய சாஸ்திரிய சங்கீத பிதாமகர்களை போற்றி மற்ற இசைகளை கேவலப்படுத்தியது கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும். அதற்கு எதிராகவே பலமுறை பேசியிருக்கிறார். 'திரையிசைக்கு ஏன் மாற்று இசையை ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டிருந்ததை மறைத்து முற்றிலும் திரித்து சாரு எழுதியதை கவனிக்க வேண்டும்.


மற்றபடி ஸ்ரீரங்க, ரமணரை முன்வைத்து பேசுலாம். பேசுவது அவரவர் நிலைபாடு சர்ந்தது. அப்படி பேசும்போது ராஜாவின் ரசிகர்கள் வெளிப்படுத்தும் மனநிலை பற்றி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

//ஞாநி பலியிடுவதை எதிர்த்தார் அதனால் தலித் எதிர்ப்புணர்வு கொண்டவர். ஆகவே இளையராஜவை எதிர்ப்பதற்கும் அந்த தலித் எதிர்ப்பு தான் காரணம் என்கிற தர்க்கம் வேடிக்கையாக உள்ளது.\\

அப்படி எதுவுமே சொல்லவில்லை. ஞாநியின் தலித் வெறுப்புக்கு இன்னொரு உதாரணமாக அதை தந்தேன். ஞாநியின் ராஜா பற்றிய கட்டுரை, அதன் அளவிலேயே தலித் வெறுப்பை கொண்டது என்பதுதான் நான் சொல்வது. ஒரு தலித் தான் விரும்பிய சட்டகத்தில் இல்லாததன் அதீதமான வெறுப்பு அதில் வெளிபடுகிறது. பல இடங்களில் ஞாநியின் உள்ளுறையும் ஆதிக்க திமிராக அது வெளிவருகிறது. மீண்டும் ஞாநியின் கட்டுரை பார்பனியம் பற்றி பேசவில்லை, கழுவில் ஏற்றப்பட்ட சமணர்களையும், சைவர்களை பற்றி கூட பேசும் ஞாபகம் அவருக்கு வரவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

மற்றவை குறித்து எழுத களைப்பாக இருக்கிறது. அதே நேரம் அதில் எதிர்ப்பும் இல்லை; மாற்று பார்வை மட்டுமே உண்டு.

//ரவி ஸ்ரீநிவாசை நீங்கள் திட்டிக்கொண்டிருந்தது ‘யார் பெரிய அறிவாளி’ என்று உங்களிருவருக்கும் நடக்கும் ஈகோ சண்டை என்று நீங்களே பலமுறை விளக்கமளித்திருக்கிறீர்கள். \\

எப்போது அப்படி சொன்னேன்? போடும் எல்லா சண்டைகளிலும் ஈகோ இருப்பது போல், இதிலும் இருப்பதை பற்றி சுயவிமர்சனம் செய்திருக்கலாம். அதற்காக யார் அறிவாளி என்றா சண்டை நடந்தது? முழுக்க கருத்து தளத்திலேயே அவரை தாக்கியிருந்தேன். இன்று நேற்றல்ல வருடக்கணக்காய் முழுக்க அவரது கருத்தை, நிலைபாட்டை முன்வைத்து தாக்கி வருகிறேன். (தங்கமணி, சங்கரபாண்டி சொன்னது போல அல்லாமல்) இது ஒரே கருத்துருவத்தினுள் இருக்கும் கருத்து வேறுபாடு அல்ல, ரவியின் கருத்துருவத்திற்கு நேரெதிராக தளத்தில் நான் இருப்பதாக பலமுறை, அவர் இப்படி தீவிர வெறியராக மாறுவதற்கு முன்னமே சொல்லிவிட்டேன். ஜெயமோகனுக்கும் ரவிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பலமுறை சொல்லி வருகிறேன். இதெல்லாம் ‘யார் பெரிய அறிவாளி’ என்று எப்போது விளக்கமளித்தேன்? (ரவி அனாவசியமாக என்னை முட்டாள் என்பதாக சீண்டியபோது, அவரது தகுதிகள் என்னவென்று பின்னூட்ட சண்டையில் கேட்டதும், (எனக்கு தகுதியுள்ள) திமிர்தனத்துடன் பேசியதும் வேறு விஷயம்.)

//குஷ்பு விவகாரத்தில் அவர் மீது உங்கள் தாக்குதல் மூர்க்கத்தனமாக வெளிப்பட்டபோது அதைச் சுட்டிக்காட்டினேன்.\

குஷ்பு விவகாரத்தில் ரவி சொன்னதை அக்கு அக்காக பிரித்து போட்டு, அவர் குஷ்பு மீதான தாக்குதலை அவர் நியாயப்படுத்துவதை நிறுவியதை நீங்கள்தான் எதிர்கொண்டு எதுவுமே சொல்லவில்லை. அரசியல் சார்பு காரணங்களுக்காக ரவிக்கு சார்பாக பேசினீர்கள். என்னிடம் என்ன மூர்க்கம் வெளிப்பட்டது என்று நீங்கள் சுட்டவில்லை.

// இடஒதுக்கீடு விவகாரம் தலையெடுத்தபோது OBCக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ரவி மூர்க்கத்தனமாக எதிர்த்தபோது அதற்குக் காரணம் அவரிடம் எஞ்சியிருக்கும் ஜாதி அபிமானம் என்று நான் குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என்று நீங்களும் தான் அவருக்கு சர்டிபிகேட் கொடுத்தீர்கள்.//

நீங்களும் நானும் பேசி, ரவியின் ஜாதி அபிமானம் பற்றி குறிப்பிட்டு அதை மறுத்து அவருக்கு நான் எப்போது சர்டிஃபிகேட் கொடுத்தேன் என்று எனக்கு சுத்தமாக நினைவில்லை. அப்படியிருக்காது என்றே நினைக்கிறேன். முடிந்தால் எப்போதாவது எடுத்து காட்டவும்.

வஜ்ரா சங்கருக்கு (பாப்பார புத்தி என்று) எழுதியபோது, ரவி எழுதுவதை அப்படி சொல்லவில்லை என்று முன்பு குறிப்பிட்டேன்.
http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post.html
இப்போதும் கூட ரவியை சாதி சார்ந்து சிந்திக்க துவங்கியவாராக பார்க்கவில்லை. இது அவர் உள்ளே இருக்கும் மூர்க்கம், ஒரு வகை ஆதிக்க திமிர் (மற்றும் சில முட்டாள்தனம்). அந்த திமிரும், மூர்க்கமும் சாதிய சார்புடையதாக (தான் வெளிமனதில் அறியாமல்) இருக்கலாம். காலப்போக்கில் அது (சில இடங்களில் ஈகோ தட்டப்படும்போது, தனது பரந்த மனப்பான்மை அங்கீகரிக்கப் படவில்லை என்ற நினைப்பு வரும்போது) வெளிப்படையான ஜாதி சார்ந்து வெளிவருவதாக நினைக்கிறேன். அதையே பின்னர் " ஒரு கடைந்தெடுத்த ஜாதி வெறியனாக அவர் பரிணமித்து வருகிறார்" என்று குறிப்பிட்டேன்.
http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_23.html
இப்போதும் சாதி சார்ந்த ஒரு உணர்வில் துவங்கபெற்று அவர் இப்படியானதாய் நான் கருதவில்லை. அவருடைய எழுத்தின் பண்பாக நான் கருதிய ஒன்றுதான் இன்றும் தொடர்வதாக நினைக்கிறேன். ஆகையால் ரவி பற்றி நான் புதிதாக எந்த கருத்தும் கொள்ளவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் (மற்றும் தங்கமணி போன்றவர்கள்) இன்னும் அவரிடம் பொதிவாக ஏதேனும் வெளிப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக (சில பின்னூட்டங்களை பார்கும் போது) தெரிகிறது. அதுதான் இன்னும் எனக்கு ஆச்சரியம்.

ஞாநியிடமும் இதே பண்பை பார்ப்பதாலேயே அவரையும் குறிப்பிட்டேன். உங்களுக்கு நான் சொல்வதை பரிசீலிக்க தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞாநி ஜெயாடீவியில் தொடர்ந்து தரும் பேட்டிகளை பார்த்தால் என் சந்தேகங்கள்தான் வலு பெறுகிறது. அது பொய்த்தால், பல காரணக்களுக்காக, நிச்சயாமாக மகிழ்ச்சி மட்டுமே கொள்வேன்.

// ஆக அவர் எல்லோரையுமே தான் குழப்பியிருக்கிறார். இன்னும் குழப்பிக்கொண்டிருக்கிறார்.//

என்னது குழப்பம் மட்டுமா?

மிக அவசரமாக கிளம்புவதற்கு முன் அடித்து உள்ளிடுகிறேன். இதை மேலே இழுக்க எனக்கும் ஆர்வம் இல்லை -இன்றியமையாததாக பட்டால் ஒழிய. உங்கள் மற்றும் அனைவரின் பொறுமைக்கும் நன்றி.

11/16/2006 10:12 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

அவசரமாக இரண்டே விஷயங்கள் மட்டும்:

1. "திட்டிக்கொண்டிருந்தது ‘யார் பெரிய அறிவாளி’ என்று உங்களிருவருக்கும் நடக்கும் ஈகோ சண்டை என்று நீங்களே பலமுறை விளக்கமளித்திருக்கிறீர்கள்".

நான் எழுதியிருந்த இந்த வாசகத்தில் ஈகோச் சண்டை என்று நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு 'யார் பெரிய அறிவாளி'என்று மற்றவர்கள் அளித்த விளக்கம். இரண்டையும் சேர்த்து எழுதியிருக்கக்கூடாது. சற்று எச்சரிக்கையாக எழுதியிருக்கவேண்டும். மன்னிக்கவும்.

2. ரவி ஸ்ரீநிவாசின் சாதிச்சார்பு/சார்பின்மை பற்றிய குறிப்புகள் நம்மிருவருக்கும் நடந்த இந்த உரையாடலில்:
http://kumizh.blogspot.com/2006/05/obc.html

11/17/2006 12:22 AM  
Blogger Gurusamy Thangavel said...

ரோசா,
உங்களது இளையராஜா பற்றிய பதிவை, எனக்குக் கருத்துச் சொல்ல (இந்தவிசயத்தில்) இயலாவிடினும், தொடந்து ஆர்வத்துடன் படித்துவருகிறேன். ஒரு சின்ன விடயம், உங்கள் வலைப் பதிவு திரையில் தெரிய மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏதாவது செய்யகூடாதா? அனேகமாக நீங்கள் உங்கள் template- ஐ மாற்றிய பின்பே, அது அழகாக இருக்கிறது எனினும், இவ்வாறு இருப்பதாக நினைக்கிறேன்.

11/17/2006 3:57 PM  
Blogger ROSAVASANTH said...

உங்கள் பதிவில் அப்படி சொல்லியிருந்தது கிளம்பிய பின்பு ஞாபகம் வந்தது. ஏதோ ரவிக்கு ஆதரவாக நான் பேசி, அதை ரவிக்கு நான் அளித்த சர்டிஃபிகேட் என்று நீங்கள் சொன்னது சற்று அதிகம் என்றே நினைக்கிறேன். மேலும் நான் சொன்னதை உங்கள் பதிவில் அடுத்த பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன். கிட்டதட்ட அதையே மீண்டும் மேலே உள்ள என் கடந்த பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். . ரவி ஒரு குறிப்பிட்ட நிலைபாட்டுக்கு வருவதற்கு எந்த விதத்தில் தொடங்கினார் , எப்படி பயணம் மேற்கொண்டார் (ரவி நகர்ந்து வந்ததையெல்லாம் பயணம் என்று சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது) என்பதை பற்றியது நான் சொன்னது. (மேலும் ஒருவர் குறிப்பிட்ட கருத்தை சொன்னவுடன், அதுவரை அவரை பற்றி கொண்டிருந்த பார்வையை உடனடியாய் மாற்றி, அதை சாதியபிமானம் என்று சொல்வதும் எனக்கு ஏற்புடையதல்ல. யாரை பற்றியும் அப்படி ஒரு முடிவுக்கு நான் வருவதில்லை) ஒரே நேரத்தில் சாதி சார்பு என்றும், சாதியபிமானம் அல்ல என்றும்(நேற்று கூட சாதி சார்ந்த obsession என்று முத்துகுமரன் பதிவிலும், பின்பு என் பதிவில் வேறு விதமாய் மேலேயும்) எழுதியிருப்பதை அசிரத்தையான முரண்பாடு என்று எண்ணாமல், யோசித்திருந்தால் நான் சொல்வதை புரிந்து கொண்டிருக்கலாம்.

ரவியின் மீதான என் தாக்குதல் 'யார் பெரிய அறிவாளி' என்ற சண்டை என்று சொன்னதற்கு பதில் அளித்திருக்க வேண்டியதில்லை என்று கிளம்பிய பின்பு தோன்றியது. சுந்தரமூர்த்தியை (அவருடன் பல விதங்களில் முரண்பட்டாலும்) நல்ல நண்பராய், உண்மையான சமூக அக்கறை, ஒடுக்குதலுக்கு எதிரான கோபம் கொண்டவராக, தலித் விடுதலை உட்பட்ட அனைத்திலும் உண்மையான அக்கறை கொண்டவராக மதிக்கிறேன். அதனால் மட்டும் பதிலளிக்கும் தகுதியை அவர் எழுதியதற்கு அளித்தேன். மற்றபடி நான் சில இடங்களில் ரவியுடன் நடப்பதை, 'ஈகோவில் அடித்து கொள்வதாக' நானே சொல்லியிருக்கலாம். நமது செயல்பாடுகளில் ஈகோ கலந்து இருப்பதன் சுயவிம்ரசனம் மட்டுமே அன்றி மொத்த சண்டையை எப்படி அப்படி சுருக்க முடியும். அதை விட அதிகமான முறை, நடப்பது கருத்து ரீதியான மோதல் என்பதை சொல்லியிருக்கிறேன். சுமு மேலே சுட்டியளித்த பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். முக்கியமாக தொடர்ந்து ரவியை எதிர்ப்பதற்கான வாதங்களை வைத்து வருகிறேன். அதற்கு பிறகி சுமு போன்ற ஒருவர், அதை ஈகோ சண்டை என்று சுருக்கி, அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்பதற்கு, மீண்டும் விளக்கம் அளிக்கும் அளவிற்கு முட்டாளானது ஏன் என்று பிறகு யோசித்து கொண்டிருந்தேன். வேறு யாருக்கும் (குறிப்பாக அப்படி எழுதும் மலப்புழுக்களுக்கு) அதை செய்திருக்க மாட்டேன்.

11/17/2006 4:07 PM  
Blogger ஜோ/Joe said...

இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்றும் ,கமலுக்கு 'கலைஞானி' என்றும் நாமகரணம் சூட்டியவர் கலைஞர் என்று தான் நான் அறிந்திருக்கிறேன் .கலைஞர் ஆன்மீகப்பார்வையிலா அப்படி அழைத்தார்?

11/17/2006 4:10 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கவேல், இதற்கு முந்தய டெம்ப்ளேட்டில், இறங்க நேரம் அதிகம் எடுத்தது, இப்போது இலகுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பின்னூட்டங்கள் நீண்டு பக்கம் பெரிதாக இருப்பதால் ஒருவேளை நேரமாகலாம். பிரச்சனை மீண்டும் தெரிவிக்கவும். நன்றி!

ஜோ, உங்கள் தகவலுக்கு நன்றி. கலைஞர் அளித்திருந்தால் அது ஆன்மீகம் சார்ந்தது அல்ல என்பதற்கு சரியான ஆதாரமே.

11/17/2006 5:28 PM  
Blogger ROSAVASANTH said...

ரவி பெரியாரின் கீழ்வெண்மணி குறித்த அறிக்கையை சுட்டி காட்டிய பின்பு அதை படித்து ஏற்பட்ட உடனடி உணர்வுகளை முத்துகுமரனின் பதிவில் எழுதியுள்ளேன். அவர் இன்னும் அந்த பின்னூட்டத்தை வெளியிடவில்லை. அதன் பின் ரவி அதை பதிவாக போட்டுள்ளார். இவைகள் குறித்த என் விரிவான கருத்துக்களை நாளை அல்லது திங்கள் எழுதுகிறேன். இது குறித்து எழுதுவது முக்கியமானது என்று நினைக்கிறேன். இப்போது வேலையிடத்திலிருந்து கிளம்பியாக வேண்டும். தெரிந்த எல்லா சைஃபர் கபேயிலேயும் தமிழில் எழுத படிக்க வசதியில்லை. அதனால் பிறகு.

11/17/2006 7:19 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
ரவி குழப்புகிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக அப்சல் வழக்கு தொடர்பாக அவர் சொன்னதை/சொல்லாமல் விட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் நீங்கள் அதைச் ஒரு obsession ஆகவே நீங்கள் கொண்டிருப்பதாக எனக்குப்படுகிறது. அதற்கான வாய்ப்புகளை இப்போது தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார். முன்பு எப்போதாவது தான் செய்துவந்தார். அப்போது தான் ரமணியும், நானும் ஏன் அவரைத் தாக்குகிறீர்கள் என்று கேட்டிருந்தோம். அதற்கு வெறும் அரசியல் மட்டும் காரணமென்றால் உங்கள் பதிவின் மூலத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ரவியின் மீதான தாக்குதலை மட்டும் ஏன் சுட்டிக்காட்டப்போகிறேன்? கூடவே, அவரோடு இருந்த அறிமுகம், நட்பு கூட ஒரு காரணமாக இருக்கக்கூடாதா?

பெரும்பாலும் அவருடைய வாதங்களுக்கு அடிப்படை அவராக வரையறுத்துக்கொண்டுள்ள பகுத்தறிவு/அறிவியல்பூர்வமான பார்வை என்று இருப்பதாகத் தான் புரிந்துகொண்டிருந்தேன். அவருடைய பகுத்தறிவு பெரியாரின் பகுத்தறிவை பெரும்பாலும் நிராகரிக்கிறது அல்லது காலவதியாகிவிட்டதாக நினைக்கிறது சில ஆண்டுகளுக்கு முன் திண்ணையில் ஞாநி தன் பார்வைகளை "பெரியார் என்ற டார்ச்லைட்" கொண்டு உருவாக்கிக்கொள்வதாக எழுதியதற்கு, "பெரியார் என்ற டார்ச்லைட் தற்காலத்துக்கு உதவாது" என்ற வகையில் எதிர்வாதம் செய்திருந்தது நினைவிருக்கும். இன்றளவிலும், ரமேஷ்-பிரேம் பேட்டியை கிண்டலடித்ததிலும் சரி, முத்துக்குமரனின் பெரியார் பதிவில் அவருடைய கருத்துக்களும் சரி அந்த அடிப்படையில் உருவாவதாகத் தான் நினைக்கிறேன். மற்றபடி பெரியாரை எதிர்க்க, மற்ற இந்துத்துவவாதிகள்/பிராமணீயவாதிகள் போல் வெறும் மத/ஜாதி அபிமானம் காரணமாக இருக்கத் தேவையில்லை. OBC இடஒதுக்கீட்டை மூர்க்கத்தனமாக எதிர்க்க ஆரம்பித்தபிறகே அவரிடம் ஜாதி அபிமானம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்ததோ என்று சந்தேகத்தை எழுப்பியிருந்தேன். பிறகு அதை அவரே அருளின் பதிவில் உறுதிப்படுத்தினார்.

ரமேஷ்-பிரேம், கே.ஏ. குணசேகரன் எழுதிய இளையராஜா நூல்களின் தலைப்புகளைத் தர இயலுமா? அவற்றைத் தருவித்துப் படிக்கவேண்டும்.

ஜோ,
கமலுக்கு கலைஞர் "கலைஞானி" பட்டம் கொடுத்ததைப் பற்றி தெரியாது. பட்டம் கொடுத்தவர், பெற்றவர் இருவரும் பிரபலங்கள். ஏன் அந்தப் பட்டம் பிரபலமாகவில்லை? ரசிகர்களின்/மக்களின் பொதுப்புத்தியில் அவர் "ஞானி"யாகத் தெரியவில்லையோ என்னவோ! இப்போதைக்கு "யூனிவர்சல் ஸ்டார்" தான் பிரபலமாக இருப்பதாகத் தெரிகிறது.

11/18/2006 1:34 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, கவி, உங்கள் பின்னூட்டங்களை இன்னும் படிக்க முடியவில்லை. அவசரம்! நாளை படித்து கருத்து இருந்தால் எழுதுகிறேன்.

வெண்மணி - பெரியார் குறித்து இந்த வாரத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

11/19/2006 8:31 PM  
Blogger Jayaprakash Sampath said...

கவி :"போற்றிப் பாடடி" பாடலை இளையராஜாவி குரலில் கேட்டமாதிரிதான் இருக்கிறது. ஆனால்,படத்தில் எங்கே வருகிறது என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் நினைவுக்கு வரவில்லை.

முதலில் வரும் பாட்டு சுந்தரராஜன், கலைவாணன், மனோ பாடியது. குரல் லேசாக, தருமபுரம் சுவாமிநாதன் சாயலில் இருக்கும்.

http://www.dhool.com/sotd2/600.html

இரண்டாவது, சிவாஜியும், ஸ்ருதியும் பாடியது.

மூன்றாவது, எஸ்.பி.பி பாடியது. ' வானம் தொட்டு போனா' என்று சரணத்தில் துவங்கி, போற்றிப் பாடடி என்று பல்லவியில் முடியும். சிவாஜி இறந்ததும் வரும்.

ஆனால், இளையராஜா குரலில் கேட்டது போலத்தான் இருக்கிறது.

11/20/2006 3:49 AM  
Blogger Koothu said...

Check this out.
http://anathai.blogspot.com/2006/11/blog-post.html

11/20/2006 8:16 AM  
Blogger ROSAVASANTH said...

ஆப்பு என்பவர் ஒரே பின்னூட்டத்தை மூன்றூ முறை இட்டுள்ளார். அவர் வலைப்பதிவிற்கு சென்று வாசித்து யோசனைக்கு பின், அவரது பின்னூட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன். அவரது பின்னூட்டத்தில் இருந்தது ஒரே ஒரு விஷயம் மட்டுமே. ' இட்லி வலடை யார்?' என்று பரபரப்பாக ஒரு பதிவு போட்டிருக்கிறாராம். அவர் பதிவின் முகவரி பலருக்கும்தெரிந்திருக்கும். விரும்பியவர்கள் போய் வாசித்து கொள்ளலாம். அவரது பின்னூட்டம் வெளியிடப்பட மாட்டாது என்றே இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறேன்.

11/20/2006 6:49 PM  
Blogger ROSAVASANTH said...

கவி, உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், அதில் உள்ள பல கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி. பல விஷயங்கள் ஒப்புதலாக இருந்தது; சில உரசி பார்க உதவியது; சிலவற்றில் மாற்று பார்வை எனக்கு உண்டு.

(MN ஸ்ரீனிவாசின் பார்வையிலான) சமஸ்கிருத மயமாக்கலுக்கு ராஜா உட்பட்டவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை மொட்டையாக சாராம்சப்படுத்தப்பட்ட ஒரு வாக்கியத்தில் சொல்லுவதில் பல பிரச்சனைகள் இருப்பதாக கருதுகிறேந். ஞாநி ராஜா சமஸ்கிருதமயமாக்கலுக்கு உத்பட்டதை முன்வைத்து அவரை ஒரு அய்யராக திண்ணையில் சொல்லி, அதற்கு (இன்று காணாத வலைப்பதிவாளர்) விசிதா எழுதிய பதிலை முக்கியமாக நினைத்திருந்தேன். (விசிதா மீது இந்த பதிலால் ஒரு மரியாதை வந்திருந்தது. ஆனால் அதற்கு பிறாகான் அவரது பல தடாலடி மட்டையடிகள், மற்றும் சில நேரடியான முட்டாள்தனமான கருத்துக்களை படித்து அது மாறியது.) 'சமஸ்கிருத மயமாக்கல்' என்று ஒன்றை வரையறுத்து அதன் தெளிவில், ராஜாவை பார்பதில் பல சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் எனக்கு இருக்கிறது. இப்போது அதை பற்றி பேச விருப்பமில்லை.

'போற்றி பாடடி பொன்னே; பாடலை சுந்தர்ராஜனும், மனோவும் பாடியதாகத்தான் நினைக்கிறேன். இகாரஸ் அளித்த தூள்.காம்
பக்கமும் அதையே உறுதி செய்கிறது. அதைவிட முக்கியமாக படலை கேட்டவுடன், அது இளயராஜா இல்லை என்று தெரிந்து விடுகிறது. பிரகாஷை போலவே எனக்கு ராஜா குரலில் கேட்ட ஒரு நினைவு (ஒரு வேளை படத்தில்) இருக்கிறது. தவறாகவும் இருக்கலாம். இந்த விஷயத்தில் தவறு செய்த்ததற்கு இங்கே அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், இந்த விஷயங்களில் நம்பிக்கை அதிகம் என்றாலும், எழுதும் முன் தகவலை உறுதி செய்ய கூகிளில் தேடி விக்கிபீடியாவில் தகவலை உறுதி செய்துவிட்டே எழுதினேன்.
http://en.wikipedia.org/wiki/Thevar_Magan
விக்கிபீடியா தவறு செய்யும் என்று சந்தேகம் வரவில்லை; பாடலை கேட்டிருக்க வேண்டும்.


சுமு பின்னூட்டத்திற்கு நன்றி.

பிரகாஷ், கூத்து நன்றி. ஆனாதையின் பதிவை படித்தேன். ஒரு முறை பெரியாருக்கு இங்கே எஃபக்ட் எதுவும் இல்லை என்று அவர் சொல்லி, அதன் காரணமாக எனக்கு அவருக்கு சண்டை வந்தது. இப்போது 'ஏன் இந்த ஈவெராவின் காலத்திற்கு முன்னால் பிறந்திருந்தால் உனக்கும் அதை விட கேவலமான நிலைமை தானே இருந்திருக்கும்?' என்று சொல்வது கேட்க பிடித்திருந்தது, மற்ற படி அவர் பதிவு குறித்து என்ன கருத்து இருக்கும் என்பது மேலே உள்ள எனது பல பின்னூட்டங்கள் பிரதி பலிக்கும். நன்றி.

பின்னூட்டங்கள் நூறு ஆகிவிட்டது. இத்தோடு இங்கே நிறுத்தி கொள்ளலாம் என்று எனக்கு தோன்றுகிரது. இந்த வாரத்தில் நிச்சயமாய் பெரியார்-வெண்மணி பற்றி எழுதும் நோக்கம் உள்ளது.

11/20/2006 9:33 PM  
Blogger தமிழ் அகராதி said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

12/11/2006 10:38 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter