ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, December 06, 2006

விடைபெறும் முன் நண்பர்களுக்கு..!

இந்த பதிவை எழுதுவதன் தேவை குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பி, இந்த பதிவின் இறுதியில் பேசப்போகும் விஷயம் காரணமாக இதை எழுதுவது என்ற முடிவுக்கு வந்து, என் பதிவுகளை சீரியசாக எடுத்து படித்து வந்த நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன். இதற்கு முன்பு பலமுறை குறுகிய காலத்திற்கு தமிழ் வலையுலகத்திலிருந்து (படிப்பதிலும், எழுதுவதிலும், பின்னூட்டமிடல் உட்பட்ட எதிர்வினையாற்றுவதிலிருந்து) சில காலத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதை முழுவதும் செயல்படுத்த முடியாமலே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருப்பது மட்டுமில்லாமல், அதை செயல்படுத்தும் முதிர்ச்சியும், சந்தர்ப்ப சூழலும் வந்துவிட்டதாக நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே நாள்தோறும் தமிழ்மண பதிவுகளை படிப்பது என்ற நிலையிலிருந்து விலகி, சில நாட்களுக்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக கடந்த நாட்களின் பதிவுகளை (தேர்ந்தெடுத்து) படிப்பது என்ற நிலையிலேயே இருக்கிறேன். அதனால் இந்த முறை இந்த விரதத்தை செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு - முதலில் நான்கு மாதங்களுக்கு, தேவைப்பட்டால் அதிக மாதங்களுக்கு - வலைப்பதிவிலிருந்து முழுமையாய் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். புதிதாக அழுத்தும் கூடுதல் வேலைப்பளு, வேறு சில வேலைகள் மட்டுமின்றி, வலைப்பதிவில் ஏற்பட்டுவிட்ட அலுப்பு, இயங்குவதில் உணரும் அபத்தம் மட்டுமின்றி, வேறு தளங்களில் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்குவதற்காக முயலவும் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதை இங்கே அறிவிக்க வேண்டியது அத்தனை முக்கியமானது அல்லதான். இரண்டு காரணங்களுங்காக மட்டும் ஒரு பதிவின் மூலம் அறிவிக்க வேண்டியுள்ளது.



வரும் மாதங்களில் சாக்ய சங்கத்தின் விடுதியில் உள்ள குழந்தைகளுடன், அவர்கள் கல்வி சார்ந்த சில பணிகளை ஆற்ற முடிவு செய்துள்ளேன். இது குறித்து நான் எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த 'ஆதரவு' மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்றாலும், சொந்தமாகி விட்ட கடையை திறந்து வைப்பதில் நஷ்டம் எதுவும் ஏற்படபோவதில்லை என்கிற வகையில், ஊதுவதை ஊதி வைப்போம் என்ற அளவிலேயே எழுதி வருகிறேன். இது குறித்து உதவி செய்யும் நோக்கத்துடன் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் rosavasanth at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதலாம். பண உதவி மிக முக்கியமானது எனினும், சென்னையில் உள்ள நண்பர்கள் -சிறார்களுக்கு பாடம் சொல்லி தருவது போன்ற - நேரடி பணிகளில் ஈடுபட விரும்பினாலும் என்னை அணுகலாம்.




சாக்ய சங்கம் குறித்த பதிவுகள்

1. Sakya Sanga

2. சாக்ய சங்கம் -2.

3. சாக்ய சங்கம் -3.

4. சாக்ய சங்கம் -4.

இரண்டாவதாக என்னை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் உறுததிக் கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் பெரியாரின் 'கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்த அறிக்கை' (1 + 2 இதை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ரவி ஸ்ரீனிவாசிற்கு நன்றி) . இது குறித்து எழுத நினைத்த நீண்ட பதிவை எழுத இயலாமல் செல்லும் காரணத்தாலே இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்னமும் பெரியாரின் அறிக்கையை படித்து வந்த அதிர்ச்சியை விழுங்க இயலாமல் இருப்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதுவரை நான் வாசித்துள்ள பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள், சொற்பொழிவுகளுக்கு மாறாக, மிகவும் பிரச்சனைக்கு உரியதாக இந்த அறிக்கை எனக்கு தென்படுகிறது. இந்த அறிக்கையை பெரியார் வெளியிட்டதன் பிண்ணணி, அவருக்கு கிடைத்த தகவல்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை. (இந்த அறிக்கையே இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. இதுவரை வெண்மணி குறித்து பெரியார் அறிக்கை எதுவும் விடவில்லை என்றே நினைத்திருந்தேன்.) இந்த அறிக்கையை மட்டும் ஒரு தனிப்பிரதியாக பார்கும் போது, மிக மோசமான அரசு ஆதரவு நிலைப்பாட்டுடன், எதையும் நியாயப்படுத்த வலிந்து செய்யும் கபடமான தர்க்கத்துடன் எழுதப்பட்டதாகவே எனக்கு தெரிகிறது. பெரியார் குறித்த முந்தய வாசிப்புகள் இல்லாதிருந்தால், பெரியார் இதுவரை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் மீதிருக்கும் மரியாதை இல்லாதிருந்தால், 'அயோக்கியத்தனம்' என்ற பெரியாரிய சொல்லாடலில்தான் இந்த அறிக்கையை அழைக்க வேண்டும். முத்துகுமரனின் பதிவின் பின்னூட்ட விவாதத்தில், பெரியார் மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையில், ரவி ஸ்ரீனிவாஸ் மீது வழக்கமான தாக்குதலை தொடுத்திருந்தேன். இப்போதும் ரவி மீதான (அவரது நோக்கங்கள், புரிதல்கள் மற்றும் அவரது அறிவின்/புரிந்து கொள்ளும் திறனின்/அரசியல் முதிர்ச்சியின் எல்லைகள் மீதான) கருத்துக்களில் மாற்றமில்லை; ஆனால் பெரியார்தான் காலைவாரிவிட்டிருக்கிறார்.



சமீபத்தில் நட்பு ஏற்பட்ட நண்பர் (மிதக்கும் வெளி) சுகுணா திவாகருடன் அரைமணி நேரத்திற்கு மேலாக இது குறித்து இருவரும் தொலைபேசினோம். இருவருக்கும் இது விழுங்க இயலாததாய், ஒத்த கருத்துடனான விமர்சனத்துடன் இருப்பதாக தோன்றியது. அவர் விரிவாய் தன் கருத்தை எழுதி வருவதாக (வலைப்பதிவில் அல்ல)சொன்னார். அவர் அதை வலைப்பதிவிலும் எழுத வேண்டும் என்பது என் வேண்டுக நமது விமர்சனங்களை 'எதிரிகள்' பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அஞ்சாமல், அதே நேரம் அவ்வாறு பயன்ப்படுத்திக் கொள்ளப்படும் சாத்தியங்கள் பற்றிய தெளிவுடன், அதையும் குறிப்பிட்டு அது குறித்த ஜாக்கிரதை உணர்வுடன் எல்லாவற்றை பற்றியும் விம்ர்சனமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறாக பெரியாரின் வெண்மணி அறிக்கை பற்றி (என் குழப்பங்களுடன், இது போன்ற வரலாற்று தவறுகள் நிகழ்வது பற்றிய என் புரிதல், பெரியாருக்கான சில பிரச்சனைகள், இதை முன்வைத்து பொதுவாகவே எந்த அரசியல் இயக்க சொல்லாடல்களிலும் வெளிபட வாய்ப்புள்ள வன்முறை இவைகளை முன்வைத்து) நான் எழுத உத்தேசித்திருந்த பதிவு மிக நீளமாக செல்லும் என்று தோன்றுகிறது. இப்போது முடிவு எடுத்துவிட்ட நிலையில் அதை இங்கே இந்த தருணத்தில் எழுத முடியாது என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் பெரியாரின் அறிக்கை மிக மோசமானது, மிகவும் பிரச்சனைக்குரியது (அதை சிலர் நேர்மறையாக பார்த்துக் அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்) என்ற கருத்தை பதிவு செய்ய இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது.

இது தவிர எழுத துவங்கிய, எழுத நினைத்த பதிவுகளை எழுதப் போவதில்லை. இதுவரை என் பதிவுகளை வாசித்த, பின்னூட்டமிட்ட, விமர்சித்த பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

Post a Comment

---------------------------------------
Site Meter