ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, December 21, 2009

மழை பெய்யாத பகற்சாலை.

சாலையில் நடப்பது மறந்து போயிருந்தது.

(ரியர் வ்யூ கண்ணாடியை தேடினேன்.) 

மழை பெய்யாத பகல் மலர்ந்திருந்தது.

தப்பித்த இசை கீற்றொன்று என்னுள் உன் இருப்பை நினைவுபடுத்தி தூண்ட,

இக்கணம் தவிர வேறு சொத்து என்னிடம் இல்லை என்று உணர்ந்தேன். 

ப்ரேக்கின் அலறல், ஆக்சிலேட்டர் உறுமல்,

புகை கலந்த இரைச்சல்களின் ஊசி குத்தல், 

நம் இருப்பையும், அடுத்தடுத்த கணங்களையும் அழிக்க,

மறந்தது போல் நின்றுவிட்டேன்.

சூரியன் குப்பை தொட்டியில் உணவு தேடிக்கொண்டிருந்தது.

பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் நின்றிருக்கிறேன்.

உணர்ந்து திகைத்து உணரும்போது

பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில்தான் எல்லோரும் நிற்கிறோம்

எதிர்புறம் ஜோடியொன்று ஆழ்முத்தத்தில் திளைத்து,

பிரபஞ்ச மொன்று உயிர்ப்பதை தரிசிப்பதாக 

கற்பனை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

வழி மறந்து போய்விட விரும்பினேன்.

மறக்க விரும்பாத எல்லாவற்றையும் மறக்க விரும்பினேன்.


Post a Comment

3 Comments:

Blogger SnackDragon said...

சோகரசம் !

12/21/2009 3:12 AM  
Blogger Prakash said...

பிரபஞ்சத்துக்கு முன்னாடி வரைக்கும் புரிந்தது. அடுத்த கவிதை முழுமையாக பிடிபடக்கூடும்

12/21/2009 7:12 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், பிரகாஷ், வாசித்ததற்கு நன்றி.

12/21/2009 10:50 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter