ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 16, 2010

இந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.

சில நேரங்களில் நாம் காமெடியாக புரிந்து கொண்ட சில விஷயங்களுக்கு பின்னே ஆழ்ந்த தீவிரமான பொருள் இருக்கக்கூடும். அதே போல நாம் தமாசை எதிர்பார்த்து வாசிக்கும் பிரதி மிக தீவிரமான திருப்பங்களுடன், பற்பல பரிமாணங்களில் சமூகப் பாடம் நடத்தும் அளவிற்கு சிக்கலான இலக்கிய பிரதியாகிவிட கூடிய சாத்தியங்கள் உண்டு. பிரதியை வாசிக்காமல், பிரதி வெளியாகும் முன்பே அது குறித்து தீர்ப்பு கூறும் விமர்சகர் 'மண் ஒட்டவில்லை' என்று தனக்கு தானே சொல்லிக் கொள்வதற்காகவாவது பல அசட்டு சமாதானங்களை பின்னர் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு இதனால் ஆளாகிறார். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நான், விமர்சகனின் கணிப்புகளை பொய்யாக்குவதுதான் ஒரு இலக்கிய பிரதியின் வேலை என்ற ஒரு வசதியான இலக்கணத்தை கொண்டு பிரதியை எதிர்கொள்ள துணிந்துவிட்டேன்.

இன்று லீனா மணிமேகலையின் கவிதை எழுதும் உரிமை மேலான தாக்குதல்களை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டம், தமாசாக இருக்கும் என்று நினைத்தற்கு மாறாக தீவிர வடிவத்தை அடைய, இந்து மக்கள் கட்சியினர் கூட்டத்தில் செய்த கலகம் காரணமானது. கூட்டம் தொடங்கிய போதே காவி உடையணிந்த இந்து மக்கள் கட்சியினர் ஸீட் பிடித்து அமர்ந்திருந்தனர். அ.மார்க்ஸ் அறிமுகப் பேச்சை முடித்த உடனேயே, இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தன் கேள்விக்கு பதில் அளித்த பிறகுதான் கூட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பலர் பதில் சொல்ல, கூச்சலும் குழப்பமும் உருவாகியது. குழப்பம் பேரலைபோல எப்போது உச்சத்தை அடைந்தது, அமைதி வருவது போன்ற தோற்றத்தை எப்போது அடைந்தது என்று சரியாக சொல்ல முடியாத அளவில் குழப்பம். பிறகு ஒரு வழியாக அமைதியாகி, ராஜன் குறை பேசி முடிக்க, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று மீண்டும் இந்து மக்கள் கட்சி தொண்டர் குரல் எழுப்பினார். மீண்டும் பலர் கத்த, கூச்சலாக குழப்பம். சுமார் அரைமணி நேரம் சண்டைக்கு பிறகு, வேறு வழிதெரியாமல் பேசி விட்டு போகட்டும் என்று, வந்திருந்த இந்து மக்கள் கட்சியினரின் பிரதிநிதியாக பொறுப்பேற்ற ஒருவரிடம் கேள்வி கேட்க மைக் அளிக்கப்பட்டது. ஒரு கேள்வி கேட்கப் போவதாக துவங்கியவர் உரை ஒன்றை நீட்டி முழக்கி பேசத் துவங்கினார். கிட்டத்தட்ட மேடையை கைப்பற்றி (அவரே இடையிடையே கூட்டத்தையும் அமைதிப்படுத்தி), அறிமுகம், தோழமை அமைப்புக்கு நன்றி எல்லாம் சொல்லிய பின்னர் வரிசையாக பாயிண்டுகளை அடுக்கினார். அதில் ஒரு பாயிண்ட் லீனா மீதான ஆபாசமான ஒரு கேள்வியாக மாற, லீனா பதிலுக்கு அடிப்பதற்காக மேடையை நோக்கி செல்ல மீண்டும் ரசாபாசமாகியது. அடுத்த அரைமணி நேரம் பல விதமான குழப்பம். நீண்ட ரசாபாசத்திற்கு பிறகு அவர்களை வெளியேறச் சொல்லி மைக்கில் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட பின்பு, வரிசையாக பல கோஷங்களை எழுப்பி, அப்போது கோஷம் காற்றில் சீராக பரவ விடாமல் மற்றவர்கள் கூச்சலிட்டதால் மீண்டும் மீண்டும் எழுப்பி, வாசலிலும் ஒருமுறை எழுப்பிய பின்பு சென்றனர். அதன் பிறகு கலகம் செய்த இந்து மக்கள் கட்சியினரை அனைவரும் தங்கள் உரையில் கண்டித்தனர். அதன் பிண்ணணிகளை ஆரய்ந்தனர். இது குஜராத், மும்பை, கர்நாடகாவில் நடந்த பாசிச நிகழ்வின் தொடர்சி என்றும் பலர் குறிப்பிட்டனர். இவ்வாறாக 'எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகளா'க உண்மையிலேயே மாறியது; நான் தமாசாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகளும் தீவிர பரிமாணத்தை அடைந்தது.

கூட்ட அழைப்பிதழில் 'இணயத்திலும் பரவியுள்ள தாக்குதல்', மற்றும் 'விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்படிருந்தது. இணையத்தை வாசிக்கவே வாசிக்காத ஒருவருக்கு, இணையத்தில் நடந்த தாக்குதல்களையும் இந்து மக்கள் கட்சிதான் செய்ததாக ஒரு வாசிப்பு வரக்கூடும். இணையத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள இணையர்களின் வாசிப்பில் , அந்த இணையரல்லாதவர்களின் பிரதி சார்ந்த உண்மை எப்படி உண்மையில்லையோ, அது போல கூட்டத்திற்கு செல்லாதவர்களுக்கு நான் மேலே இதுவரை 'இந்து மக்கள் கட்சி' என்று பலமுறை எழுதியது இந்து மக்கள் கட்சியை இந்த பதிவில் குறிப்பதாக வரக்கூடும் வாசிப்பு சார்ந்த உண்மை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிப்புண்மையாக பிரசன்னமாக வாய்ப்பில்லை. அந்த வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், இந்த பதிவின் மூலம் நடந்ததை அறிய விழைபவர்களுக்கு 'இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள்' என்பது இந்து மக்கள் கட்சியை குறிக்கவில்லை என்று சொல்வது அவர்களின் பன்முக வாசிப்பை தடை செய்யுமாயினும், வேறு வழியில்லாமல் யதார்த்தவாதிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து பின்னறிவிப்பாக அவ்வாறாகவே இங்கே எழுத வேண்டியுள்ளது. அது எப்படியிருப்பினும் இந்து மக்கள் கட்சியின் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வினவு தளத்தில் லீனா பற்றி எழுதப்பட்ட பதிவுகளை நான் ஏற்கனவே கண்டித்துவிட்டேன். எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு பதிவாக கண்டனத்தை நான் தான் முன்வைத்தேன் என்று நினைக்கிறேன். ஒருமுறை பிரச்சனை குறித்து எழுதிய பின்பு மீண்டும் மீண்டும் பதிவுகள் எழுதவும், பிரச்சனைகளை கிளப்பவும் தோழர்களுக்கு தீவிர பிரச்சனை ஏதேனும் இருக்கலாம். எனக்கு ஒரு முறை கண்டித்ததே என் நிலைபாட்டை அறிவிக்க போதும் என்பதாலும், இந்த பதிவில் இந்து மக்கள் கட்சிக்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:


Post a Comment

15 Comments:

Blogger ஹைப்பர்லிங்க் சிந்தனைகள் said...

அப்படியே மாவோயிஸ்ட் ஆதரவிற்காக அருந்ததி ராயை உள்ளே போட்டால் கண்டிக்கவும் வாழ்த்துகிறேன்....
(மொத்தமா சேர்த்தா ஒரு லாரி கூடத் தேறாத கூட்டம் தானே)

4/16/2010 5:16 AM  
Blogger ROSAVASANTH said...

//மொத்தமா சேர்த்தா ஒரு லாரி கூடத் தேறாத கூட்டம் தானே//

யாரை கேட்கிறீர்கள் (அல்லது எல்லோரையும் சேர்த்தா) என்று புரியவில்லை.

4/16/2010 10:29 AM  
Blogger Athisha said...

நல்ல 'வாசிப்பு' அனுபவம்..

4/16/2010 8:56 PM  
Anonymous Anonymous said...

சமூகப்புரட்சி செய்பவர்கள் கேள்விக்கெல்லாம் பயந்தால் எப்புடி ?
வந்து கேள்வி கேட்டதே தப்புன்னா அவனவன் மேடையேறி அடிக்கிறான்..அவனல்லாம் கண்டிக்கிறதா இல்லை கீழே தொங்குவதை துண்டிக்கிறதா ?

4/16/2010 9:51 PM  
Blogger புறட்சி தோலன் said...

அருமையான பதிவுக்கு நன்றி வசந்த்...

இந்து மக்கள் கட்சியினர் 40 பேர் கூட்டத்திற்கு சென்றதாக குறிப்பிட்டிருக்கிறார்களே. 40 பேர் புள்ளிவிவரத்தை பார்ததும் ’அலிபாபாவும் 40 -----களும்’ தான் நிணைவுக்கு வந்தது..

கூட்டத்திற்கு சென்றதன் மூலம் மூன்று புதிய புரட்சிகரமான (தூத்தேறி) விசயங்களை அறிந்ததுக் கொண்டேன்..
1. புறட்சிகரமாக கத்தவும் ..
2. புறட்சிகரமாக கைதட்டவும்.. அதையெல்லாம் விஞ்சிய
3.புறட்சிகரமாக ’விசில்’ அடிக்கவும்..

அடுத்து மேற்படி கட்சிக்கும் - ராம்சேனாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. சட்டையின் நிறத்தை தவிர.. நேற்று நடத்தப்பட்ட ’அஹிம்சை’ புரட்சியில் அவர்களின் சட்டையின் உண்மையான நிறம் என்னெவென்று தெரிந்துவிட்டது..

நிகழ்வைப்பற்றி மேற்கண்ட புறட்சிகர தோலர்களின் ‘100 % அக்மார்க்’ உண்மையை (?) கூறும் பின்னூட்டத்தை படித்தேன்..

கோயாபல்ஸ் மட்டும் நிகழ்ச்சியில் இவர்கள் அடித்த கூத்தை பார்த்துவிட்டு – இவர்களின் பின்னூட்டத்தை படித்திருந்தால் நாண்டுகிட்டு செத்திருப்பான்..

பொய்-புரட்டு பேசுவதில் ’இந்து மக்கள் கட்சியிடம் – சங்பரிவாரே பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்..

4/17/2010 12:54 AM  
Blogger ROSAVASANTH said...

http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_17.html உண்மைத்தமிழனின் பதிவு அவரால் முடிந்தவரையில் நேர்மையாக நடந்ததை பதிவு செய்துள்ளதாக கருதுகிறேன்.

4/17/2010 6:30 AM  
Blogger மிதக்கும்வெளி said...

உண்மைத்தமிழன் பதிவில் அ.மார்க்ஸ்தான் போலீஸை ஏற்பாடு செய்தார் என்பதைத் தவிர பெருமளவு சரியாக இருந்ததாக நினைவு. அன்றைய கூட்டத்தில் தோழர்கள் புரட்சி செய்ததாகக் கருதிப் பெருமிதம் செய்வார்களானால் இந்தியாவில் புரட்சி வர வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்ள விரும்புகிறேன். மற்றபடி உங்கள் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் ஆங்காங்கே தூள் பரக்கின்றன. பார்க்கவும்.

4/17/2010 9:47 PM  
Blogger ROSAVASANTH said...

//மற்றபடி உங்கள் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் ஆங்காங்கே தூள் பரக்கின்றன. பார்க்கவும்.//

தகவலுக்கு மிகவும் நன்றி. இதை பார்ப்பது, மறுப்பது எல்லாம் வெட்டை வேலை. இதில் நேரம் செலவழிக்க விரும்பவில்லை. பதிவில் ஒரு அறிப்பு மட்டும் தரலாமா என்று யோசிக்கிறேன்.

4/17/2010 10:07 PM  
Blogger ஏழர said...

@@அன்றைய கூட்டத்தில் தோழர்கள் புரட்சி செய்ததாகக் கருதிப் பெருமிதம் செய்வார்களானால் இந்தியாவில் புரட்சி வர வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்ள விரும்புகிறேன். @@

ஜென்னி-மார்க்ஸ் படத்தை போட்டிருப்பவருக்கு, யோனி மயிர் உபரியாவது கம்மீனிசத்துக்கு எதிரான கவிதை புரட்சியாகும் போது.. அக்கவிதையின் காப்பு உரிமைக்காக கூடும் கம்யூனிச எதிர்புரட்சி கூட்டத்துக்கு ஆப்பு அடிக்கும் ஒரு புரட்சிகர நிகழ்வுக்காக பெருமிதப்படுவதில் என்ன தவறு.
கூட்டுக்கலவி போன்ற பாலியல் புரட்சிதான் இலக்கிய உள்ளங்களுக்கு பெருமிதத்தை வ்ழங்கும் போலும்.

4/18/2010 9:44 PM  
Blogger ROSAVASANTH said...

'ஏழரய'ின் இன்னொரு பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை 'யாரும்' என்பதாக மாற்றப்பட்டு கீழே இடப்படுகிறது.

ரோசா,,

கம்யூனிசத்தையும் கம்யூனிச தலைவர்களையும் கொச்சைப்படுத்தி யாரும் எழுதலாம், கேட்க நாதியில்லை என்ற "MYTH"ஐ தோழர்களின் இந்த முயற்சி உடைத்திருக்கிறது.. இனி இந்த இலக்கியவாத அட்டைக்கத்தி வீரர்கள் இது போன்று உளருவதற்கு முன்னர் நிச்சயம் இரண்டு முறை யோசிப்பார்கள்.... அதுதான் இந்த கூட்டத்தின் சிறப்பு

4/18/2010 10:13 PM  
Blogger ROSAVASANTH said...

அன்பர் 'ஏழர' எழுதிய பின்னூட்டத்தில் 'நாய்' என்கிற வார்த்தையைத்தான் எடிட் செய்திருந்தேன். அந்த வார்த்தையுடன் கூடிய பின்னூட்டத்தை உண்மைத்தமிழனின் பதிவில் பார்க்க இயலும் என்கிற மேற்படி தகவலை அவர் தருகிறார். மேலே உள்ள பின்னூட்டத்துடன், 'நாய்' என்கிற வார்த்தையையும் சேர்த்து வாசிக்க விரும்புபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிற்கு சென்று வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

4/18/2010 11:01 PM  
Blogger " சித் || sid " said...

pl watch this video

http://www.youtube.com/user/ndtvhindu#p/u/7/bNtD1isu2XU

4/19/2010 6:38 PM  
Blogger ROSAVASANTH said...

விடியோ குறித்து இரண்டு அவதானிப்புகள்.

1. அ.மார்க்ஸ் பேசியதில் சில குறிப்பிட்டவைகளுக்கு மட்டும் சப்டைட்டில் போட்டு, போடாத சிலதை கவனிக்க வேண்டும்.

2. லீனா மார்க்ஸ், லெனின் போன்ற பெயர்களை உருவகமாக (metaphor) பயன்படுத்தியுள்ளதாக சொன்னதை கேட்டு ரொம்பவே குழம்பிவிட்டேன். இதுவரை யோனி, புணர்தல் போன்ற வார்த்தைகளைத்தான் உருவகம் என்று நினைத்திருந்தேன்.

4/19/2010 7:35 PM  
Blogger ? said...

/...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

4/21/2010 7:37 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள ?,

லீனா அத்தகைய அனுபங்களின் அல்லது கேள்விப்ட்டதின் பாதிப்பில் கவிதை எழுதியிருப்பதாக சொன்னால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான், அதில் மேலே கேள்வி கேட்க எதுவுமில்லை. கவிதையின் மூலம் எனக்கு இந்த வகை தீவிரமான வாசிப்பனுபவம் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை. கிடைத்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன். மற்றபடி கவிதை குறித்து ஓரிரு வரிகளில் சொன்ன கருத்துக்கு மேல் இந்த கவிதை குறித்து விவாதிக்க எந்த முக்கியத்துவமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஜமாலன் முன்பு எழுதி லீனா பதிவில் இட்ட கட்டுரை, இப்போது பெருந்தேவியும் ஜமாலனும் எழுதிய கட்டுரை, லீனவின் எதிர்வினை பதில்கள் இதையெல்லாம் படித்தால்தான் எனக்கு கருத்து என்று ஏதாவது தோன்ற வாய்புண்டு. இன்னும் படிக்கவில்லை.

4/21/2010 8:16 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter